மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது. இந்த அவலத்தையே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள இக்கதைகள் தமிழ் சிறுகதை உலகம் இதற்கு முன் அறியாத சாதனையாகும்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
10 சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் ஒருவித தத்துவார்த்த சிந்தனைகளை கொண்டதாக, மரத்திலிருந்து விழும் இலை சருகாக நம்மை உணரவைக்ககூடியவை. இவ்வுணர்தலை இந்த பத்து சிறுகதைகளின் மூலம் பெறலாம்.
புலப்படாத பறவை ------------------ ஜெர்டான் காடை(jordon courser) என்னும் அறியவகை பறவையை தேடி அலையும் ஆய்வாளர்களை பற்றிய கதை. 1986 களில் நடந்ததாக, பம்பாயிலிருந்து ரயிலில் புறப்பட்டு, அழியப்போகும் அப்பறவை இனத்தின் கடைசி உயிரை தேடி அலையும் ஆராய்ச்சியாளர்கள், அத்தேடலின் முடிவு என்னவாகி போனது என்பதை சற்றே நீட்டி புனைந்து எழுதப்பட்ட சிறுகதை.
விரும்பிக் கேட்டவள் -------------------- திரை இசை பாடல்களையே தன்னுடைய வாழ்வின் எல்லாமுமாய் கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி வரை அதையே சுவாசித்து உயிர்விட்ட பெண்ணின் கதை. அப்பெண்ணின் அக்காள் மகன், தனது சிறுவயது முதல் பிள்ளைகள் பெற்ற வயது வரை, தனது சித்தியை பற்றிய நினைவுகளை சொல்வதாக செல்கிறது இக்கதை.
அவன் பெயர் முக்கியமில்லை --------------------------- துர்கா என்பவளின் பார்வையில், உண்டியல் மீதான தனது ஞாபகங்களையும், தனது குழந்தையின்மையை பற்றியும், தான் சென்ற காய்கறி மார்கெட்டில் நடந்த கலவர, கொலைகள் பற்றியும், அங்கு அவளுக்கு நேர்ந்த அவலத்தையும் சொல்லும் கதை.
மழைமான் ----------- சுழற்சியான அலுவல் வாழ்க்கைக்குள் சிக்குண்ட மத்திம வயதுடையவர் தேவபிரகாஷ்., மானை காணவேண்டும் எனும் விசித்திர ஆசை கொண்டு சென்னை கவர்னர் மாளிகைக்குள் பயணபட்டு திரும்பிய கதை.
வெறும் பிரார்த்தனை -------------------- பதின்ம வயதில் உள்ள இரண்டு பெண்கள், தந்தையின் பொறுப்பின்மை பற்றியும், தாயின் அடிமைத்தன போக்கையும், அவர்களது பார்வையில் விளக்கும் கதை. பழனிக்கு பயணமாகும் அம்மூன்று பெண்கள், அக்குடும்பத்தலைவனால் படும் துயரங்களையும், அந்த தாயை அவர் நடத்திய விதங்களையும் விவரிக்கும் இக்கதை, ஆண்களின் குடிப்பழக்கமும் எடுத்தெறியும் குணமும் அவர்களது இல்ல மகளிர்களின் வாழ்க்கையை எப்படிபட்ட இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது என்பதையும் மனவலி தரும் விதமாக சொல்கிறது. அரசு பஸ்மெக்கானிக்காக இருக்கும் அந்த தந்தையை போல பலரும், நல்லதொரு வாழ்க்கையை தாமும் தமது குடும்பமும் வாழ வழியிருந்தும், தமது கேடுகெட்ட குணங்களால் சுற்றியிருப்பவர்களை எவ்வாறு இன்னலுக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை சொல்லும் கதை.
எதிர்கோணம் -------------- சவரிமுத்து என்ற பேரூந்து நடத்துனர், காமிரா/போட்டோகிராபி மீது கொண்ட ஆர்வத்தினால் அவரது பேரூந்தில் பயணம் செய்த காமிரா இளைஞனிடம் ஏற்படும் பிணக்குகளை சொல்லும் கதை. தான் விரும்பியதை செய்ய முடியாமல் போனதால் வரும் ஆற்றாமை, தனது எதிர் உள்ளவரின் செயல்களால் எப்படி அதை மனித மனம் பரிணமிக்கச்செய்கிறது என சொல்லும் கதை.
