Collection of the author's latest short stories காந்தியோடு பேசுவேன், கடக்க முடியாத பாலம், பாதியில் முடிந்த படம், அஸ்தபோவில் இருவர், அருவிக்குத் தெரியும், பிடாரனின் மகள், ஷெர்லி அப்படித்தான், இடைப்பட்ட நாட்கள், நிகழ்காலத்தின் சுவர்கள், வெயில்போய் வரும், அம்மாவின் புத்தகம், பசித்தவன், ஒற்றை முள்
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
பல்வேறு பத்திரிக்கைகளில் இந்த 13 சிறுகதைகள் வெளிவந்தபின்.,சிறுகதைத்தொகுப்பாக 2013ல் முதற்பதிப்பு கண்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கை குறித்து விநோதமான, எவரும் யோசிக்காத கோணத்தில், ஆழமான ஊடுருவல் பார்வையில் கேள்விளாக முன்வைத்து, வாசிப்பவரையும் தன்னை போலவே சிந்திக்க வைப்பவர்களில் திரு எஸ். ராமகருஷ்ணன் அவர்களும் ஒருவர்.
அப்படி இந்த தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள சிறுகதைகளும் வாழ்வியல் தொடர்பான ஆழமான தத்துவார்த்தங்களையும் கேள்விகளையும் கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது.
கதைகளும் நமது புரிதலும்:
1. “காந்தியோடு பேசுவேன்” - லட்சுமணன்-ரக்கேல் எனும் தம்பதிகள், அவரின் தாயார் பற்றி உரையாடடுவதுதான் இக்கதை. தனது தாய் ஏன் காந்தி மீது இவ்வளவு பற்று கொண்டு வார்தா வரை சென்றாள்? அடக்குமுறைக்கும் சொல்லொணா துயரத்துக்கும் ஆளான அவள், தன்னை ஏன் காந்தியை போல உணர்ந்தாள்? ஏன் அவள் புத்தகப்பிரியை? என அந்த தாயின் சோகங்களையும், அவளின் அமைதிப் போராட்டங்களையும் சொல்கிறது, காந்தியையும் ஒரு கதைமாந்தராக கொண்ட இக்கதை.
2. "கடக்க முடியாத பாலம்" - சாதி., சாதிவெறி எனும் தீப்பொறியாக மாறி, எப்படி தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நமக்கு எதிரிகளாகவும், அவர்கள் நம்மை குரூரமாகத் தாக்கவும், முடிந்தால் முதல் கொலையாகவும் செய்ய முடிகிறது எனச் சாதாரணனின் பார்வையில் யதார்த்தமாய் சொல்கிறது.
3. "பாதியில் முடிந்த படம்" - டெல்லியில் உலகத் திரைப்பட விழாவில், பத்திரிக்கையாளர் ஒருவரும், தான்தோன்றி பெண் ஒருவரும் நட்பாகி, பாதியில் பிரிந்துவிடுகிறார்கள். இரசனையான கதைபோக்கு கொண்ட கதை.(அவர்கள் பார்த்ததாக சொல்லப்பட்ட திரைப்பட பெயர்கள் (Moolaade, Mother and Son, The Cranes are Flying, Tango)
4. "அஸ்தபோவில் இருவர்" - எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் தனது மனைவி சோபியா மற்றும் வளர்ந்த பிள்ளைகளை விட்டு வெளியேறித் தனியே செல்கிறார். அவரை அஸ்தபோவில் ஒருவர் சந்திக்கிறார். இருவரும் மானுட வாழ்க்கை மற்றும் காதல் தொடர்பாக விவாதிக்கின்றனர். இறுதியில் தனது நோய் படுக்கையில் மனைவியை சந்திக்காது உயிர் துறப்பதாக முடிகிறது கதை.
5. "அருவிக்குத் தெரியும்" - குற்றாலத்திற்கு செல்லும் நண்பர்கள் குழுவில் ஒருவர்., அங்கு அருவியில் குளிக்கும்போது ஒரு பெண்ணை சந்திக்கிறான் ஒருவன். அது முதல் சில நாட்களுக்கு அவர்களுக்குள் ஏற்பட்டது காதலா? சிநேகமா? எனும் கேள்விக் கொக்கிளுடன் அலைக்கிழிப்புகளாலான கதை.
6. "பிடாரனின் மகள்" - பாம்பு பிடாரனின்(பாம்பாட்டியின்) மகளுடன் ஏற்பட்ட சிறுவயது நட்பானவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதை., அவள் வளர்ந்த பின், மீண்டும் இருவர் சந்தித்தபோது அவளும் அவனும் சிறுபிரயாத்தில் விளையாடியது அவனுக்கு நிழலாடுகிறது. வயதானபின் பாம்புபிடாரனுக்கும் அவளது மகளுக்கும் ஏற்படும் துயர் நிலைக்கு வருந்துவதாக கதை செல்கிறது.
