வாலிபன் முகத்தில் வெறுப்பை அதிகமாகக் காட்டித் தனது கையிலிருந்த சுவடியின் ஏடுகளில் இரண்டைப் பாட்டி அவற்றில் கண்களை நாட்டிக்கொண்டே “உங்கள் பெயரைச் சொல்ல வேண்டிய அந்த அவல நிலையில் நான் இல்லை. நான் சொன்னது கடவுளின் பெயர்” என்று பதிலுரைத்தான் வாலிபன். “கடவுளா?” “ஆம்” “அவரை அழைத்து என்ன பயன்?” “ஏன் பயனில்லை?” “அவர் கடவுள், உள்ளே கிடப்பவர். நாம் செத்தாலும் வெளியே வரமாட்டார்.” இதைச் சொல்லி நகைத்த இளமாரன் மெல்லப் போர்வையை நீக்கி எழுந்து உட்கார்ந்தான். போர்வையை அகற்றி எழுந்து உட்கார்ந்த நிலையிலும் இளமாரன் அதிக உயரமிருந்தான். உறுதியுடனும் நீண்டும் திரணை திரணையாக இருந்த கைகளிலிருந்த வடுக்களும் மார்பில் குறுக்கே தெரிந்த நீண்ட வாள் வடுவும், முகத்திலிருந்த இரண்டொரு தழும்புகளும் அவன் பல போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. அவன் பரந்த முகத்தில் வளைந்த புருவங்கள் கருத்திருந்தாலும் தலைக்குழலில் ஏதோ ஓரிரண்டு நரை மயிர்கள் தென்படத் தொடங்கியதால் இளமாரன் அத்தனை இளைய வயதினன் இல்லை என்பதை விளக்கிக் காட்டின. அவன் பரந்த முகத்தில் மதுவினால் மந்தப்பட்ட கண்களிலும் ஒரு தனி ஒளி காணப்பட்டதால் அவனிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்வது உசிதமல்லவென்பது வெட்ட வெளிச்சமாயிருந்தது. முகத்தின் உறுதியும், கன்னங்கள் புஷ்டியில்லாமல் சற்றே குறைந்ததால் தூக்கித் தெரிந்த உள்ளெலும்புகளின் கெட்டியும், முகவாய்க் கட்டையின் வலுவும் அவன் பலத்துக்குச் சாட்சிகளாக விளங்கின. கழுத்து நீண்டும் இருந்ததால் அதிலிருந்து கீழே இறங்கிய அகன்ற மார்பும் அதில் அடைவாயிருந்த ரோமமும் அவனுக்கு ஒரு முரட்டுத்தனத்தைக் கற்பித்திருந்தன. உட்கார்ந்த நிலையில் இளமாரன் தனது இரு கைகளையும் தூக்கி உடலை முறுக்கி ஒரு முறை சோம்பல் முறித்தபோது, விலா அசைந்த விதமும், நன்றாகப் பிடிக்காவிட்டாலும் அளவோடு விலா எலும்புகளை அணைத்திருந்த முரட்டுச் சதை திரும்பிய முறையும் இளமாரன் உடம்பு இரும்பு உடம்பு என்பதைச் சந்தேகமற நிரூபித்தன. அப்படிச் சோம்பல் முறித்துவிட்டு எழுந்த இளமாரன் கூரையைத் தொட்டுவிடுவது போல நெடுமாரனாக நின்றான். நின்ற முறையும் அவன் இரண்டடி எடுத்து வைத்து அறைச் சாளரத்தை நோக்கி நடந்த தினுசும் ஏதோ அணிவகுப்பில் நடைபோடுவதை நினைவுறுத்தியதே தவிர ஏதோ வீட்டிலிருக்கும் சாதாரண மனிதனாக அவனைச் சித்தரிக்கவில்லை. அப்படி இரண்டடி எடுத்து வைத்து சாளரத்தண்டை சென்று வெளியே நோக்கிய இளமாரன் ஒருமுறை பெரிதாக நகைத்தான். சற்றே திரும்பி மூலையில் ஓலை படித்துக்கொண்டிருந்த வாலிபனை நோக்கி “மகனே! என்று அழைத்தான். “நான் உங்கள் மகனல்ல. அப்படியொன்றும் உங்களுக்கு வயதாகி விடவில்லை” என்று சிடுசிடுவென்று