அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
ஆ.சிவசுப்பிரமணியன்.(பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு, மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன.
நாட்டார் தெய்வங்கள் அதாவது நாட்டுப்புற தெய்வங்கள் என்று சற்று இளக்காரமாக குறிப்பிடப்படும் சிறு தெய்வங்களின் உண்மை வரலாறு இந்த சிறிய நூல். பொதுவாக சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடப்படும் இந்த தெய்வங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதம் அபகரிப்பதை நாம் காண முடிகிறது. இந்த தெய்வங்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லுவதும், படுத்த நிலையில் இருக்கும் தெய்வங்களை நின்ற வடிவத்திற்கு மாற்றுவதும், இந்த நாட்டார் தெய்வங்களின் கதைகளை இந்து மத தொன்ம கதையோடு ஒப்பிட்டு ஒருவித இந்துமத தொன்மத்தை அளித்து இத்தெய்வங்களை இந்து மதத்தோடு சேர்க்கப்படுகின்றன. கோவில் நவ கிரகங்கள் அமைப்பது, பலிகளை நிருத்துவது இதைப் போன்ற நிகழ்வு இந்த தெய்வங்கள் குறித்தான உண்மை வரலாற்றை அறிய முடியாதவையாக ஆக்குகிறது , மேலும் சமஸ்கிருத மந்திரங்களை அனுமதிப்பதால் தமிழ் மந்திரங்களுக்கு ஏற்ற மொழி அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொண்டு விட்டதாக அமைந்து விடுகிறது. நாட்டுப்புற தெய்வங்களுக்கு பெரிய சக்தி கிடையாது என்ற ஒரு இந்து மத கருத்தும் நிலவுகிறது. இவ்வாறாக நாட்டுப்புற தெய்வங்கள் இன்று அழிக்கப்பட்டு வருகிறது.
இந்த நூலில் இரண்டு வகையான நாட்டார் தெய்வங்களை குறிப்பிடுகிறார். ஒன்று ஆணவ கொலை மூலம் கொல்லப்பட்டவர்கள் பின்பு தெய்வமாக வழிபடும் வகை. இரண்டு பெருமிதங்களுக்காக கொலை உண்டவர்கள் பின்பு தெய்வமாக வணங்கப்படுவது. ஆணவக் கொலை என்பது ஜாதி மீறிய திருமணம், மரபை மீறுவது, ஒழுக்க விதிகளை மீறுவது இன்னும் பலவற்றிற்காக செய்யப்படும் கொலை. பெருமித கொலைகள் என்பது அந்த கால அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் ஒரு பெண்ணை சூறையாடுவதற்கு எதிராக நிகழும் கொலை. அந்த சூறையாடலையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கொலையுண்டவர்கள், குடும்ப நலனுக்காக கொலை செய்யப்படுவது இன்னும் பல. ( விரிவாக அறிய நூலை வாசிக்கவும்)
பொதுவாக கொலை செய்தவர்கள் தான் குற்ற உணர்ச்சியால் கொலையுண்டவர்களை கடவுளாக ஆக்குகிறார்கள் அல்லது இறந்தவர்களின் ஆவி பழிவாங்குகிறது என்ற காரணத்திற்காக கடவுளாக ஆக்குகிறார்கள். அல்லது இறந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தெய்வமாகிறாராகள்.
உண்மையில் இந்த நூல் நாட்டார் தெய்வங்களின் வரலாறு என்றாலும் நமது சமூகம் எவ்வளவு கொடூரமான பிக்கோக்கு தன்மையில் இருந்துள்ளது என்பதையும் மிகத் தெளிவாக காட்டுகிறது. இன்றும் கூட ஆணவ கொலைகளும் பெருமித கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த நூல் ஒரு கனத்த மனவேதனையை இறந்தவர்களில் பொருட்டு எனக்கு உண்டாக்கியது.
பண்டைய தமிழ் சமூகத்தில் போர்களத்தில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் அமைத்து வழிபடும் முறை என்று ஒன்று இருந்தது. அதே தமிழ் சமூகத்தில் ஆணவம் , அதிகாரம் , பெருமிதம் , பொருள் வளம் , சாதி, பாலினம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் கொலையுண்டு தெய்வமாக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் கதை , தோற்றம் , வழிபாடு முறை ஆகியவைப்பற்றி விரிவாக கூறும் நூல்தான் ஆ.சிவசுப்பிரமணியன் இயற்றிய "ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்" என்னும் இந்நூல்.
அகால மரணம் அடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு .இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையை சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவ கொலைக்கு பின்னால் பணம் ,அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றி குடும்ப பெருமிதமும் கொலைகளுக்கு துண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்கு பின் தெய்வமாக்கப்பட்ட 14 பேரின் கதைகள் தான் இந்த நூல். இதை புலனாய்வு அறிக்கை என்று கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிப்பாடு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாக பதிவு செய்துள்ளார்.
