அ ரங்கன் சந்நிதிக் கதவைத் திறந்த பட்டாடையார் பயத்தினால் உள்ளேயிருந்த பெருமாள் மீது தமது கண்களை நாட்டாமலே, கர்ப்பக் கிருகத்தின் பெரிய வெண்கல நெய் விளக்கின் திரியை வலக்கைப் பெருவிரலாலேயே தூண்டி விட்டாராகையால், திடீரென டபீர் பண்டிதர் இரைந்ததும் அதிகக் கிலிக்கு இலக்காகி இறைவனின் கண்களை நோக்கினார். இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் மூலவரின் இரண்டு கண்களையும் அலங்கரித்திருந்த பெருவைரங்கள் இரண்டில் ஒன்று காணவில்லையென்பதை உணர்ந்ததும் கைகால்கள் உதறியதால் நெஞ்சும் திக்கு திக்கென்று அடித்துக் கொள்ளவே மயக்கம் போடும் நிலைக்கு வந்துவிட்டார். அந்த நிலைக்கு இன்னொருவர் வராததற்குக் காரணம், அவர் டபீர் பண்டிதரின் உத்தரவை நிறைவேற்ற வாயிலிலிருந்த மகாராஷ்டிர வீரர்களை அழைத்து வர ஓடிவிட்டதுதான். இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் இளவரசியும் பீர் பண்டிதருக்குப் பின்னால் கர்ப்பக்கிருகத்துக்குள் நுழைந்த வாலிபனும் மட்டும், எந்தவிதச் சப்தத்தையும் கிளப்பாமலும் நிதானத்தைக் கைவிடாமலும் நின்றார்கள். சகல சராசரங்களின் மூலப் பொருளின் அர்ச்சாவதாரமாய்ச் சயனத் திருக்கோலம் கொண்டிருந்த மூல அரங்கனுக்கு அன்று முத்தங்கி சார்த்தியிருந்தபடியால் தலை முதல் கால்வரை மூடிய முத்துக்கோப்புகள் கர்ப்பக்கிருக வெண்கல விளக்கின் ஒளியில் அற்புதமாகப் பிரகாசித்தாலும் திடீரென ஒற்றைக் கண் மட்டும் அவனருளை வீசியதால், ஏற்பட்ட பிரமை மட்டும் அந்த இருவரையும் கூட விடவில்லை. எந்த இரு கண்களைக் கண்ட மாத்திரத்தில் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று அரிஜன குலத்தவரான திருப்பாணாழ்வார் தமது பத்துப் பாட்டில் கடைசி அடியைப் பாடி வேறெதையும் காணாமலே அங்கேயே உயிர் நீத்தாரோ, அப்பேர்ப்பட்ட அழகிய மணவாளனின் அழகுத் திருவிழிகளொன்றின் வைரத்தை யார் திருடியிருக்க முடியும்? எப்படித் திருடியிருக்க முடியும்? இந்த எண்ணங்களே அவ்விருவர் மனத்திலும் எழுந்தபடியால் வேறு விஷயங்களில் அவர்கள் சிந்தனை செல்லாததால், இருவரும் செயலற்றே நின்று கொண்டிருந்தனர். அந்த வைரம் பிரெஞ்சுக்காரன் ஒருவனால் திருடப்பட்டு ரஷ்யாவில் விற்கப்பட்டு ரஷ்ய மன்னர் கிரீடத்தில் இணைந்துவிட்டதாக வரலாறு பின்னால் கூறினாலும், அதைப்பற்றி முன்கூட்டி அறிய வகையில்லாத டபீர் பண்டிதர் தனித்துச் சந்நிதிக்கு எதிரிலிருந்த அந்த வாலிபன்தான் திருடியிருக்க வேண்டுமென்ற ஊகத்தில் கூறி விட்டாரானாலும், அவர் கூறியதைப் பற்றி லட்சியம் செய்யாத வாலிபன் கர்ப்பக் கிருகத்திலிருந்து தப்ப எந்தவித முயற்சியும் எடுக்காமல், ‘அரங்கனின் ஒரு கண் காணாமற் போய்விட்டதால் அந்த ஸ்ரீரங்கத்துக்கும் சோழ மண்டலத்துக்கும் ஏதோ பெருத்த விபரீதம் ஏற்படப் போகிறது. இது நிச்சயம்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே சயனங்கொண்ட பெருமாளை மனத்தால் வணங்கினான். ‘முத்திங்கி மூடிய மூலப்பெருமாளின் ஒரு கண்மட்டும் காணாதது குறையாகத் தெரிந்தும், இச்சா மாத்திரத்தினாலேயே சகல உலகுக்கும் மங்களம் விளைக்கவல்ல உன் அருள் சுரக்க ஒரு கண் போதாதோ?’ என்றும் வினவிக் கொண்டான் அந்த வாலிபன்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
யாரும் தொடாத கதைக்களம் ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டில் காலூன்றினார்கள் தெளிவாக விவரித்துள்ளார் இந்தக் கதையின் நாயகன் ராபர்ட் கிளைவ். கதையில் வரும் போர்க்களம் விருவிருப்பு. கதையில் வரும் காதல்களம் தூக்கம் 😴😴😴. கதைக்களம் மேலோட்டமாக பார்க்க என்னவோ விறுவிறுப்பாக தான் இருக்கிறது ஆனால் நாம் படிக்கப் படிக்க ஏதோ சோர்வு தோன்றுகிறது