7. "ஷெர்லி அப்படித்தான்" - ஷெர்லி பிராங்க் எனும் கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணிக்கு, தனது தந்தை, அவளது வாழ்வாதராத்திற்கு உதவுகிறார். இதை அவர் மகனின் பார்வையிலிருந்து, அவளது நன்றியுணர்ச்சியை காட்டும் விதத்தை கதையாக சொல்கிறது.
8. "இடைப்பட்ட நாட்கள்" - திருமணமான நான்கு மாதத்தில் கணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சலால்.,மனைவிக்கு ஏற்படுகிற மனப்போராட்டத்தையும், காய்ச்சல் குணமான பின் அவளுக்கு ஏற்பட்ட ஆசுவாசத்தையும் சொல்லும் கதை.
9. "நிகழ்காலத்தின் சுவர்கள்" - குமாஸ்தா வேலையிலிருக்கும் பெரியவர்., தான் லஞ்சம் வாங்கிய காண்டிராக்டரின் வேலையை முடிக்காமல் விட்டதால், அவனிடம் அடிபட்டு அவமானப்படுகிறார். வீட்டில் உள்ள மூன்று மகள்களுக்கான கடமையை நிறைவேற்ற, மேலும் லஞ்சம் பெற்று மேலதிகாரிகளிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கி தன் இயலாமையை நினைத்து புழுங்குவதாக கதை செல்கிறது.
10. "வெயில் போய் வரும்" - மூன்று பெண்களின் தந்தை சங்கரம்பிள்ளையும், அவருக்கு மாப்பிள்ளையாக வரவிருக்கும் சாமிநாதனும் தெருவில் பாத்திரங்கள் விற்பவர்கள். இவர்களுக்குள் நடக்கும் தொழிற்போட்டியே இக்கதை.
11. "அம்மாவின் புத்தகம்" - பழைய புத்தக கடையில் தனது தாய் படித்த புத்தகங்களில் அவளது பெயரைக் கண்டு, வீட்டிற்கு வாங்கி வருகிறான். தொடர்ந்து அவளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிய மகனின் கதை.
12. "பசித்தவன்" - வீரனூரில் நில அளவை செய்ய வந்த அரசு ஊழியனுக்கு, அக்கிராமத்தினர் திடியன் எனும் சிறுதெய்வத்தை வழிபடுவதை பார்த்து கேள்விகள் எழுகிறது. அந்த திடியனின் உழைப்பு, அவனது மனைவி கூந்தலை அவனின் எஜமானான சித்திரெட்டியின் மனைவி நாச்சியார் பொறாமை கொண்டு அறுத்தது, திடியன் கூலி கேட்டு போராடியது, அதன் பிறகான பஞ்சம், பழிவாங்கல், கொலை என திடியன் சிறுதெய்வமான கதையை சொல்கிறது.
13. "ஒற்றை முள்" - பாடல் ரெகார்டை பேத்தி ஷைலு உடைத்ததும் கோபம் கொள்கிறார் வீட்டின் பெரியவர். மகனும் மருமகளும் அதன் பொருட்டு அவருடன் வாதிக்கின்றனர். மனைவியை இழந்த முரட்டு குணம் கொண்ட பெரியவர், பாடல்களே பிடிக்காதவர், ஏன் அந்த பாடல் ரெகார்ட் மீது அத்தனை பிடிப்பு? யார் பொருட்டு அந்த கோபம்? ரெகார்டு மீது உராயும் ஒற்றை முள்ளாய் அவரது வாழ்வு ஏன் அமைந்தது என நெகழ்ச்சியாய் சொல்லும் கதை.
புத்தகத்திலிருந்து...
\ தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம்… /
\
ராகேல் சொல்வது உண்மை. இந்திய பெண்கள் காந்தியை சமூக சேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்கள் சகல விதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கிக்கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்று புரிந்தே கொண்டிருக்கிறார்கள் /
\ ராகேலுக்கு வன்முறையின் கொடூரம் தெரியும். அவள் யூதப் பெண். எனது மாணவியாக அறிமுகமாகி என்னைத் திருமணம் செய்து கொண்டவள். அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் அதிக ஒட்டுதல் முப்புள்ளி அந்த பெண்கள் நித்தியமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் சொன்னது நிஜமான உண்மை. /
\ காந்தி அமைதியான குரலில் சொன்னார்: " குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை. தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன். பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதை உணர்கிறேன்..." /
\ என்னால் சாதிய திமிர் களுடன் வாழ முடியாது. அதே நேரம் சாதியை முற்றிலும் உதறியும் வாழ முடியாது. சாதியை மறைத்துக் கொண்டு வாழ்வது மட்டுமே எனக்கு சாத்தியம். அந்த நெருக்கடியில் இருந்து வாழ்நாள் முழுவதும் எனக்கு விடுதலையே கிடையாது என்ற எண்ணம் என்னை ஆழமான வேதனைக்கு உட்படுத்துகிறது. /
\ ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதைப் போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான். அதிலும் தான் வெற்றி பெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது. /
\ ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போதுதான் வீடு அவனுக்குள் முளைவிடத் துவங்குகிறது. காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாக ஆகிப்போகிறது. உண்மையி���் அது ஒரு வலைப்பின்னல். பெண்களும் வீடும் ஒன்றுதான் போலும். எப்போதும் இடம் தந்து அணைத்துக்கொள்ளும், எப்போது விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது. /
\ வயதுதான் மனிதர்களின் ஒரே பலவீனம். காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள் என அனைத்தும் உறுதியாகின்றன. வலிமை கொள்கின்றன. மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான். /
\ "தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன. உங்களை நீங்கள் பகிர்ந்துகொடுங்கள். தண்ணீரைப் போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள். காற்றைப் போல எடையற்று இருங்கள்." /
\ பொங்குமாங்கடலும், சாலையில் வழிந்தோடும் அருவித் தண்ணீரும் நனைந்த உடைகளும் ஈரம் சொட்டும் கேசத்துடன் தோளில் துவைத்த துணிகள் ஊசலாட, எதற்கு அந்தச் சிரிப்பு என அறியாத சிரிப்போடு பொலிவுறும் முகத்துடன் பெண்கள் நடந்து வரும் அழகும், என்னை பூசிய உடல்களுடன் ஆண்கள் பருத்த தொப்பை மினுங்கச் செல்வதும், இட்லி கடைகளில் இருந்து எழும் புகையும் , மங்குஸ்தான் பழ வாசனையும், சீயக்காய், தைல எண்ணெய் வாடையும், காதுகளில் படும் மழைத்துளியின் கூச்சம் தாளாமல் தலையைச் சிலுப்பிக் கொள்ளும் பசுமாடும், வாழைப்பழத்தைப் பறித்துப் போய் தின்னும் குரங்குகளும், ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு வரிசை வரிசையாக வரும் மனநல சிகிச்சை பெறும் நோயாளிகளும், சாரலுக்கு சுக்கு காப்பி குடிக்கும் குற்றாலநாதசுவாமியும், செண்பகக் குழல்வாய்மொழி அம்மையும் ஒன்று சேர்ந்ததுதானே குற்றாலம்(அம்மையின் பெயர்தான் எத்தனை ருசிகரமாக இருக்கிறது, அம்மையின் பிரதி ரூபங்களாக எத்தனை செண்பாக்கள் குற்றாலத்தில்). /
\ எதிர்பாராமைதான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது. நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. /
\ மனிதர்களை துயரத்தில் இருந்து மீட்பதற்காகவே பாடகர்களைக் கடவுள் படைத்திருக்கிறார். /
\ ஒரு மனிதன் வாழ்ந்த முறையைவிட அவனது சாவே அவனைப் பற்றி பேச வைக்கிறது. /
எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு நான் பேசுவேன் எனும் நூல் குறித்த புத்தகத்தின் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம்:
புத்தகத்தின் தலைப்புதான் இதனை வாசித்துவிட தூண்டிது. காந்தியை பற்றியான வசவுகளும், அவதூறுகளும், பொய் பிரச்சாரங்களும் ஒரு ஒவ்வாமையும் சமகால இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் பொழுது காந்தியைப் பற்றிய பார்வையை , காந்தியின் உறுதியை , காந்தியின் அன்பை கடத்துவதற்காக காந்தியை நாம் ஆழமாக வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் இது காந்தியைப் பற்றியான முழுமையான நூல் என நினைத்துதான் வாசிக்கத் துவங்கினேன். காந்தி பற்றி ஒரே ஒரு சிறுகதை மட்டுமே இருந்தது. புத்தக கண்காட்சிக்கு கிளம்பிய ஓர் இரயில் பயணத்தில் தான் இப்புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன்.