பேசினான் வாலிபன். அந்த வாலிபனைச் சில விநாடிகள் உற்று நோக்கிக் கொண்டிருந்த இளமாரன் “சரி தம்பீ!” என்று அழைத்தான். “நான் உங்கள் தம்பியும் அல்ல” என்று சீறினான் வாலிபன் ஏடுகளில் மீண்டும் கண்களை ஓட்டி. “வேறு எப்படி இருக்க விரும்புகிறாய்?”, என்று இளமாரன் வினவினான். “எந்த உறவையும் கொண்டாட இஷ்டமில்லை” என்றான் வாலிபன். “ஏன்?” “நீங்கள் குடிகாரர்.” “ஆம்.” “நிதானம் தெரியாமல் குடிக்கிறீர்கள்.” “உண்மை.” “இலக்கிய ரசனை இல்லாதவர்.” “ஆம்.” “இவற்றையெல்லாம் மன்னித்துவிடலாம். ஆனால்...” என்று இழுத்த வாலிபன் வாயை மூடிக்கொண்டான். “சொல், வேறென்ன?” என்று கேட்டான் இளமாரன். “நாத்திகர்.” - இதை அழுத்திச் சொன்னான் வாலிபன். இதைக் கேட்ட இளமாரன் புன்முறுவல் கொண்டான். “குரு!” என்று வாலிபனை அழைத்தான். “நான் குருவல்ல” என்ற வாலிபன் மூலையில் நன்றாக நகர்ந்து கொண்டான். “அடிக்கடி உபதேசம் செய்கிறாய். நீ வேறு யாராக இருக்க முடியும்?” என்று கேட்ட இளமாரன் “நீ கடவுளை நம்புகிறாய்?” என்றும் வினவினான். “ஆம்.” “எதிலிருந்தும் உன்னைக் காப்பாற்றுவார்?” “காப்பாற்றுவார்.” இதைக் கேட்ட இளமாரன் இடி இடியென நகைத்து “பிரகலாதனைக் கடலில் எறிந்தார்கள். அவரைக் கடவுள் காப்பாற்றியதாகப் புராணம் இருக்கிறது. வா உன்னைக் கடலில் எறிகிறேன். காப்பாற்றுவாரா பார்ப்போம்” என்று கூறிக்கொண்டு இரண்டு எட்டில் வாலிபன் இருந்த இடத்தை அணுகி அவனைக் குழந்தை போல் தனது இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு அறைக்கதவைக் காலால் முரட்டுத்தனமாக உதைத்துத் திறந்துகொண்டு வெளியே சென்றவன் சிறிது நிதானித்தான். பிறகு அந்த வாலிபனைக் கீழே இறக்கி எதிரே தெரிந்த மலைச்சரிவை கவனித்தான் சில வினாடிகள். பிறகு வாலிபனை நோக்கி “உதயகுமாரா! நான் முற்றும் எதிர்பாராத ஆபத்து வருகிறது. உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக்கொள். நான் சொன்னாலொழிய கதவைத் திறக்காதே” என்று கடுமையாக உத்தரவிட்டு, அந்த வீடு இருந்த மலைச் சரிவில் இரு கால்களையும் அகற்றி ஊன்றிக்கொண்டு அணுகி வந்த ஆபத்தைச் சமாளிக்கச் சித்தமானான்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
இளமாறன் , உதயகுமரன், மாவலி, மன்னன் அச்சுதவிக்கண்டன், புத்தத்தர், காஞ்சிவர்மன் மற்றும் நீல ரதி இவர்களை மையமாக கொண்டு களப்பிரர்கள் காலத்தில் நடந்த சில உண்மை தொகுப்புகளை இடையே புகுத்தி புனைய பட்ட கதை தான் "நீல ரதி". மிகவும் அழகான நீல ரதியின் காவல் பெண் தெய்வமாய் எகிப்தின் ஐசிஸ் தேவதை. இளமாறன் மனைவியை இழந்து சொத்துக்களையும் இழந்து அவன் எதிரியான காஞ்சிவர்மனை பழிவாங்கி, ரதியை மன்னனிடமிருந்து காப்பற்றி, உதயகுமாரனை வாழவைத்து விட்டு நாடு தாண்டி செல்வது தான் கதை.