கொலையுண்டவர்கள் ஆவி ஆகி தங்களை பழிவாங்குவார்கள் என மக்கள் நம்பினர். ஆவிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் முயற்சியாக கல்நட்டியோ, பீடம் அமைத்தோ, சிலை வடித்தோ அவற்றை தெய்வமாக வழிபடுவது தமிழர் பண்பாட்டு வாழ்வியல் தொன்மையான வழக்கமாகும்.
நடுக்கல் வழிபாடு தொடங்கி கண்ணகி சிலை என இலக்கண இலக்கிய சான்றுகள் பல உள்ளன. நாட்டார் தெய்வ வழிபாட்டில் கொலை செய்தவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அவர்கள்தான் உயிருக்கு அஞ்சி தாங்கள் கொலை செய்தவர்களுக்கு கோயில் எழுப்பி வழிபடுகின்றனர். இதனை இன்றளவும் அவர்களின் மரபினர் பின்பற்றி வருகின்றனர். தெய்வ வழிபாட்டு முறை, படையல் போன்ற அனைத்தும் கொலை செய்யப்பட்டவர்களின் விருப்பமான உணவு போன்றவையாகவும் பலியிடும் முறை, கோயில், சிலை கட்டமைப்பு போன்றவை கொலை செய்யப்பட்டவர்கள் இறந்த விதத்தையும் நினைவு கூறும் எச்சங்களாக திகழ்கிறது.
எடுத்துக்காட்டாக தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள தெய்வசெயல்புரம் என்ற கிராமத்தின் தென்புறம் உள்ள புதுப்பட்டி.இங்குள்ள புதுப்பட்டி அம்மன் நம்மைப் போல் இதற்கு முன் வாழ்ந்த ஒரு மனித உயிர். ஏழு அண்ணன்களால் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற கட்டளையை மீறி வீட்டை விட்டு வெளியே சென்று அவ்வூர் ஜமீன்தாரின் கண்ணில் பட்டமையால் ஜமீன்தாரின் பாலியல் வன்முறைக்கு பயந்து அந்த ஏழு அண்ணன்களாலும் அப்பெண் கம்பால் அடித்துக் கொல்லப்படுகிறார். இதை நினைவுபடுத்தும் விதமாக இந்த கோயில் திருவிழாவின் நிறைவாக மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலையை ஊர் தலையாரி காவலுடன் பூசாரி ஊருக்கு தொலைவில் உள்ள புதருக்கு பின் எடுத்துச் சென்று விட்டு பின் அம்மன் சிலை இல்லாமல் திரும்பி வருவார். காரணம், அம்மன் சிலையை அவர்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள். இது அந்தபெண் கொலை செய்யப்பட்ட விதத்தை நினைவூட்டும் செயலாக உள்ளது.
அடுத்தது பிராமண பெண்ணை காதலித்தமைக்காக கொலை செய்யப்பட்ட புரத வண்ணார் சாதியை சேர்ந்த ஈனமுத்து என்ற இளைஞன் தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தா குறிச்சி கிராமத்தில் தெய்வமாக வழிபடப்படுகிறான். அவனுடன் அவன் காதலியான பிராமண பெண்ணும் வழிபடப்படுகிறாள். சாதியின் அடிப்படையில் பாப்பாதி அம்மன் என்று அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு உயிர்பலி கிடையாது சர்க்கரை பொங்கல் தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். ஆனால் ஈன முத்துக்கு உயிர் பலி உண்டு.
உடையாண்டி அம்மாள் என்ற பெண் தன்னைவிட வளம் குறைந்த தேவர் இளைஞனை கல்யாணம் செய்து கொண்டதால் இதை தாளாது அப்பெண்ணின் சகோதரர்கள் அப்பெண்ணெய் கருவுற்ற நிலையில் இருக்கும்போதே அவளைக் கொள்கின்றனர். இதை நினைவு கூறும் வகையில் இன்று பத்ரகாளிபுரம் சங்கம் பட்டி தூத்துக்குடி ஆத்தூர் புளியங்குளம் பகுதியில் உள்ள தேவர் சாதியினர் இப்பெண் தெய்வத்���ை வழிபடுகின்றனர். மாசி சிவராத்திரியில் சிறப்பாக வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது பேறு காலத்தில் உள்ள பெண்ணுக்கு தரும் நாட்டு மருந்து பொருட்களை படையலாக படைக்கின்றனர்.
