“உன் கண்ணும், எப்பவாவது நீ சிரிக்கிற அளவான சிரிப்பும் போதாதா மாமா… உன்கிட்ட நான் கிறங்க?” என அதிர்வில்லாமல் கேட்டு, தீனாவின் மனதை அதிர செய்தாள். சில நொடிகள் பேச்சிழந்து நின்றவன் பின் சுதாரித்து “வீட்டுக்குப் போ” என அடிக்குரலில் சீறினான். “இந்த பேஸ் வாய்ஸ்ல நீ பேசும்போது உள்ளுக்குள்ள அப்படியே கூசி சிலிர்க்குது மாமா” என்றாள். பல்லைக் கடித்தவாறு “ஒழுங்கா போடி” என்றான். இவன் கோபமாக நிற்க, அவனை பார்த்து சிரித்துக்கொண்டே வீடு நோக்கி நடந்தாள். அவள் சென்ற சிறிது நேரம் தீனாவுக்கு ஒன்றுமே ஓடவில்லை. சற்று நேரம் பிடித்தது தன் நிலை அடைய. மதிய சாப்பாடு சுப்புணியை விட்டே வாங்கிக் கொடுக்கச் சொன்னான்.