சுதந்திர போராட்ட இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் காந்தி மிகவும் பிடித்துப் போனார் என்பதிலிருந்துதான் காந்தியோடு பேசுவேன் எனும் இந்த எழுத்தினை புரிந்து கொள்ள முடியும். ஒன்றிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தரும் போராட்டங்களில் விதைக்கப்படும் அன்பு என்பது சாதாரண அன்பை விட சற்று கூடுதல் வலிமையானது. அது உங்களை இருக்க விடாது, உறங்க விடாது, எதன் மீதும் பொறுத்துக் கொண்டு இருக்க விடாது. அப்படிப்பட்ட பெரும் போராட்டத்தின் வழியே அன்பை கடத்திய காந்தியை தேடித் திரியும் ஓர் பெண் பற்றிய கதைதான் காந்தியோடு பேசுவேன்.
காந்தியைப் பற்றி ஆதிக்க இந்தியர்களது மனநிலை குறித்து ஓர் யூதப் பெண் சொல்வதாக எஸ்ரா இப்படி குறிப்பிட்டுள்ளார்
"இந்தியர்கள் காந்தியைக் காரணம் இல்லாமலே வெறுக்கிறீர்கள். அது ஒரு சிண்ட்ரோம். காந்தியைப் பலநேரங்களில் ஒரு டஸ்ட்பின் போல உபயோகிக்கிறீர்கள். அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது"
என்று வெளிநாட்டுப் பெண் குறிப்பிடுவாள். இது எத்தனை உண்மையானது. நாமும் அப்படித்தானே பயன்படுத்தி வருகிறோம். சுதந்திரத்திற்கு பின்பாக சுதந்திரம் வாங்கித் தந்த மஹானை, ஒற்றுமையை வலியுறுத்தியதற்காக சுட்டுக் கொல்லப்பட்ட தேசத் தந்தையை வெறும் ஸ்வச் பாரத்தின் விளம்பரங்களில் வரும் மூக்குக் கண்ணாடியாக உபயோகிப்பது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம். காந்தி குறித்த தேடலைப் பற்றிய ஓர் பெண்ணின் பயணத்தை சொல்லும் இக்கதை மனதிற்கு நெருக்கமாக உணரவைக்கிறது. கேள்விகளால் துளைத்துவிடுகிறது.
சாதிய படுகொலையிலின் விழிம்பிலிருந்து ஓர் டார்ச் லைட் ஒளியால் தப்பிய ஓர் இளைஞன் பற்றிய கதை ஒன்று இருக்கிறது. மனதினை கசக்கி பிழிகிறது. நான் ஏன் கொல்லப்பட வேண்டும் ? நான் கொல்லப்படுவதற்கு என்னுடைய சாதி அல்லது மதம் தான் காரணமா.? அவ்வளவு ரவுடிக் கும்பல்களுக்கு மத்தியிலா நாம் வாழ்கிறோம் என்கிற கேள்விகளை எழுப்பி விடும். தமிழகத்தின் ஆண்ட சாதிகளின் பெருமை பேசும் மாவட்டங்களில் எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கழித்திருக்கிறேன். தலித்கள் மீது தெளிவாக திட்டமிட்டு நடத்திய கலவரத்தையும் துப்பாக்கிச் சூட்டையும் அதில் உருக்குலைந்த நகரத்தையும் ஓர் பேருந்தில் பயணம் செய்த சக பயணியாய் வேடிக்கை பார்த்திருக்கிறேன். என் சுய ஒழுக்கம், குண நலனை தாண்டி, என் நட்பை தாண்டி, என் அன்பைத் தாண்டி உன் சாதி ஆதிக்க மயிர் தான் பெரிதெனில் அதனை ஒட்ட நறுக்குவதுதான் நமது வேலை என ஓங்கி முழங்கத் தோன்றுகிறது. அதுபோலத்தான் மத ரீதியாக கொல்லப்படுகிற ஓராயிரம் முஸ்லிம்களின் சாட்சியாக இந்த வரிகளை எழுதுகிறேன். சக மனிதன் மீது நான் செலுத்துகிற அன்பை விட, குண நலன்களை விட, சுய ஒழுக்கத்தை விட , நான் காட்டுகிற மனித நேயத்தை விட எனது அரபி மொழிப்பெயரும், எனது கருப்பு ஹிஜாபும், எனது சுன்னத் செய்யப்பட்ட ஆண் குறியும் தான் நான் கொல்லப்படுவதற்கு, எனது சொத்தை சூறையாடுவதற்கு, என் மீதான பாலியல் அத்தூமீறலுக்கு காரணமெனில் அந்த மத வெறியை சுட்டு பொசுக்க வேண்டுமெனத்தான் மாணவர் பருவத்திலிருந்து களம் கண்டு வருகிறேன்.
