'எது உயிரை ஊற வைக்கிறதோ - எது உணர்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடி விடுகிறதோ - எது தூக்கத்துக்கும் விழிப்புக்க்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ - எது நஷ்டப்படுத்தாத போதையை நல்குகிறதோ - அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்." - வைரமுத்து
என்னை வாழவைக்கும் நிமிடங்கள் என் ரசனைகள். நான் வாழ்கிற நிமிஷங்களில் நிறைந்திருப்பவர்களில் ஒருவர் வைரமுத்து. காதலையும் காமத்தையும் தமிழால் அலங்கரித்தவர். என்னைப் பொறுத்தவரை இது கொஞ்சம் பிந்திய வாசிப்புத் தான். தன்னை உருவாக்கிய, பாதித்த, செம்மைப்படுத்திய மனிதர்களைப் பற்றி இதில் பதிவு செய்கிறார்.
நாம் தொட்டுக்கொள்ளவில்லை
அது இளமைக்கு லாபம்
நாம் பிரிந்துவிட்டோம்
அது இலக்கிய லாபம்
வைரமுத்துவின் வரிகளின் அழகியல் இந்த ஏக்கத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் கவிதைகளுக்குக் காரணமான அந்த ஒருத்தியைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளில் இழைந்தோடும் அந்த வலிகளுக்குக் காரணமானவளோ எனத் தோன்றியது. கண்ணீர் வரவைத்துவிட்டார். இந்தப் பிரவாகத்தின் ஊற்று அங்கிருந்து ஆரம்பமானது என்கிறார். உலகமே போற்றும் இந்த வைரமுத்துவின் கவிதைகளை அவள் படித்துக்கொண்டிருப்பாளா என்கிற என்ன ஓட்டம் என்னில்!
குளத்தில் கல்லெறிந்தவர்களின் நல்ல இயல்புகளை மட்டும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். யாரையும் காயப்படுத்தாத அறிவு, வார்த்தைகள் அழகு. தன்னையும் உணர்ந்து எழுதியிருக்கிறார். படியுங்கள்.