தமிழின் குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரான ராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதினைத் தனது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பிற்காகப் பெற்றவர். கடவுளின் தேசத்தில் பாகம் -1,-2 ஏற்கனவே அமேசான் கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. அதற்குப் பிறகு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. அவருடைய இரண்டு முக்கியமான நேர்காணல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ராம் தங்கம் என்பது கதைகள் எழுதத் தொடங்கிய பின் இவர் வைத்துக்கொண்ட பெயர். அதற்கு முன்புவரை இவரது இயற்பெயர் த. ராமு. விகடன் இதழில் வேலை செய்த போது த.ராம் என்கிற பெயரில் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பள்ளிக்கல்வியை சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், டிப்ளமோ இன் மீடியா ஆர்ட் பட்டமும் பெற்றவர். சிறுவயதிலிருந்தே தொடங்கிய வாசிப்பின் ஆர்வமாக எழுதத் தொடங்கியவர். தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். இப்போது முழுநேர எழுத்தாளராக தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’ கிடைத்தது. அந்தப் புத்தகத்தின் மூலம் கிடைத்த பத்திரிகையாளர் ப. திருமாவேலன் அவர்களின் அறிமுகத்தால் விகடனில் நிருபராக பணியைத் தொடர்ந்தார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஊர்சுற்றிப் பறவை’ என்கிற புத்தகம் வெளிவந்தது. அதன்பின் 2016 ஜனவரி மாதம் ‘மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ என்கிற புத்தகம் அடுத்தடுத்து ஆறு மாதங்களில் வெளிவந்தது. இந்தப் புத்தகங்களுக்கு வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். தன் நண்பர்களுடன் இணைந்து ‘திரிவேணி இலக்கியச் சங்கமம்’ என்கிற அமைப்பை 2016-17 காலக்கட்டத்தில் நடத்தி வந்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ ஆகியோரின் அறிமுகம் கிடைத்ததன் மூலம் புனைவு இலக்கியத்தில் அறிமுகமானார். 2017 டிசம்பர் மாதம் ஆனந்தவிகடனில் இவரது ‘திருக்கார்த்தியல்’ என்கிற முதல் சிறுகதை வெளிவந்தது. அது தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தச் சிறுகதைக்கு ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பு வம்சி புக்ஸ் வெளியீடாக வெளிவந்தது. அது தமிழ் இலக்கியப் பரப்பில் இவருக்கான தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தத் தொகுப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ‘சுஜாதா விருது, வடசென்னை தமிழ் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றது. 2019 -ஆம் ஆண்டு நவம்பர் 15 -16 தேதிகளில் நாகர்கோவிலில் தமிழின் மூத்த எழுத்தாளரான பொன்னீலன் அவர்களுக்கு பொன்னீலன் -80 விழாவைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் என அனைவரையும் அழைத்து பெரும்விழாவாகக் கொண்டாடியவர். அன்று வெளியிடப்பட்ட பொன்னீலன்-80 புத்தகத்தின் தொகுப்பாசிரியர் இவர்தான்.
2020 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ‘மாயா இலக்கிய வட்டம்’ நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது ‘ராஜவனம்’ குறுநாவலை முதல் பரிசுக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்தார். அந்தப் புத்தகம் வம்சி வெளியீடாக வெளிவந்தது. அதற்கு படைப்பு இலக்கிய விருதும், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருதும் கிடைத்தது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘புலிக்குத்தி’ வம்சி புக்ஸ் வெளியீடாக வந்தது.
நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ‘சூரியனை எட்ட ஏழு படிகள்’ மற்றும் ‘காட்டிலே ஆனந்தம்’ ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தான் சென்று வந்த பயண அனுபவங்களை ‘கடவுளின் தேசத்தில் – பாகம் 1, பாகம் 2 என்றும், குமரிமாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை ‘சிதறால்’ என்றும் அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிட்டுள்ளார். இவருடைய புத்தகங்களை பல கல்லூரி மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவரது ‘வெளிச்சம்’ சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.