இன்னொரு கதை ஒன்று இருக்கிறது. அந்த கதையின் வழியே நிருபமா எனும் பெண்ணொருத்தி வருகிறாள். யார்.. அவள்.? ஏன் அவள் டெல்லி வந்தாள்,? ஏன் அவள் கடும் குளிரில் ஜாக்கிங் சென்றாள்.? ஏன் அவள் சிகரெட் புகைத்தாள்? ஏன் அவள் இக்கதையில் வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி போனாள் என்று எனை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவளின் நண்பனின் இடத்தில் எஸ்ராவை தவிர வேறு யாரையும் என்னால் கற்பனை கூட செய்ய இயலவில்லை. அதொரு பேரன்புமிக்க சந்திப்பைத் தவிர வேறொன்றுமில்லை.
இப்புத்தகத்தில் அருவியை பற்றிய கதை ஒன்று இருக்கிறது. எனது பால்யத்திலிருந்து அருவிக்கு சென்றிருக்கிறேன். எனது நேசமிக்க தோழர் அதனை கடவுளின் துளி என்பார். வெயில் காலம் தொடங்கி டிசம்பரின் பனிக்காலத்தில் கூட, சில சமயம் மழைக்காலத்திலும் அருவியில் நின்றிருக்கிறேன். கண்களை மூடி அதன் சப்தத்தை கேட்டிருக்கிறேன். அலறியிருக்கிறேன். யாருக்கும் தெரியாத வாறு கைகளை ஏந்தி பிரார்த்தித்திருக்கிறேன். ஒவ்வொரு அருவியின் ஸ்பரிசத்தையும் அனுபவி��்திருக்கிறேன். எஸ்ராவின் அருவிக்கு வேறொரு கதை இருக்கிறது. அருவியின் பரிசுத்தமான தண்ணீரும், பெண்ணொருத்தியின் நேசமும் சேரும் Combo என்பது வேறொரு உலகம். நேசித்த பெண்ணுக்காக அல்லது நேசம் துளிர் விட்டுக் கொண்டிருக்கிற பெண்ணுக்காக அருவிக்கு செல்வது ஓர் மழைகால காதல் கவிதைக்கு நிகரானது. அது உங்களை அத்தருணத்தை விட்டும் கடத்திவிடாது. சிறுவயதில் அப்படியொரு நேசத்தோடு அருவியில் அல்ல கடலில் பால்ய கால சகியின் கரங்களை பற்றியிருக்கிறேன். அது தரும் மென்னுணர்வுகளுக்கான எழுத்துக்கள் எனது இதயக் கூட்டினில் பத்திரமாக இருக்கிறது. அப்படியொரு கதை எஸ்ரா எழுதியிருக்கிறார்.
இதுபோலவே பிடாரனின் கதை , ஷெர்லியின் கதை, துடியனின் கதையென மனதிற்கு நெருக்கமான கதைகள் இருக்கின்றன. எப்பொழுதும் எஸ்ரா வின் புத்தகங்களை வாசிக்கும்போது எஸ்.ரா வின் உரையாடல் நடையிலேயே எஸ்ரா பேசுவது போன்றே வாசிப்பேன். இப்புத்தகம் அப்படியொரு வாசிப்பை எனக்கு தரவில்லை. மூன்றாவது நபராக நின்று கதை சொல்வது போல இருக்கிறது. இது எஸ்ராவின தனித்திறமைதான்.
வேறொன்றும் சொல்வதற்கில்லை. வாசித்து விடுங்கள்..😊
என் நேசத்திற்குரிய எஸ்ராவிற்கும், இக்கதையின் கதாபாத்திரங்களும், தேசாந்திரிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
புத்தகம் : காந்தியோடு பேசுவேன் ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் பக்கம் : 151 விலை : ₹175 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராவின் 13 சிறுகதைகளின் தொகுப்புத்தான் "காந்தியோடு பேசுவேன்" என்ற இந்த புத்தகம்.
புத்தகத்தின் முதல் கதையின் தலைப்புதான் "காந்தியோடு பேசுவேன்" என்னும் இந்நூலின் தலைப்பு. முதல் கதையில் காந்தியின் மீது மிகவும் பற்று கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண் காந்தியை காண ஒருநாள் வீட்டை விட்டு ஓடி வர்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்திற்கு போய்விடுகிறாள். தமிழ்நாட்டில் ஒரு மூலையில் காந்தியை முன் பின் பார்க்காத ஒரு பெண். காந்தியை பற்றி வெறும் பிரச்சாரங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் மட்டேமே கேட்டு கேள்விப்பட்டு காந்தியின் மீது பித்து பிடித்து காந்தியை தேடிச் செல்கிறாள்.
