திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
பல நேரங்களில் தனிமையில் இருக்கும்பொழுது நாம் பயணித்த சில பயணங்களை நினைவுகூர்ந்து அதை அசை போட்டுக் கொண்டிருப்போம்.
பெரும்பாலும் எல்லா பயணமும் நம்மால் மறக்க முடியாத பயணமாக அமையாது. வெகுசில பயணமே நம் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
குறிப்பாகச் சொல்லப்போனால் சென்ற ஆண்டு பலருக்குப் பயணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற பிற மாநிலத்தவர்கள், இருசக்கர வாகனத்திலேயே பல நூறு மைல்கள் பயணித்த நபர்களையும் நம் செய்திகள் கண்டிருப்போம்.
இந்த புத்தகத்தில் முழுக்க முழுக்க வரலாறு பூர்வமான சில பயணங்கள் பற்றி எஸ்.ரா அவர்கள் மிகச் சுருக்கமாக இந்த கட்டுரையில் கூறியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் வரும் பயணங்கள் அனைத்தும் உலகம் என்றும் மறக்க முடியாத அல்லது நினைவுகூர வேண்டிய பயணங்களாகவே இதில் இருக்கின்றது.
பெரும்பாலும் வரலாறு என்பது அரசர்கள் மன்னர்களைப் பற்றியே பிரதானமாக இருக்கும். அதில் என்றும் சாமானிய மக்களைப் பற்றிய பதிவு பெரும்பாலும் மறைக்கப்பட்டிருக்கும் அல்லது தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் பிற நாட்டு மக்களின் நெடுந்தூர பயணத்தில் இந்திய மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், பயன்படுத்திய பொருட்கள், உணவு வகைகள் என நாம் அறிந்திராத பல தகவல்கள் அறிந்திட முடியும்.
மார்க்கோ போலோவின் நெடும் பயணத்தில் தொடங்கி, இபின் பாதுதாவின் இந்தியா, கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுப்பு பற்றி நாம் அறிந்திராத சில குறிப்புகளைக் கூறும் அல்பெரூனி, வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை, வட துருவத்துக்குச் சென்ற ராபர்ட் பியரின், யுவான் சுவாங், எவரெஸ்ட்டில் சிகரம் தொட்ட டென்சிங், அமைதிக்காக அணு ஆயுதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக சதீஷ்குமார் அவர்களின் நடைப் பயணம், உலகம் முழுவதும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சாலையில் வரும் வாகனத்தின் உதவிகளை நம்பி உலகைச் சுற்றிய லுடேவிக் ஹப்ளர். என்று அனைவரும் கண்டு வியந்து போகக்கூடிய பயணங்கள் இவை.
இவையெல்லாம் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளி வந்துள்ளன. என்னைப் போன்ற பலருக்கு இத்தனை புத்தகம் ஆங்கிலத்தில் படிப்பது என்பது சற்று கடினமானது.
பயணத்தை விரும்பும் வாசகர்கள் தாராளமாக இந்த கோடுகள் இல்லாத வரைபடம் புத்தகத்தை வாசிக்கலாம். உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக அமையும்.
ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரை தொகுப்பு தேசாந்திரி பதிப்பகம் 90 பக்கங்கள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ரா வின் திருச்சி புத்தக கண்காட்சி சிறப்பு உரையான வரலாற்றின் மௌனம் என்ற உரையை கேட்டுமுடித்து எதற்சயாக கையில் எடுத்த புத்தகம் இது. அவரின் உரைக்கும் இந்த புத்தகத்திற்கும் அவ்வளவு ஒற்றுமை உள்ளது. எஸ் ராவின் புத்தகம் எப்பொழுதுமே வாசிக்க மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல எல்லா வாசகனுக்கும் அவ்வாறே என்று எண்ணுகிறேன். ஏனெனில், எஸ் ராவின் புத்தகம் வாசிக்கும் பொழுது அவரே நம் அருகில் அமர்ந்து அந்த புத்தகத்தை வாசித்து காட்டுவது போலவே நமக்கு தோன்றும்.மேலும் இது நாள் வரை அவரை ஒரு எழுத்தாளனாக நான் பார்த்ததே கிடையாது, என் வயதான நண்பனோ, என் மாமாவோ, என் நெருங்கிய ஆசிரியரோ என் அருகில் அமர்ந்து உரையாடுவது போல் தான் எனக்கு தோன்றும். அப்படி வரலாற்றின் மௌனத்தை கலைக்கப்பட்ட பல நூல்களை பற்றியும் அவரது அனுபவங்களையும் கலந்து விவரிப்பதே இந்த நூல்.
கோடுகள் இல்லாத வரைபடம்- அது எப்படி கொடுகளே இல்லாமல் ஒரு வரைபடம் இருக்க முடியும்? துல்லியமான வரைபடம் காட்டும் வழியில் இப்பொழுது செல்வதற்கே நாம் தடுமாறுகிறோம்.ஆனால் வரலாற்றில் பலர் உலக வரைபடமே இல்லாமல், தனக்கென தானே தடம் பதித்து செல்லும் நீர் போல தனக்கென ஒரு வரைபடம் உருவாக்கி அதில் பற்பல தடைகளை தாண்டி தான் நினைத்த இடம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளும், விடா முயற்சியும் மட்டுமே துணை கொண்டு சாத்திய படுத்திய பல வியத்தகு பயணங்கள் பற்றிய குறிப்புகளே இந்த புத்தகம்.
வரலாறு ஒரு மாயகண்ணாடி போல் தான். அது ஒவ்வொருவர் பார்வைக்கும் வேறு வேறு விதமாக தோற்றமும்,புரிதலும் அளிக்கும். வென்றவருக்கும், வேந்தருக்கும் மட்டுமே இடம் கொடுத்த வரலாறு ஏனோ முயற்சித்தவரையும், முயற்ச்சிக்கு உதவியோரையும் உடன் சேர்க்கவில்லை என்று வெதும்பியது தீர அந்த முயற்சிக்கு விதிட்டோர் முதல், உதவிய அனைவரையும் தோளில் தூக்கி சுமந்த வரலாற்று பயண நூல்களை மட்டுமே எஸ் ரா இதில் குறிப்பிடுகிறார்.குறிப்பாக வாஸ்கோடகாமா இந்தியா வந்து சேர அவருக்கு தேவைப்பட்டது மூன்று கப்பல்கள்,300 மாலுமிகள் அதில் 200 அடிமைகள் வட துருவத்தில் முதலில் கால்பதிக்க ராபர்ட் பியரி க்கு தேவைப்பட்டது 50 எஸ்கிமொக்களும், வேட்டை பணி நாய்களும் கால்நடையால் உலகை சுற்றி வர சதீஷ் குமாருக்கு தேவைப்பட்டது பெடேரென்ட் ரஸ்ஸல் இன் உந்துதலும், பல ஆயிரம் மக்களின் அன்பும் அரவணைப்பும். உலகின் உயரமான எவெரெஸ்ட் சிகரத்தை கடக்க எட்மண்ட் ஹில்லாரி க்கும் டென்சிங் நார்கே க்கும் தேவைப்பட்டது பல நூறு நேபாளி ஷெர்பா க்களின் ஒத்துழைப்பு வேறு ஒருவரிடம் லிப்ட் கேட்டு மட்டுமே இந்த உலகை சுற்றி வந்த ludovic hubler க்கு உதவியது ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும், பயணிகளும் தான்.
