நமது சகோதர மொழியான சிங்களத்தில் இருந்து ஓர் இளம் பெண் இவ்வளவு சிக்கலான விடயத்தை மிக இலாகவமாக கதைகளாக எழுதி இருக்கிறார். காதலையோ காமத்தையோ எழுதுவது கம்பி மேலே நடப்பதைப் போல, சற்றே பிசகினாலும் இலக்கிய வரம்புகளில் இருந்து பிறழ்ந்து, “காமக் கதைகள்” என்கிற எல்லைக்குள் அடைத்து விடுவார்கள். வார்த்தைகளும், சம்பவங்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அது மனுவினுடைய இந்தக் கதைகளில் கைகூடி வந்திருக்கிறது.
ஒன்றைச் சொல்லவும் வேண்டும், ஆனால் அதில் நேரடியான வர்ணனைகளுக்கு இடமுமில்லை என்கிற இடத்தில் எழுத்தாளர், தான் நினைத்ததை எழுத மாய யதார்த்தத்தைத் தெரிவு செய்திருக்கிறார். அது யதார்த்தத்தை பிரமாண்டங்களின் மீதேற்றி வேறோர் உலகுக்கு வாசகர்களைக் கொண்டு போகிறது. சம்பவங்கள் கோர்க்கப்பட்ட விதத்திலும் விவரணைகளிலும் இந்தக் கதைகள் யதார்த்த உலகத்தோடு ஒன்றி வாசிக்கக் கூடியதாக இருக்கின்றன.
– உமையாழ்