1. நிலப் பிரபுத்துவம் உள்ளிட்டு அதிகார வர்க்கத்தின் பகைமை
2.பிறரின் பொறாமை உணர்வு
3.மூடநம்பிக்கை (நரபலி போன்றவை)
4. குடும்பப் பிரச்சனைகள் (மனஉறவு, சொத்துரிமை, முறையற்ற பாலுறவு) தோற்றுவிக்கும் பகைமை உணர்வு
5.நேரடியான போரில் ஈடுபட்டமை
6.வாழ்க்கை பிரச்சினையால் சில தவறுகள் அல்லது குற்றங்களை புரிதல்.
7.கொள்ளையர் ,காமுகர், ஆகியோரிடம் இருந்து பிறரை காக்கும் முயற்சியினை மேற்கொண்டமை
8.சாதி மீறிய காதல்
9.குடும்பத்தின் மானத்தை காக்கும் முயற்சி
போன்ற காரணங்களால் கொல்லப்பட்டவர்கள்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று குல அல்லது குடும்ப மானம் பெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில் குடும்ப மதிப்பின் குறியீடாக பெண் விளங்குகிறாள். இதனால் தான் எதிரிகளின் பெண்களை மானபங்கம் படுத்தும் செயலை பண்டைய தமிழ் மன்னர்கள் மேற்கொண்டனர். இன்றைய வகுப்புவாதிகளும் அதையே தொடர்கின்றனர். தோற்ற பகை மன்னர்களின் மனைவியார் கூந்தலை வெட்டி கயிறு திரித்து யானைகளைப் பினணத்த செய்திகளை பதிற்றுப்பத்து கூறுகிறது. பாலியல் நோக்கில் மட்டுமின்றி எதிரியை பழிவாங்கும் நோக்கிலும் எதிரியின் பெண்களை சிறைப்பிடித்து வந்துள்ளனர்." கொண்டி மகளிர்" என்ற பெயரில் கோயில் பணிகளை பெண்கள் செய்து வந்ததை பட்டினப்பாலை கூறுகிறது. மன்னர்கள் பெற்ற வெற்றி சிறப்பினை கூறும் கல்வெட்டுகள் பகைநாட்டாரின் பென்டிரை கவர்ந்து வந்த செய்தியை பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
மேலும் கணவனை பிரிந்து வாழும் பெண் பிற ஆடவனின் கண்ணுக்கு விருந்தாகி விடக்கூடாது என்பதும் தமிழ் சமூகத்தின் மரபாகும்.புகார் நகரத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தியின் கணவன் வாணிபத்தின் பொருட்டு வெளிநாடு சென்றிருந்த நிலையில் பிற ஆடவரின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வழிமுறையாக அப்பெண் தன் முகத்தை கருங்குரங்கு முகமாக மாற்றிக் கொண்டால். கணவன் வீடு திரும்பிய பின்னரே தன் இயல்பான முகத்துடன் விளங்கினால் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும்.
குலம் அல்லது குடும்பத்தின் மானம் பெண்ணுடன் பிணைக்கப்பட்டு இருப்பதாக கருதியதனால் குல மானத்தை காக்க பெண்ணை கொலை செய்ய தயங்குவது கிடையாது. இது தொடர்பாக கணக்கற்ற பழம் மரபு கதைகள் குறிப்பாக சமீன் ஆட்சி நிகழ்ந்த பகுதிகளில் இன்றும் வழங்கவிருக்கின்றன.
கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த போலி மரபுகளை மீறியதாக பொய் குற்றச்சாட்டப்பட்டு அதற்கு பலியான பல பெண்களின் சோகக் கதையும் இதில் அடங்கும்.
ஒரு குடும்பம் அல்லது சாதியின் கௌரவம் என்பது பெண்களின் உடல் சார்ந்ததாகவும் கருதப்படும் நிலையில் குடும்ப கௌரவத்தை காக்க கொலை செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நீதியாக இருந்துள்ளது. இன்றும் கூட இத்தகைய கொலைகள் வெவ்வேறு வடிவில் தொடர்கின்றன.
பாரம்பரியமிக்க பழமையான நம் தமிழ் சமூகத்தில் இதுபோன்ற நிகழ்வுகளும் செய்திகளும் மனிதனையும் அவர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய பழக்கவழக்கம் , சாதி , பாரம்பரியம் போன்ற அனைத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்துகிறது.
நம் அனைவருக்கும் குலதெய்வம் என்று ஒன்று உள்ளது அது இன்று பொருளாதார நிலை ஏற்றத்தின் காரணமாகவும் மேட்டிமை தன்மை காரணமாகவும் கருப்பன் , சடையனாக இருந்த தெய்வங்கள் இன்று சாய்பாபாவாக மாறியிருக்கிறது. ஆனால் இதுபோன்ற கொலைசெய்யப்பட்டு தெய்வங்களாகி போனவற்களை முழுவதும் நிராகரிக்கவும் முடியாது.