இப்படி ஒரு வரலாறும், ஒரு சரித்திர நிகழ்வும், ஒரு சாதனையும், ஒரு பயணமும் என்பது ஒரு தனி மனித உழைப்பு அன்று அது எப்பொழுதுமே ஒரு கூட்டு முயற்சி. ஆனால் இதனை பல இடங்களில் வரலாற்றில் மறைத்து ஒரு தனி மனித சாதனையாக நமக்கு சிறு வயது முதல் புகட்டி வந்துள்ளனர். அதனை அடியோடு மாற்றி எழுதியிருக்கின்றனர் இந்த புத்தகத்தில் வரும் வரலாற்று யாத்ரீகர்கள். பயணம்- மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை பயணத்தால் மட்டுமே பல மாற்றங்களையும், பல முன்னேற்றங்களையும் அடைந்துள்ளான். பயணம் போகும் நோக்கமும், முறையும் சற்று மாறியிருக்குமே ஒழிய பயணம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பல பயணங்கள் திட்டமிட்டு தொடங்கியவை அல்ல கண பொழுதில் எண்ணம் தோன்றி, பணம் செலவில்லாமல், பெரும் சுமையில்லாமல் இந்த உலகத்தில் உள்ள மக்களை மட்டுமே நம்பி தொடங்கிய பயணங்களே.அவர்கள் யாவரும் தங்��ள் அனுபவத்தில் கூறியது ஒன்றே ஒன்றுதான் நாம் திரையிலும், செய்திகளிலும் காணும் மக்கள் வேறு உண்மையில் உலகில் அன்பும், அரவணைப்பும் அவ்வளவு கொட்டி கிடக்கிறது. வேரூன்றி நிற்கும் மரம் கூட தன் விதைகளையும், இலைகளையும் காற்றின் மூலமோ, பறவைகள் மூலமோ கடத்தி இந்த உலகத்தில் பயணிக்க செய்கிறது. ஆனால் ஓடுவதற்கு கால்கள் கொண்ட மனிதர்களாகிய நாமோ அண்டை நாட்டை கூட அடுத்த கிரகம் போல் பாவித்து நம் வாழ்க்கையை ஒரு பாறையை போல் ஒரே இடத்தில் வீழ்ந்து கழிக்கிறோம்.
" உனக்கு எத்தனை மனிதர்களைத் தெரியுமோ அத்தனை கவிதைகளையும் தெரியும்" என்பது. இக்கவிதையில் அவர் குறிப்பிடும் கவிதைகள் என்பன சாதாரண கவிதைகள் இல்லை. ஒவ்வோர் வாழும் மனிதனும் சுமந்து திரிகின்ற அத்தனை கதைகளை, துயரங்களை, சுகங்களை, சங்கடங்களை, வெகுள்ச்சிகளை, கண்ணீரை, தீரா உறுதிப்பாடுகளை, மன ஆழ்இருக்கங்களை, மென்னுணர்வுகளை இவையெல்லாம் சேர்த்துதான் கவிதை என பொருட்பட ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டார்.
சாதாரணமாக எளிய மனிதர்களின் கதையை விட சரித்திரம் மிகவும் ஒரு இறுக்கமான மனிதர்களின் பெயர்களை நீண்ட நாள் தாங்கிக்கொள்ளும் இயல்பிலேயே இருந்து வந்துள்ளது. சரித்திரம் அம்மனிதர்களின் மூர்க்கத்தனங்களையும், கொண்ட காரியத்தின் காட்டிய அதீத செயல்பாடுகளின் விளைவுகளையும், ஒரு ஆர்ப்பரிக்கும் கடலின் அலையை கலங்கரை விளக்கம் பார்த்துக்கொண்டு இருப்பது போல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த நூலில் ஒரு பத்து நாற்றாண்டுகளின் புரிந்து கொள்ள இயலாத சில பயணப்பாட்டாளர்களின் கதைகளை எஸ்ரா கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இக்கதைகள் எதுவும் கூறக்கேட்டதும், புனைவுகளுமில்லை. முழுக்க முழுக்க வரலாற்று நூல்களின் தொகுப்பிலிருத்து எடுத்து அளிக்கிறார்.
