எதுவுமற்றுப்போனாலும் லௌகீக இழப்புகளை நிர்தாட்சண்யமாக உணர மறுத்து, வசதி வசீகரங்களுக்கு முதுகு காட்டி கலை நம்பிக்கையின் கதியில், கலை தரும் பரவசத்தின் அகமலர்ச்சி ஒன்றில் மட்டுமே உயிர்த்து உலவும் அவருக்கு அற்புதம்போல ஒரு காதல் வாய்க்கிறது. தற்செயல்களின் கரத்திலிருந்து சுரந்து காதலின் மதுரப் பின்னல் ஊரும் ஒரு பிரத்தியேகம் கொள்கிறது வாழ்க்கை. அந்தச் சுடர் பற்றிக்கொள்ளத் தயங்கிச் சிணுங்கி. குழைந்து சரிந்து, மங்கிச் சிறுத்து இறுதியில் ஆறஅமர நின்றெரிந்து பிரகாச எழில் காட்டுகிறது. களிகூர்ந்த ஒரு பாத்திரம் அனிதா. பக்குவம், முதிர்ச்சி, கனிவு, காதல், பெருந்தன்மை கொண்டு மேன்மையில் திகழ்கிறார். நான் வாசித்த சிறப்பான பாத்திரங்களின் வரிசையில் அவர் சென்று அமர்வதன் கம்பீரத்தை நான் ரசிக்கிறேன். புதியதான ஒரு களத்தில் மாறுபட்ட நேர்த்தி பாவிய சொல்முறையில் எழும்பியுள்ளது இந்த நாவல், இதன் கலை சார்ந்த உரையாடல்கள் வாசகருக்கு அதன்பாற்பட்டு மேலதிக சிரத்தைகொள்ள ஏதுவாகும் என்று எண்ணுகிறேன். யூமா வாசுகி
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.