நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன்.
மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும்? அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்? அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான்? - இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு.
உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது
நதி, ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையும், ஆதரமுமாக விளங்குகிறது. நதியின் போக்கிலே சென்று தமிழர்களாகிய நாமும் இதுநாள் வரை இந்த உலகில் கரை கண்டிருக்கிறோம். நதியின் போக்கு மாறியதில் பல கலாச்சாரங்களின் வரலாறே அடியோடு மாற்றம் கண்டதையும் அறிந்திக்கிறோம்.
இயற்கையை கண்டு பயந்து கடவுளென வணங்கிய பல உயிர் பலிகளிட்ட பழங்காலத்தில், இயற்கையின் சக்தியை எதிர்த்து நின்று பகுத்தறிவுக்கு அன்றே வித்திட்ட ஒரே மாமன்னன், கரிகாலன். இத்தகைய பெருமையுடையவனின் வரலாற்று நூல்கள் பல இதுவரை ஒரு கையேடு போன்று குறைந்த பக்கங்களின் வருவதை எண்ணிப் பல நாள் வருத்தப்பட்டது உண்டு...
அத்தகைய குறையை இன்று "கரிகால் சோழன் - கல்லனைக் கட்டியவனின் கம்பீர வரலாறு" என்ற 350 பக்கங்கள் கொண்ட தனது விரிவான வரலாற்று நூலின் மூலம் எழுத்தாளர் டாக்டர். ரா. நிரஞ்சனாதேவி தீர்த்து வைத்து விட்டார். நானும் இன்று இந்த புத்தகத்தை வாங்கி மடக்கு மடக்கு என்று 100 பக்கங்களை புரட்டிவிட்டேன் . யார்தான் உண்மையான கரிகாலன்? என்று தொடங்கி, காவிரியின் பேயாட்டத்தை இதுவரை கண்டுள்ளேன்.
இனிமேல் ராஜராஜ சோழன் பஜனையை கொஞ்ச நாளைக்கு கேட்காது என நம்புகிறேன்......