நாமறிந்த வரலாறு என்பது வரலாற்றின் வாயிலாக எல்லைகளில் கால் வைத்த வெகு சிலரைத்தான். இன்றைய தொழில்நுட்ப காலம் அன்றி ஆயிரம் மைல்களின் கடல்வழிப்பயணங்களின் எத்தனையோ கப்பல்கள் திக்குத்திசையின்றி கடலடியில் புதையுண்டு இருக்கின்றன. இக்கப்பல்களில் பயணித்த ஒரு சில ஆயிர மனிதர்களின் நினைவுகளை சுமந்து, இக்கடல் ஒரு மென் காற்றை கரைக்கு மெளனமாக அளித்துக் கொண்டிருக்கிறது. மார்க்கோ போலோ, இபின் பாதுதா, வாஸ்கோடகாமா, அல்பெர்க்யூ என சில யாத்திரிகர்களின் பயணங்களும், அவற்றின் சவால்களையும் இந்நூல் விவரிக்கிறது.
"ஏன் இந்நூலை வாசிக்க வேண்டும்? " என்ற கேள்விக்கு பதில் எழுத வேண்டுமானால், இந்த வரலாறு தாங்கியுள்ள நேரடி, மறைமுக விவரங்கள், வேடிக்கைகள், மனித மனங்களின் உறுதிப்பாடு, அவர்களின் குறிப்பேடுகள், அவர்களின் சமுதாய அரசியல் சூழல் இவைகள் குறித்து எண்ணற்ற எண்ணங்களை ஆய்வும் மீளாய்வும் செய்ய என எழுதிக்கொள்ளலாம்.
5600 மைல்கள் கடந்து வந்த மார்க்கோ போலோ அவரின் பயணப்பாட்டாளர்களின் கதைகள் குறித்தும் பயண நினைவுகள் குறித்தும், தனது நூல்களில் விவரிக்கிறார். அந்நூல் "தங்கம் தேடும் எறும்புகள்", யானை உண்ணும் மனிதர்கள்" என அதீக கற்பனைகளை கொண்டிருந்தாலும் ஒரு சலிப்பற்ற தன் வாழ்நாளின் அரைபாதிக்கு மேல் பயணம் செய்த ஒரு யாத்திரிகனின் அனுபவங்களை உங்களுக்கு அளிக்கிறது. தனது மார்க்கத்தை பரப்ப 44 தேசங்களுக்கு பயணப்பட்ட "பதூதா" தான் கடந்த தேசங்களின் மக்கள்தன் வாழ்வியல் முறைகளை தனது குறிப்புகளின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார். பதூதாவின் குறிப்புகள் 14ஆம் நூற்றாண்டு இந்தியாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அளவு துல்லியமான முறையில் கோர்க்கப்பட்டு இருந்திருக்கின்றது. அவரது குறிப்புகள், இந்தியாவில் வெற்றிலைகளின் செல்வாக்கு போன்ற சின்னச்சின்ன விஷயள் தொடங்கி துக்ளக் மன்னரின் ஈவு இரக்கம் அற்ற விசித்திரமான கடுமையான தண்டனைகள் ஆகியவற்றை தாங்கியுள்ளன.
"இந்திய கிழக்கிந்திய கம்பெனி" வருகையே இந்திய அடிமைப்படுத்துதலின் முதற்புள்ளி. அது குறித்த குறிப்பேடுகள் அல்பெர்க்யூ கைகளால் எழுதப்பட்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் என வாசனைத் திரவியங்கள் தேடிய பயணத்தில் இந்தியா எவ்வாறு கண்டெடுக்கப்பட்டது குறித்த குறிப்புகள் சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து நினைவு கூறப்படுகிறது. இக்கடலோடியின் வாழ்வு கடைசியில் அதே கடலின் அலைகளினால் தான் முடித்து வைக்கப்படது. இவரது குறிப்புகளால் நாம் 15ஆம் நூற்றாண்டு இந்தியாவை கற்பனைக்கு கொண்டு வர இயல்கின்றது.
