சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி. அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும் போது வில்லும் அம்பும் கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி. எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவு படும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது. என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்பு மயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை.
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.
பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!
இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.
டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு!
திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.
முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்
புத்தகம் : வனதேவியின் மைந்தர்கள் ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்
அசோகவனத்தில் இருந்து மீட்கப்பட்ட சீதை, தீக்குளித்து தன் தூய்மையை நிரூபித்த பின் அரண்மனையில் வாழும் காலத்தில் கதை தொடங்குகிறது. அவளின் மனவோட்டம் இப்படியாக இருக்கிறது ,
"நான் அசோகவனத்தில் இருந்த சமயம் அவரை மட்டும் பிற பெண்கள் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? ஆனால் நான் மட்டும் ஏன் தீக்குளித்து என் தூய்மையை நிரூபிக்க வேண்டும்? இதையே அவர் செய்வாரா ? "
ராஜம் கிருஷ்ணனின் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்தது சமூகத்தின் குரலற்ற சாரர்களின் குரலாக அவர் ஒலிப்பதாகவே தோன்றுவது. நம் புராணங்களில் வரும் பெண்கள் கூட அந்த இணத்தை சேர்ந்தவர்களாகவே எனக்குத் தோன்றும்.
இல்லையெனில் சூதாடிய தர்மனின் தவறை ஒதுக்கிவிட்டு, திரௌபதியின் சிரிப்பு தான் பாரதப் போருக்கு காரணம் என்று சொல்லப்பட்டிருக்குமா ?
ஆனால் இந்த கதை வாசித்த போது மகாபாரதத்தில் நிகழ்ந்த துகிலுரிதல் குறித்து ஒரு விஷயமும் புரிந்தது. அந்த காலகட்டத்தில் உயர் குலப் பெண்களுக்கு மட்டுமே மேலாடை அணியும் உரிமை உண்டு போல, அடிமைகளுக்கு அது இல்லை , எனவே தான் சூதில் தோற்ற பாஞ்சாலி அடிமை என்று கருதப்பட்டு அவள் மேலாடையை அவிழ்க்கும் செயல் அரங்கேறியிருக்கிறது.
எங்கள் ஊரில் ஆடி மாதம் நாராயணர் சுவாமி கோவிலில் ராமாயணம் வாசிக்கும் வழக்கம் உண்டு. அதில் ராமர் பட்டாபிஷேகத்தோடு கதை முடியும். கைகேயியின் சூழ்ச்சியால் தான் சீதை தீக்குளிக்க நேர்ந்ததாக வரும் கதை கேட்டு, அட பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருந்திருக்கிறாள் என்று விவரம் தெரிந்த பிறகு நினைத்திருக்கிறேன்.
ஆனால் அதை எழுதியவர் ஒரு ஆண் என்று யோசிக்கத் தோன்றிய காலத்தில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் தான் தோன்றியது.
“ஏன் ? உண்மையில் ராமர் நினைத்திருந்தால், சீதையை நம்பியிருந்தால் ! அந்த அக்கினிப் பரிட்சை தேவையற்றதல்லவா? ஏன் அவரும் கூட இறங்கியிருக்கலாம் அல்லவா?”
என்றெல்லாம் நான் கேட்டுக் கொண்ட கேள்விகளின் சாராம்சமாக இந்த புத்தகம் இருக்கிறது. ஒருவேளை பெண் எழுத்தாளர் எழுதிய காரணத்தால் இந்த கண்ணோட்டம் போல.
பூமகள் என்றே கதை நெடுகிலும் சீதை அழைக்கப்படுகிறாள். இராமர் மீது மையல் கொண்ட ஒரு அடிமைப் பெண் ஒருத்தி அவனை சேர முடியாத காரணத்தால் உயிர் துறக்கிறாள், இதை பூமிஜா அறிந்தால் எங்கே ராமர் தீக்குளிக்க நேருமோ என்று நிறைமாத கர்பிணியான அவளை காணகத்தில் விட்டுச் செல்கிறான் இளையவனான இலட்சுமணன்.
அதன்பின் காணகத்தில் வேடர் குடிகளோடு சேர்ந்து அவள் இயற்கையின் அரவணைப்பில் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறாள். காணகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் வனதேவியின் மைந்தர்கள். வனதேவி என்றும் சீதை அழைக்கப்படுகிறாள்.
பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள் மீண்டும் பூமிக்குள் மறைந்து விட்டதாக முடிக்கப்பட்ட கதையில் வரும் சீதை தெய்வீக சொரூபமாக கருணையின் வடிவமாகவும் தனக்கு என்ன அநீதி நிகழ்ந்தாலும் எதிர்த்து கேட்காதவளாகவே நமக்கு பழக்கப்பட்டவள்.
ஆனால் இந்த பூமகளுக்கு பிறப்பின் ரகசியம் கடைசியில் சூட்சமமாக வெளியிடப்படுகிறது. அவளுக்கு எல்லா பெண்களைப் போல் கோப தாபங்கள் இருக்கிறது, ஏமாற்றப்பட்ட உணர்வும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி தன் பிள்ளைகளை நல்லவர்களாக வளரக்கிறாள். அவர்கள் தந்தையுடன் நாட்டுக்கு செல்லவில்லை, அவர் இளைத்த அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள், வனதேவியின் மைந்தர்களாகவே காணகத்தில் வாழ்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ராமாயணம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை வாசித்தேன். ஏன் நம் நாட்டிலேயே, கம்ப ராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்குள்ளுமே நிறை மாறுபாடுகள் உள்ளதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அவை இரண்டையும் விட எனக்கு ஏனோ இராஜம் கிருஷ்ணன் அவர்களின் பூமகளைக் கொண்டு அந்த காவியம் மாற்றி எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக இருக்கும் என்று புத்தகம் முடியும் போது தோன்றியது.