மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோளைப்பிடித்து அழுத்தியதையும், மற்றும் இருவர் கைகளைப் பிடித்து இழுக்க முற்பட்டதையும் கண்டவுடன், அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையென்பதை உறுதி செய்துகொள்ளத் தனது உடலைச் சரேலென்று நிமிர்த்தி விறைத்து நின்றுவிட்டான். பார்ப்பதற்கு ஒல்லியாகத் தெரிந்த அவன் உடல் சரேலென இரும்பாக மாறிவிட்டதாலும், இருவர் இழுத்தும் அவனை நகர்த்தக்கூட முடியாததாலும், “வீரரே! தங்களை மரியாதையுடன் நடத்தும்படி தேவி கட்டளையிட்டிருக்கிறார்கள். வீணாக அடம் செய்யாமல் தாங்களாகவே எங்களுடன் வந்து விடுவது நல்லது” என்று கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட இரு வீரரில் ஒருவன் கூறினான். விஜயன் பதில் ஏதும் சொல்லாமலே இரும்பாகிவிட்ட தனது உடலைச் சற்று நிமிர்த்தி. பிறகு சரேலென்று குனிந்து எழுந்து கைகளிரண்டையும் மடக்கி நிமிர்த்தி உதறவே, அவன் கைகளைப் பிடித்திருந்த காவலர் இருவரும் முன்புறத்தில் யாரையோ நமஸ்காரம் செய்யும் உத்தேசம் கொண்டவர்களைப் போல் துரிதமாக இரண்டடி ஓடி, தரையில் குப்புற விழுந்து தண்டனிட்டார்கள். அதே சமயத்தில் விஜயனுக்குப் பின்புறம் படகிலிருந்து தனது பழுப்பு நிறப்புரவியைத் தொடர்ந்து ஏறிவந்த மூர்சமத், விஜயனை மீண்டும் நெருங்கப்போன இன்னுமிரு வீரர்களைக் கண்டு தனது ராட்சஸக் கைகளை அவர்கள் கழுத்துக்களில் போட்டு இழுத்து ரிஷிகுல்யாவின் மண்டபப் படிகளில் உருட்டினான். விஜயன் இரு வீரர்களை மண்ணில் தள்ளியதாலும், மண்டபப் படிகளில் மற்றுமிருவரை சமத் உருட்டி விட்டதாலும், தங்கள் பலம் குறைந்து விட்டதைக் கண்ட மற்ற வீரர்கள் வாட்களை உயரத் தூக்கிக் கொண்டு விஜயனையும் சமதையும் நெருங்கினார்கள். அதுவரை அந்த இரு வீரர்கள்தான் போரிட முடியுமென்று எண்ணிய கலிங்க வீரர்களை வேறொரு ஆபத்தும் சூழ்ந்தது. தனது எஜமான் மீது கை வைக்கப்பட்டதுமே காதுகளை உயரத் தூக்கிக் கண்களை உருட்டிப் பார்த்த விஜயனின் கரிய புரவி, தனது பெரும் பற்களைக் காட்டி ஒருமுறை பயங்கரமாகக் கனைத்துவிட்டுக் கலிங்க வீரர்கள் மீது பாய்ந்து அவர்களை முட்டிக் கீழே தள்ள முயன்றும் மிதித்தும் கடித்தும் போரில் இறங்கியதால், மீதியிருந்த வீரர்களின் கதி நிர்க்கதியாகும் நிலைக்கு வந்தது. போதாக்குறைக்கு ராட்சஸ சமதும், படிகளில் வீரர் இருவர் ஓங்க முற்பட்ட வாட்களோடு அவர்கள் கழுத்தைப் பிடித்து நெறித்துக் கீழே தள்ளியதுமின்றி, குனிந்து அவர்களை ஒவ்வொருவராகத் தூக்கி ரிஷிகுல்யா நதிப் பிரவாகத்தில் எறியவும் செய்தான். விஜயனும் தனது புரவியின் தாக்குதலுக்கு இலக்கான இன்னொருவனின் உடலைப்பற்றித் தலைக்குமேல் தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி நதியில் எறிந்து இன்னொருவனையும் அவனுக்குத் துணையாக அனுப்பினான். சுமார் இரண்டு நிமிடங்களுக்குள் இரு வீரரக்ள் மண்ணில் குப்புறக் கிடக்கவும். இருவர் படிகளில் உருளவும், நால்வர் நதியின் பிரவாகத்தில் திக்கு முக்காடி நீந்தித்தப்ப எத்தனிக்க விளைந்துவிட்ட அற்புதத்தை, படகின் அருகில் நின்ற கிழவன் விந்தை நிரம்பிய கண்களுடன் பார்த்தான்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
முதல் பக்கத்திலிருந்தே வாசகனை நாவலுக்குள் இழுக்கும் திறன் சாண்டில்யனுக்கு உண்டு. அதை இந்த நாவலிலும் நிருபித்திருக்கிறார். சுவாரஸ்யம், எதிர்பாராத திருப்பங்கள், வர்ணிப்புகள் என எந்த குறையுமில்லாமல் கொடுத்திருக்கிறார்.
விஜயனோடும் சமத்தோடும் நாமும் பயணம் செய்தோமோ என்று சந்தேகிக்குமளவிற்கு உள்ளிழுக்கப்படுகிறோம். திரிலோகசுந்தரியின் உருவத்தை காற்றிலேயே வரைந்து பார்த்துக்கொண்டேன். ஆதிமால்யனை விஜயன் ஏன் கொல்ல மறுக்கிறான் என்ற கோபம் வருகிறது. குலோத்துங்கனும் விஜயனும் நண்பர்களாகிவிடுவார்களோ என்று தோன்றுகிறது. துறவிகளின்றி அரசுகள் இல்லை என்பது மற்றொருமுறை நிரூபணமாகிறது.
நாவலைப் படித்து மகிழுங்கள், நான் எதையும் சொல்லி உங்களின் சுவாரஸ்யத்தைக் குறைக்க விரும்பவில்லை.
இந்த விஜயமகாதேவி நாவல் சிங்கள மன்னனை பற்றியது. நம்மவர்கள் தான் யாரை வேண்டுமானாலும் புகழ்வார்களே! சிங்கள இளவரசன் கலிங்க இளவரசியை திருமணம் செய்து, அவன் குலசொத்தான மகாரத்தினத்தோடு இலங்கைக்கு கப்பலில் புறபடுகிறான்.
Awesome is an understated word!! This story although very fictional & has a lot of mysteries, it really beats கன்னி மாடம், யவன ராணி but again they were also a class of its own. Perhaps every novel is really enjoyable by சாண்டில்யன் ஐயா