இந்த பித்து காதல் பித்து அன்று. அது ஒரு விதமான பற்று, நம்பிக்கை, மரியாதை. கல்லாக இருந்தாலும் கோயிலுக்கு சென்று நமது துன்பங்களையும் ஆதங்கத்தையும் மனம் விட்டு கடவுள் முன் அழுது கொட்டி விடுவது போன்ற ஒரு செயல் .இதைத்தான் அந்த பெண்ணும் செய்தாள்.
காந்தியிடம் சென்று அவர் முன் மனம்விட்டு அழுதாள். காந்தியின் மொழியோ அந்த பெண்ணிற்கு புரியவில்லை, அந்த பெண்ணிற்கோ காந்தியின் மொழி புரியவில்லை .ஆனாலும், காந்திக்கு தெரியும் அந்தப் பெண்ணின் வலியும் வேதனையும் அவர் அந்த பெண்ணை அழைத்து ஆறுதலாக தலையை தொட்டிருக்கிறார் அது போதாதா அந்த பெண்ணிற்கு??
இந்திய பெண்களின் மனதில் காந்தியை பற்றிய எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்பதனை நீலம்மை என்னும் ஒரு பெண்ணின் பேச்சு வழியே எஸ்ரா கூறியிருப்பதாவது..
'சுசிலா கேட்டியா அந்த மனுஷன் ஆம்பளைங்க யாரும் கள்ளு குடிக்க கூடாதுன்னு சொல்றார். அது ஒன்னு போதும் அவர் நல்லவர் என்பதற்கு. போலீஸ் கிட்ட அடி வாங்கி ஜெயிலுக்கு போய் இருக்கிறார். தனது துணியை தானே துவைத்து விடுகிறார். கழிப்பறையை கூட தானே சுத்தப்படுத்துகிறதா தளியத் முதலாளி சொன்னார்.அப்படி ஒரு மனுஷன் நடந்து கொள்கிறார் என்றால் அவர்தான உண்மையான தலைவர்'.
இப்படியாக காந்தியின் மீது பித்து பிடித்து வர்த்தாவிற்கு வந்த பெண்ணை 2 1/2 மாதங்களில் அவனது கணவன் அடித்து கையை உடைத்து மீண்டும் அவளது சொந்த ஊருக்கே அழைத்து சென்று இருக்கிறான் பின்பு அந்தப் பெண் வாழ்நாள் முழுவதும் எப்படி எல்லாம் தனது ஒவ்வொரு செயல் மூலமும் எண்ணங்களின் மூலமும் காந்தியை நினைவு படுத்தினால் காந்தியை தேடினால் என்பதில் கதை சொல்லும்.
இதில் இந்த பெண்ணுடைய மருமகள் ஒரு யூதப்பெண் அவள் காந்தியை பற்றி கூறுவதாவது " நான் காந்தியை அதிகம் வாசித்ததில்லை .ஆனால், காந்தியின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோ ஒரு ஈடுபாடு உண்டகிறது. களங்கம் இல்லாத காந்தியின் சிரிப்பை பாருங்கள். இப்படி சிரிக்க முடிந்த ஒரு மனிதன் நிச்சயம் உயர்வான வாழ்வையே வாழ்ந்திருப்பான் என்று உறுதியாக சொல்வேன். அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு தகவல்களே அவரை என் விருப்பத்திற்குள்ளாகப் போதுமானதாக இருந்தது. ஒருவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளூர நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை. காந்தி என் வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல. அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது .நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை".. பெண்கள் காந்தியை வேறு விதத்தில் அணுகுகிறார்கள் ஆழமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது மறுபடியும் நிரூபணமானது போல் இருந்தது.
தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது. காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார். காந்தி தனது தந்தையை பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர் தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராக தன்னை உணர்ந்தவர் .அவரும் ஒரு நல்ல தந்தை இல்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார் .தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன். இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளது .அது வலிமையானது எளிதில் விழுந்து விடாதது. உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே என்று எஸ்.ரா எழுதுகிறார் .
முதல் கதை இப்படிச்செல்ல மற்ற 12 கதைகளும் பல மனிதர்களைப் பற்றியும் அவர்களின் விசித்திரமான குணம் ,செயல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கதைகளாய் உள்ளன.
அருவிக்கு தெரியும் , ஷெர்லி அப்படித்தான் , பாதியில் முடிந்த படம் , பசித்தவன், ஒற்றை முள் போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
பெரும்பாலும் இந்த சிறு கதைகளில் வரும் கதாபாத்திரம் விசித்திரமானவர்கள் புரிந்துக்கொள்ள முடியாதவர்களாகவே அமைகிறார்கள்.
