ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல இதழ்களில் சிறுகதை, குறுநாவல் எழுதிய போதிலும் ஜெகசிற்பியன் என்ற பெயர் தமிழ் வாசகர்களுக்குப் தெரிய வந்தது 1957இல் 'ஆனந்த விகடன்' நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில்தான். அதில் அவரின் நரிக்குறத்தி (சிறுகதை), திருச்சிற்றம்பலம் (வரலாற்றுப் புதினம்) ஆகியன இரு முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ்நேசன் என்ற மலேசியத் தினசரியில் அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம் தனி நூலாக வெளியானது. 'ஜீவகீதம்' தொடர்புதினத்தை ஜனவரி 17 1965 முதல் கல்கி இதழில் அவர் எழுதியது அவருக்குப் பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது. இப்புதினம் 'நேஷன்ல் புக் ட்ரஸ்ட்டால்' பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில் 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பெற்றன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதுகை (எம்.ஏ) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில் ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க கபிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தெற்காசிய மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர் 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இவற்றைவிட பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் செண்டர் தனது சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்- யார் எவர்? நூலின் எட்டாம் பதிப்பில் அவரது வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.