உலகின் வடதுருவங்களின் 300 வருட மனித இனத்தின் பயணங்களின் இறுதி முடிவை எழுதிய "ராபர்ட் பியர்", புத்த வாழ்வியல் முறைகள் குறித்த எண்ணற்ற குறிப்புகளையும், தர்க்க சாஸ்திரங்களையும் நமக்கு அளித்த, சீனப் பயணி "யுவான் சுவாங்", எட்டாயிரம் மைல் தூரத்தை உலகம் முழுவதும் தனது வெற்றுக் கால்களில் நடந்தே பயணப்பட்ட ராஜஸ்தான் "சதீஸ்குமார்" அவர் வெவ்வேறு தேசங்களில் சந்தித்த வெவ்வேறு மனிதர்கள் அவர்களின் இன்னல்கள் என பல்லவேறு வரலாற்று பக்கங்கள் இந்நூலின் வழியே ராமகிருஷ்ணன் நம்மில் கடத்துகிறார். மேலும் இந்நூலின் மூல நூல்கள், அதாவது இவ்வகையான பயணப்பாட்டாளர்களின் குறிப்புகளையும் இந்நூலிலேயே விட்டுச்சென்று இருக்கிறார். இவற்றைக் கொண்டு சரித்திரம் தனது அணையா கதைகளுக்கு உரமிட்டு மூண்டெழுந்து, மொளனங்களினால் நிரப்பிக்கொள்கிறது.
எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.பயணங்கள் வரலாற்றை மாற்றியதை விவரிக்கின்ற நூல்.அதை தாண்டி பயணத்தின் தாக்கம் பற்றிய புரிதல் தரும் நூல்.இந்த நூல் படித்த அனைவரும் பயணம் செல்ல ஆசை வரும்.வரலாற்றை மாற்றி பார்க்க வைக்கும்.வரலாறு அரண்மையில் மட்டும் இல்லை அடுப்படியில் உள்ள மிளகுகளிலும் உள்ளது என்கிறது புத்தகம்.பிடித்த அத்தியாங்கள்:நடையால் வென்ற உலகம் & லுடேவிக் ஹப்ளர் .
தமிழில் எஸ்.ரா அவர்கள் போல பயணங்களை இவளோ அழகாகவும் ஆழமாகவும் உணர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் குறைவு. இந்த உலகை மாற்றிய பயணங்கள் மிக நேர்த்தியாக அவர்களுடனே பயணிக்கும் அனுபவத்தை எழுத்தாளர் வழங்குகிறார்.
எஸ். ரா வின் எழுத்துக்களைக் கொண்டாடும் பெருங்கூட்டம் உள்ளது. அவரை படித்தவர்கள் அவருக்கு பயணம் எவ்வளவு பிடிக்கும், பயணத்தால் எவ்வாறு ஈர்க்கப்படுகிறார், அவரிடம் கதைகள் எவ்வாறு வந்தடைகின்றன, அவை எப்படி அவருடைய எழுத்துக்களாக மாறுகின்றன என்பதை அறிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பயணப்பிரியரின் முன்னோடிகளைப் பற்றி அவர் எழுதியுள்ள நூல் தான் கோடுகள் இல்லாத வரைபடம்.
இன்று GPS கொண்டு நமது பயணங்களில் தத்தளிக்கும் நாம் இங்கு. ஆனால் அக்காலத்தில் சரியான வரைபடம் இல்லாமல் வழிகாட்டுதல் இல்லாமல் கடல் கடந்து நாடு கடந்து சரித்திரத்தையே புரட்டிப் போடும் சாகசப் பயணங்களை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களைப் பற்றிய ஒரு பயண நூல் இது.