பல இடங்களில் அந்த கதாபாத்திரத்தின் செயலின் ஊடே என்னையே நான் காண்பது போல இருந்தது .படிக்கும் போதே ச்சே நானும் இப்படித்தானே இதே மாதிரி பிடிவாதம் பிடிச்சு இருக்கேன், சட்டுனு நாய்க்குட்டி மாதிரியும் வாலாட்டி போயிருக்கேன், கோவத்துல வெடிச்சிருக்கேன், சில சமயம் எவ்வளவு கோவம் வந்தாலும் ஒரு புன்முறுவல் ஓட பேசாம போயிருக்கேன், காரணமே இல்லாம அழுது இருக்கேன், மத்தவங்க ஒரு பொருட்டா மதிக்காத விஷயத்துல என் சந்தோஷத்தை புதைச்சு வச்சிருக்கேன் என்று புத்தகத்தை வாசிக்கையில் பல பல எண்ணங்கள் நினைவுகள்.
இதுதான் ஒரு புத்தகத்திற்ககும் பேனாவிற்க்கும் உள்ள பலம்..வாசிப்பவர்களை ஏதேதோ செய்துவிடும்..
மனிதர்கள் புரிந்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல..ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கதை..மனிதர்களை ஆழ்ந்து கவனித்தால் நம்மைச் சுற்றியும் நம்மை நெருங்கியும் ஏன் நம்முடனேயே இதுபோல் பற்பல விசித��திரமான புரிந்துகொள்ளவே முடியாத குணாதிசயங்களுடைய மனிதர்களை நாம் காணலாம்..
சுப்பிரமணிய சுவாமி முதல் ஐஐடியில் படித்த அரவிந்த் கெஜ்ரிவால் வரைக்கும் ரூபாய் நோட்டில் லட்ஷுமியின் படத்தைப் போடச் சொல்வது அவர்களின் கடவுள் நம்பிக்கையோ ரூபாயின் மதிப்பை உயர்த்த நினைக்கும் தேசபக்தியோ அல்ல மாறாக அதில��ருந்து காந்தியின் படத்தை அகற்ற வேண்டும் என்கிற காழ்ப்புணர்வு தான். காந்தியின் அடையாளத்தை அழித்து விட்டு சுவச் பாரத் விளம்பரங்களில் அவரின் மூக்குக் கண்ணாடியை போடுவது மட்டுமே அவரை நினைவு கூறப் போதுமானதாக இருக்கிறது.
காந்தியைக் குறித்து ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும் சுதந்திரத்திற்கு முன் பெருமளவு மக்களை அரசியல் படுத்திய பெருமை காந்தியையே சாரும். ஏன் பெரியார் கூட தான் நடத்தி வந்த வியாபாரத்தை விட்டு விட்டு காந்தியின் பற்றால் தான் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
அப்படி காந்தியின் மீது கொண்ட அன்பால் அவரைத் தேடித் திரியும் ஓர் பெண் பற்றிய கதைதான் காந்தியோடு பேசுவேன். காந்தி பற்றி ஒரே ஒரு சிறுகதை மட்டும் தான்.
‘கடக்க முடியாத பாலம்’ என்ற கதை சாதிய படுகொலையிலின் விழிம்பிலிருந்து ஓர் டார்ச் லைட் ஒளியால் தப்பிய ஓர் இளைஞனைப் பற்றியது. பதை பதைக்கும் சுவாரஸ்யமான நடையில் எஸ்.ரா அதை எழுதியுள்ளார்.
‘பாதியில் முடிந்த படம்’ என்றொரு கதை இருக்கிறது. அந்த கதையின் வழியே நிருபமா எனும் பெண்ணொருத்தி வருகிறாள். தன் மனம் போன போக்கில் வாழ்கிற அவள் வாசிக்கிற எல்லோரின் மனதை விட்டும் எளிதில் அகல மாட்டாள்.
‘அஸ்தபோவில் இருவர்’ என்ற கதை ரஷ்ய இலக்கிய மேதை டால்ஸ்டாயின் துக்ககரமான இறப்பைப் பற்றியது. அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் டால்ஸ்டாய் தன் மனைவியை சந்திக்க மறுத்து விட்டு தன் இறுதி கட்டத்தில் சாவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார். பக்கத்து அறையில் அவர் மனைவி சோபியா அழுதுகொண்டிருக்கிறார். “என்னைப் போல ஒருவனை சகித்துக் கொண்டதற்கு நன்றி சோபியா” எனத் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்கிறார் டால்ஸ்டாய். அதன் பிறகு உயிர் பிரியும் வரை அவர் தன் மனைவியோடு பேசிக் கொள்ளவேயில்லை.
