ஒரு நாணயம், தனக்கென இரண்டு பக்கங்களைக் கொண்டிருப்பது போல, இது அறிவியலா? இல்லை மூட நம்பிக்கையா? என்று புரியாமல் மக்களைத் தவிக்க வைக்கும், 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் மர்மங்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. சொல்லப் போனால், இந்த மர்மங்களே நம் வாழ்க்கையில் சுவாரஷ்யங்களையும் கூட்டுகின்றன. இந்த மிஸ்டரி வகை மர்மங்கள் விடுவிக்கப்படாமல், 'இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம்' என்ற அனுமானங்களுடன் இருக்கும் போது, இவற்றின் உண்மையான தீர்வுகள் எங்கேயே புதைந்து போய் வெளிவராமல்தான் இருக்கின்றன. இந்த உண்மைகளை வெளியே கொண்டுவருவதற்குப் பலர் பலவிதமாகப் பாடுபட்டாலும், அதைச் சுலபமாக வெளிக்கொண்டுவரக் கூடிய அரசுகள் அவைபற்றி பெரிதாக நாட்டம் கொள்வதில்லை. நாட்டம் கொள்வதில்லையா? இல்லை நாட்டம் கொள்ள நினைப்பதில்லையா? எனத் தெரிவதில்லை. மிஸ்டரிகள் எப்போதும் மனித சக்திக்கு மாறான ஒரு அமானுஷ்யமான சக்திகளை அடிப்படையாகக் கொண்டே நம்மை மிரட்டுகின்றன. இந்த அமானுஷ்ய சக்திகள், மனித சக்தியை விட வலுவானவை, உயர்வானவை என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்தச் சக்திகளைப் பற்றி அரசுகளே ஆராய முட்பட்டுத, 'தற்செயலாக அவை இருக்கின்றன' என்னும் முடிவுகள் வருமானால், மனிதனை விட, அரசுகளை விட, அதிக சக்தியுள்ள ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்று மனிதன் எண்ணத் தொடங்குவான். அதனால் அரசுகளில் இருக்கும் நம்பிக்கை சாதாரண மக்களுக்கு இல்லாமலே போகலாம். இதனாலேயே இந்த மிஸ்டரிகளை முழுமையாக ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு அரசுகள் தயங்குகின்றன என்கிறார்கள். 'ஆனால் அரசுகள் இந்த மிஸ்டரிகளின் உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்டன. ஆனால் அவற்றை வெளியே சொல்லத் தயங்குகின்றன' என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த வகையில் பார்க்கும் போதுதான், பலமான ஒரு கேள்வி நமிடையே எழுகின்றது. அந்தக் கேள்வி இதுதான். 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?'. இந்தக் கேள்வியின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில மர்மங்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் 'கிராப் சர்க்கிள்' (Crop Circles) என்னும் பயிர் வட்டங்கள் யாரால், எப்படி, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் மர்மத்தில் ஆரம்பமாகி அயல்கிரகவாசிகளான 'ஏலியன்கள்' இருக்கின்றனரா? என்பது வரை இந்தப் புத்தகம் அராய்கிறது. ஒரு முழுமையான அறிவியல் தன்மையுடைய ஆராய்ச்சியை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.