தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது. சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.
எம்.ஜி.ஆர் பற்றி இதற்கு முன் இவ்வளவு செய்திகளைப் படித்ததே இல்லை. முதல் முறை 'தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளில்' தான் எம்.ஜி.ஆர் பற்றிப் படித்தேன். அதன் பிறகு பெரியதாகப் படிக்கவில்லை. ஆனால், இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்தது; எம்.ஜி.ஆரை ஒரு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியது. அவர் எப்படி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் மாறினார் என்பதும், பல சூழ்நிலைகளை அவர் கையாண்ட விதமும் எல்லாம் பிரமிப்புதான். எம்.ஜி.ஆர் என்றால் வெள்ளை நிறம், எந்தக் கறையும் படியாதவர் என்ற நிலையை இந்தப் புத்தகம் மாற்றியுள்ளது. அவர் வென்றதற்கும், இப்படி கடவுளாகப் போற்றப்படுவதற்கும் அவருடைய சூழ்நிலைகளின் ஒத்துழைப்பும், அதை அவர் கையாண்ட விதமும்தான் காரணம்; அவருடைய சில குணாதிசயங்கள் அதற்கு அடித்தளமாக அமைந்தன. முக்கியமாக ஒன்று, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது. இருந்தாலும், நிறைய நிகழ்வுகளை ஆசிரியர் மேலோட்டமாகக் கடந்து போயுள்ளார், ஏன் என்று தெரியவில்லை. புத்தக ஆசிரியர் எம்.ஜி.ஆரின் ஒற்றைப் பரிமாணத்தை மட்டும் கவனத்தில் கொண்டாலும், மோகன்தாஸ், எஸ்.எஸ். ராஜேந்திரன், வலம்புரி ஜான் போன்றவர்களைக் குறித்து எழுதியதில் மகிழ்ச்சி. ஆனால், பல முக்கிய நபர்களான ஆர்.எம். வீரப்பன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் தகவல்கள் குறைவுதான். எம்.ஜி.ஆர் நலத்திட்டங்கள் பல செய்திருந்தாலும், அவர் சிலரின் உதவியாலும் தயவாலும்தான் ஆட்சியில் இருந்தார் (1980 தவிர). இந்த விமர்சனங்கள் எல்லாம் இருந்தாலும், 'எம்.ஜி.ஆர்' என்ற பிராண்ட் என்றும் இந்தத் தமிழக அரசியலில் தேவை; அதற்கு மவுசு என்றும் உண்டு.அந்த ஆளுமையைப் பற்றி சுலபமாக அறிந்துகொள்வதற்குப் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தமிழகத்தின் தலைசிறந்த முதலமைச்சர். புரட்சி தலைவர், தன்னிகரில்லா ஆற்றல் படைத்த மாமனிதன், எதிரிகள் கண்டஞ்சிய சிங்கம். இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்றே வாழ்ந்து மறைந்த, மக்கள் தலைவரை பற்றி பார்த்து தேர்ந்து கொள்ள முடியவில்லை, அறிந்து கொள்கிறோம்