இன்னொரு ஞாயிற்றுக்கிழமை ----------------------------- தாமோதரன் எனும் சென்னையில் வேலைதேடும் பட்டதாரியின் ஞாயிற்றுகிழமையில், பெயருக்கு வீட்டிற்கு அழைத்த 'ஒருமுறை சிநேகித'ர்களின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக செல்வதை படம்பிடிக்கிறது. பசி கொடுமையை ஆற்ற, வாரத்தில் ஒருவேளையாவது சுடுசோறும் கறிசோறும் சாப்பிட இப்படி மானமிழந்து அடுத்தவர் வீட்டிற்கு செல்வபவனின் கதையும், அவனையும் கூனி குறுகிட செய்யும்படியான ஒருஉள்கதையும் இதில் இருக்கிறது. பசி, வறுமை, அவமானம் இவைகளின் ஒட்டுமொத்த வலியையும் உணரவைக்கக்கூடிய கதை.
ஓலைக்கிளி ------------- சவட்டி என்கிற பரமன் பழைய ரௌடி. பட்டணத்துக்கு குடிபெயர்ந்த தனது ஊர்க்கார்களிடம் மகளுக்காக வசூலிக்க சென்றவனின் கதை. திருட்டும் தியாக உள்ளமும் ஒருங்கே கொண்டவனாக காட்சிபடுத்தப் பட்டிருப்பவனின் கதை, நேர்மறை எண்ணங்களை விதைக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது.
மழையாடல் ------------- சங்கவை , அபரா எனும் புத்த பிக்குணிகளுக்குள் நடக்கும் மழையை பற்றிய கதையாடலே இக்கதை. மழையோடு தங்களுக்கு நடந்த சம்பவங்களை, துயரங்களை அழகியலோடும் தத்துவார்த்தங்களோடும் சொல்லும் கதை. கதை சம்பவங்களிலிருந்து இதன் களம் இலங்கை என்பதாக அறியலாம்.
தூய வெளிச்சம் ---------------- கோச்சடை என்பவன் குமாரசாமி என்பவரின் வீட்டை பற்றி வர்ணிப்பதையும், அதனுடனான தனது தொடர்பையும், மேலும் அந்த வீட்டின் முன்பகுதி வெளிச்சத்தை பற்றியும் சொல்லும் கதை. திருடனான கோச்சடையின் பார்வையில் அவ்வீட்டின் ஆரம்பம் முதல் இடிபடும் காலம் வரை அதை பற்றிய கோச்சடையின் நினைவு கோர்வைகளே இக்கதையாக புனையப்பட்டிருக்கிறது.
இப்புத்தகத்தின் முன்னுரையில் கூறியதைப் போல, "இந்தக் கதைகள் வாழ்வின் சில தருணங்களில் மனம் கொள்ளும் அலைகழிப்பையே முதன்மைப்படுத்துகின்றன...வயது கற்றுதந்த பாடங்களே இங்கு கதைகளாக இருக்கின்றன".
ஒவ்வொரு கதையிலும் நாம் கடந்துவந்த அல்லது கடக்க போகும் மனிதர்களின் பிம்பங்களை காணலாம்.!
இச்சிறுகதைத் தொகுப்பு வெவ்வேறு விதமான "பாவக்கதைகளின்" தொகுப்பு எனலாம். எஸ்.ரா-வுக்கே உரிய வழக்கமான எழுத்து நடை. பாவப்பட்ட மனிதர்களோ, உயிரினமோ, பாலினமோ தொகுப்பு முழுவதும் மையச்சரடாக வருகிறார்கள். மனிதர்களின் இயலாமையும், தவிப்பும், முரண்களும், மனக்கிலேசங்களும் கதைகளின் கருவாக இருக்கின்றன. விரைவான வாசிப்புக்கு உகந்த சிறிய புத்தகம்.