ஊர் வெளியிலோ, ஊர் எல்லையிலோ , காட்டிலோ, மேட்டிலோ எந்த ஒரு பராமரிப்பின்றி வெயிலில் குப்பைகளுக்கு நடுவில் யாரும் பெரிதாய் கண்டுக்கொள்ளாத இந்த தெய்வங்கள் நம்மை போன்று ஒருவருக்கு மகளாய்/மகனாய் வாழ்ந்து அநீதியினால் உயிர் இழந்தவர்கள் . இவர்களின் கதைகளை நாம் நிச்சயம் தெரிந்துக்கொள்ள வேண்டும் .
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்
தமிழ் சமூகத்தில் மக்கள் வழிபடும் கொலையுண்டு தெய்வமாக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் தோற்றம், பின்புலக் கதை, வழிபாட்டு முறை ஆகியவற்றை ஆய்வின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நூல் "ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்".
சாதி மீறிய காதல் தொடர்பான கொலைகள் தினசரி நிகழும் அவல நிலையை காண்கிறோம். இவை சாதிய ஆணவக் கொலைகள் என வழங்கப்படுகின்றன. ஆணவக் கொலைகளுக்கு பின்னால் சாதியைத் தவிர குடும்ப பெருமிதமும் காரணமாய் அமைகிறது. அப்படி தென் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சில கொலைகளையும், கொலையில் பலியானவர்களை தெய்வமாய் வழிபடும் மரபையும் விவரிக்கிறது இந்த ஆய்வு.
சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு ஆகியவை எவ்வாறு மனித உயிரை பறிக்கும் எல்லை வரை கொண்டு செல்கின்றன என்பதை இந்த கதைகளில் காண்கிறோம். குடும்ப மானம் என்பதை பெண்ணைச் சுற்றியே நிறுவி, கற்பு என்பதை பெண்ணோடு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிற்பந்த கற்பு முறையால் நிகழ்ந்த கொலைகள் ஏராளம். கணவனை பிரிந்து வாழும் மனைவி மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கில் ஈடுபடக்கூடாது எனும் மரபை மீறியதாக கூறி ஒரு பெண் கொல்லப்பட்டதை மாடாத்தி அம்மன் கதை விவரிக்கிறது.
கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் கொலைகளில் முடிகின்றன. ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒருவன் தனது ஆற்றலால் இடைநிலை சாதியில் இருப்பவனை விட உயர்ந்துவிட்டான் என்பதற்காக நிகழ்ந்த கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது. அதே சமயம் சாதிய படிநிலை ஒரே சாதிக்குள்ளும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் என்பதற்கு சான்றான கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது.
இந்த தெய்வங்களின் கதைகளை குறிப்பிடும் போது தடை அல்லது மரபு, தடை அல்லது மரபு மீறல், விளைவு, பழிவாங்கல், முடிவு ஆகியவை கொலையுண்டவர் தெய்வமாக மாறுவதற்கான கூறுகளாக சுட்டிக் காட்டுகிறார் சிவசுப்பிரமணியன். சாதிய வண்மமும், குடும்ப மானமும், பொருளாதார மேல்நிலையும், நேரடி சண்டைகளும் மூர்க்கமான வன்முறையை தூண்டும் காரணிகளாக அமைகின்றன. நாம் பேரூந்துகளில் பயணிக்கும் போது கிராமப்புரங்களிலும், ஊர் எல்லையிலும், தூரத்து காடுகளிலும் காணும் முறையான பராமரிப்பு இல்லாத சின்னச் சின்ன கோவில்களுக்கு பின்னாலும் இம்மாதிரியான வன்முறை சம்பவங்கள் இருக்கக்கூடும்.
This book doesn't give a lot of details, but it's important to learn how country gods mix with the main gods. It's not just about murders based on caste, it also talks about how these gods become gods after they're killed. I found it astonishing but regressive. I didn't know about this before so an eye-opener. I definitely recommend it if you want to learn about country gods.
இந்தப் புத்தகம் அதிக விவரங்களைத் தரவில்லை, ஆனால் நாடார் கடவுள்கள் முக்கியக் கடவுள்களுடன் எவ்வாறு கலக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். சாதியின் அடிப்படையில் நடக்கும் கொலைகள் மட்டும் அல்ல, கொல்லப்பட்ட பிறகு இந்த கடவுள்கள் எப்படி கடவுளாகிறார்கள் என்பதையும் பேசுகிறது. நான் அதை ஆச்சரியமாக ஆனால் பிற்போக்குத்தனமாக கண்டேன். இதற்கு முன் நான் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அதனால் வியப்பாக இருந்தது. நாடார் கடவுள்களைப் பற்றி அறிய விரும்பினால் கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்.
This book provides details about the deities whose origin doesn’t restrict to caste based violence. I really wish I could find more details on this topic