இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம் - இன்னொரு முகம். நிகழ்காலத்தில் ஆய்வு நிலையில் இருக்கும் பெருந்தரவு தகவல் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் அபூதப் புனைவு. குற்ற இனச் சட்டத்தின் ஒரு நூற்றாண்டு வரலாற்று கதை இந்த நாவலின் மனசாட்சியாக இடம் பெறுகிறது. இது வெவ்வேறு காலங்களில் இருந்து சாமானியச் சொல் எடுத்து சமகால பேரரசுகளோடு ஓர் உரையாடல். கபிலன் வைரமுத்து
Book No 19 📚 of 2025 🍃 _ மாக்கியவெல்லி காப்பியம் _ கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு Science Fiction நாவல். ஆனால் பதிப்பாளரின் கருத்துப்படி " இதை ஒரு நாவலாக அணுகாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு சிறுகதையாக அணுகினால் புதியதொரு வாசிப்பனுபவமாக இருக்கும் " என்பதே உண்மை. அத்தகையதான ஒரு வாசிப்பனுபவத்தை ஈழத்திலிருந்து ; கடல் கடந்திருந்தும் கலக்கம் கண்டவளாளாய் பகிர்வதில் கொஞ்சம் மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது.
பொதுவாக ஒரு தலைவனின் கதையையும் நான்கு உறுதிப்பொருள்களையும் கொண்டு இயற்றப்படுவதே காப்பியம் ; இங்கு மாக்கியவெல்லி கதையின் எதிர் நாயகன் ஆனால் அவன் பெயரிலேயே புத்தகம் அமைந்திருப்பதே கதையோட்டத்துக்கு உயிர் கொடுக்கின்றது. அதேவேளை என்னால் உறுதிப் பொருள்களை உணரமுடிந்தது ; நீங்களும் வாசித்து அறியுங்கள்!
இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முன் இதன் முதல் பாகமான ஆகோள் பற்றி அறிந்திருப்பது அவசியம். 1800 களில் பெரிதும் பேசப்பட்ட குற்ற இனச் சட்டத்தையும் பெருங்காமநல்லூர் கலவரத்தையும் அடியாகக் கொண்டு நகர்ந்த கதை அதி நவீன தொழினுட்ப வளர்ச்சியில் அடையாள் திட்டம், நியூரோ எண் என்று 2057 இல் பயணிக்கிறது.
நியூரோ எண்ணாக வளர்ச்சி கண்டிருக்கும் அடையாள் திட்டத்தையும் அதனை பாதுகாக்கும் நெபுலா கட்டமைப்போடு இணைந்த மூல் கணினி மொழியையும்,அதனை தகர்த்து தரவுகளை களவாட நினைக்கும் மீட்டா கூடத்தின் செயற்பாடுகளையும், தரவுகளை பாதுகாக்கவும் மீட்கவும் நடக்கும் செயற்பாடுகளையும் இறந்த காலத்திலும் (1801 ) எதிர்காலத்திலும் (2057 ) நின்று பேசும் இந்த புத்தகம் நிகழ்காலத்தில் வாழும் எங்களை அசைத்துப் பார்க்கிறது என்பதே உண்மை!
கதையின் நாயகனாக தொடரும் நித்திலனுக்கு, துணை நாயகனாய் தோள் கொடுக்கும் சின்னமாயனையும் கதை நாயகிகளான செங்கா மற்றும் நெய்தலையும் எப்படி நியாபகம் வைத்திருக்க முடியுமோ அதே அளவுக்கு மாக்கியவெல்லியையும் மாயவனத்தையும் கட்டாயமாக நியாபகத்தில் வைத்திருக்கச் செய்கிறார் ஆசிரியர்!
உலக நாடுகளில் படிப்படியாக வளர்ந்து வரும் தரவுப் பாதுகாப்புத் தொழினுட்பத்தின் காலம் தாண்டிய வளர்ச்சியையும் அதன் அசுரத்தனத்தையும் பின்நாட்களில் மனித சமூகம் சந்திக்கவிருக்கும் சவால்களையும் வார்த்தைகளாய் விபரிக்கிறது இந்த புத்தகம். அதேவேளை சமகால அரசியலையும் அதன் எதிர்கால நிலைப்பாட்டையும் கூட சேர்த்துக் கொண்டிருக்கிறது.
மனித சமூகத்தில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே மூலதனம் காலம், அதனை நிறுத்தவும் மாற்றவும் துணியும் தொழினுட்பத்துக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கும் நம் எதிர்காலத்தை நினைக்கும் போது ஏனோ ஒரு பயம் எல்லோருக்கும் வரும் ; இந்த புத்தகத்தை வாசித்த பிறகு அந்த பயத்தின் நிகழ்தகவு அதிகமாவதாய் உணர்வீர்கள்! நான் உணர்ந்தேன் ஆதலால் இங்கு பகிர்கிறேன்! அதுவே இந் நூலின் வெற்றியும் கூட. ஆகோள் முடியும் போது இருந்த அதே எதிர்பார்ப்பும் பயமும் இங்கும் தொடர்கிறது! மூன்றாம் பாகம் முடிவு சொல்லட்டும்!
[ திரைக்கதை பாணியில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் திரைவராமல் இருப்பதே நல்லதாக தோன்றுகிறது, காரணம் ; "கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும் , கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும் "அவ்வளவே! மேலும் ஆங்கில சொற்களுக்கு ( Transliterated words, சில கணினி சார் சொற்கள்) ஒரு பின்குறிப்பு விளக்கம் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்! ]
டிஜிட்டல் யுக மாந்தர்கள் எல்லோரும் வாசித்திருக்கவேண்டிய புத்தகங்களில் ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் முக்கியமானது. ஆகையால் நீங்களும் வாசித்து ஒரு கால ரயில் பயணம் செய்யுங்கள். அடுத்த பயணத்துக்கான காத்திருப்புடன் ; அம்றிதா ஜெயரஞ்சித்.