“மகிழ்ச்சியான எல்லாக் குடும்பங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற ஒவ்வொரு குடும்பமும் தன்னளவில் மகிழ்சியற்று இருக்கின்றன” என்கிற டால்ஸ்டாயின் வரிகள் அவர் வாழ்கையில் அவர் அனுபவித்த துக்கத்தின் வெளிப்பாடு தானோ என்று தோன்றுகிறது.
இதுபோலவே பிடாரனின் கதை , ஷெர்லியின் கதை, துடியனின் கதையென மனதிற்கு நெருக்கமாக கதைகள் இருக்கின்றன.
இது எஸ். ராவின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி.
எஸ்.ரா. ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை மீண்டும் உணர்த்தியது இந்த சிறுகதைத் தொகுப்பு.
மிக அருமையான கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் காந்தியோடு பேசுவேன் - காந்தியைப் பற்றி என்றாலும், அதில் செயலின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டு இருக்கும். நான் 2018இல் வார்தா வில் உள்ள சேவாகிராமம் ஆசிரமம் சென்று இருக்கிறேன். அப்போது நான் காந்தியின் எளிமையை பற்றி மட்டுமே பார்த்தேன். ஆனால், வார்தா ஆசிரமம் செயலற்று கிடப்பதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் காந்தியோடு பேசுவேன் கதையை படித்தப் பிறகு எனது பார்வை வேறுமாதிரியாக ஆனது.
கடக்க முடியாத பாலம் த்தில் நகரத்தில் மக்கள் சாதியை எப்படித் தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டதும் நல்லதொரு பார்வை
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும் - ரொம்ப நாளா நல்ல காதல் சீன்ஸ் இல்லாம தமிழ் திரையுலகம் சென்று கொண்டு இருக்கு.. இந்த மாதிரி ஒரு கதையை கொஞ்ச எடுங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்
பிடாரனின் மகள் கதை பிடாரர்களின் வாழ்வியலையும், மகுடி ஊதும் போதையை பற்றிக்கூறினாலும், அது ஒரு குறியிடாகவே எனக்குப் பட்டது. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான போதைக்கு ஆட்பட்டு வாழ்வை சீரழித்துக்கொள்கிறோம் என்பதே
ஷெர்லி அப்படித்தான் படித்த பொழுது எனது வாழ்வில் நான் செர்லி போன்று சவால்களை சந்தித்த ஒரு பெண்மணியை சந்தித்து இருக்க்கிறேன். ஆனால் செர்லி கொண்ட நன்றியினை அவள் ஏன் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாகவே உள்ளது. மற்றவர்களின் உதவிகளை உதட்டளவில் கூறிவிட்டு மனதளவில் ஒன்றும் செய்யவில்லை என்பதை மனதில் கொண்டு ஆணவத்தோடு எப்படி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் ஷெர்லிக்கு இருந்த அந்த நன்றி மிக மிக ந்ன்று.
இடைப்பட்ட நாட்கள் கிட்டதட்ட எனது கதை. எனக்கு கல்யாணம் ஆகி 8 மாதம் ஆகி இருந்தது. ஆனால் நாங்கள் வேலை நிமித்தமாக வேறு நாடுகளில் இருந்தோம். விசாவிர்க்காக காத்திருந்த காலம். ஆனால் தம்பி கல்யாணத்திற்கு எனது துனைவியார் வந்த பொழுது அவளுக்கு ஸ்ட்ரொக் வந்துவிட்டது, நான் பட்ட மனதில் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அந்த மன உளைச்சலை எஸ்.ரா அர்புதமாக எழுதியிருப்பார்.
பசித்தவன் கதையில் கடைசியாக ஒரு வரி வரும் ”அறுப்பட்ட கூந்தல். அழிக்கத்தானே செய்யும்”. எவ்ளோ உண்மை. திரௌபதியின் குறியிடுப் போன்று எனக்கு தோன்றியது (நான் ஒரு துவக்கக்கால வாசகன் தான்). ஆனால் ஒவ்வொருவருக்கும் மனதில் வைரக்கியம் வேண்டும் முன்னேர. ஆனால் சினத்தில் செய்யும் காரியம் போன்று பகையேதும் உண்டோ? “எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்” என்ற குறளே நினைவுக்கு வருகிறது
ஒற்றை முள் - பல குடும்பங்களில் இருக்கும் ஒரு கதை. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும்
அருமையான ஒரு புத்தகம், ஒவ்வொரு சிறுகதையும் அற்புதம். திரு.ராமகிருஷ்ணனை எத்தனை முறை பாராட்டுவது என்று தெரியவில்லை. தலைப்பை போலவே இந்நாவல் நம்முடன் பேசுகிறது