நவீன தமிழ் இலக்கிய சூழலில் எழுதப்படும் உரைநடை வடிவில் காலத்திற்கு ஏற்றார் போல அதன் பேசு பொருள் மாறிக்கொண்டே இருந்து வந்துள்ளது . அதில் பிரதானமாக இடம் பிடித்த ஒரு பேசுபொருள் அல்லது களம் குடும்ப உறவுகளுக்குள் நிகழும் சிக்கல்களும் , தனிமனிதன் சார்ந்த மனச்சிக்கல்களுமே . இன்றைய காலகட்டத்தில் சமூகம் சார்ந்த , மக்கள் வாழ்வியல் சார்ந்த , நிலம் மற்றும் மொழி மீது ஏற்படும் அடக்குமுறைகளை சார்ந்த பேசு பொருட்களாக அவை மாறியிருந்தாலும் , இன்றும் உறவுச்சிக்கல்களுக்கான இடம் இருக்கத்தான் செய்கிறது . இன்றைய படைப்பாளிகள் பல சிறந்த படைப்புக்களை அதன் மொழியளவிலும் , வடிவத்தின் அளவிலும் அவைகளை கொண்டாடினாலும் கருத்தியல் அடிப்படையில் அப்படைப்புகளை இந்த ஒற்றை காரணத்திற்காக ஏற்றுக்கொள்ள ஏனோ மறுத்துவிடுகின்றனர் . அப்படி பார்த்தால் இன்றைய இலக்கிய சூழலில் குடும்பம் சார்ந்த - உறவு சிக்கல்கள் சார்ந்த - ஆண் பெண் உறவுகள் சார்ந்த படைப்புகள் எந்த தராசிலும் வைக்க தகுதியற்றவையா என்ற கேள்வி எழுகிறது . மொழியும் - வடிவமும் சிறப்பாக இருந்தாலும் கருத்தின் அடிப்படையில் வைத்து மட்டுமே ஒரு படைப்பை மதிப்பிட முடியுமா என்ற ஐயமும் எழுகிறது . இத்தகைய சூழலில் தன்னுடைய முதல் படைப்பிலேயே இந்த கருத்தியலை எந்த வித ஐயமுமின்றி தூக்கி பிடித்தவர் செந்தில் ஜெகன்னாதன் . அதற்கேற்றாற் போல எழுத்து உலகமும் சரி வாசகர் உலகமும் சரி அவரை எந்த வித விமர்சனமுமின்றி ஏற்றுக்கொண்டது . அந்த நம்பிக்கையின் வழியே அவருடைய இந்த இரண்டாவது தொகுப்பிலும் அவர் எடுத்துக்கொண்ட களம் என்னை ஆச்சரியப்படுத்தியது .
சிறுகதை என்ற வடிவத்தை தன்னுடைய எல்லா கதைகளிலும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் ஆசிரியர் . கதை தொடங்கும் இடமாகட்டும் - உச்சம் பெரும் தருணமாகட்டும் - முடியும் தருணம் வரும் திருப்பமாகட்டும் எல்லாமும் அந்தந்த கதை களத்திற்கு கச்சித்தமாக பொருந்திவந்துள்ளது . இவையெல்லாம் தாண்டி அவருடைய மொழி முதல் தொகுப்பை காட்டிலும் சற்று செம்மையடைந்து - திறம்பட வெளிப்படுகிறது . குறிப்பாக சொற்தேர்வு - கூற வந்ததை சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறும் திறன் கூடிவந்துள்ளது .குறிப்பாக விடம் கதையில் " எதுக்கு பயப்புடுறோமோ அது கூட பழகிட்டோம்னா , தைரியம் தானா வந்துடும் " இந்த வரியை அந்த கதையில் படித்தவர்களுக்கு தெரியும் இதன் ஆழம் என்னவென்று . சொற்தேர்வை பற்றி சொல்லவேண்டுமென்றால் இரண்டு கதைகளை குறிப்பிடலாம் - அனாகத நாதம் இறுதிவரியில் " பொங்கும் புனலென பெருக்கெடுத்துக்கொண்டிருந்த வாசிப்பு " கடைமுகம் கதையின் இறுதி வரியில் வரும் " சிக்கென பிடித்தான் " . பொங்கும் புலனும் - தேவாரத்தில் பயன்படுத்திய சொற்களும் , சிக்கென பிடித்தான் - திருவாசகத்தில் பயன்படுத்திய சொற்களும் இங்கு 21 ஆம் நூற்றாண்டில் ஒரு சிறுகதையின் முடிவில் அந்த கதைக்கு ஏற்றார் போல பயன்படுத்தியது அவருடைய மொழி புலமையை பறைசாற்றுவதோடு நம் தமிழ் மொழியின் 2500 ஆண்டுகால தொடர்ச்சியின் ஒரு புள்ளியாக இதனை பார்க்கமுடிகிறது .
பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுடைய ஆரம்ப கால படைப்புகளை தங்களுடைய பால்யத்தின் நினைவுகளிலிருந்தும் , தங்களுடைய மண் சார்ந்த வாழ்விலிருந்தும் , தங்கள் வேர்களில் பின்னிப்பிணைந்த கதைகளையே எழுத முனைவார்கள் . இதற்கு செந்திலும் ஒரு விதிவிலக்கு அல்ல என்றாலும் இந்த தொகுப்பில் அவர் சில புதிய முயற்சிகளை தன்னுடைய சில கதைகளில் நிகழ்த்திப்பார்த்திருக்கிறார் . போகன்வில்லா கதை முற்றிலும் நவீன வாழ்வின் நகரத்தின் இன்றைய ஆண் பெண் உறவுகளை பேசும் கதை . இதில் ஒரு தலை பட்சமாக கதை நகர்ந்தாலும் - முழுக்க ஆணின் பார்வையிலேயே கதை சொல்லப்பட்டாலும் - ஆங்காங்கே திரைப்பட காட்சிகளை நமக்கு நினைவூட்டினாலும் இத்தகைய முயற்சி ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் . ஏனெனில் இத்தகைய முயற்சி எத்தகைய எதிர்வினைகளை கொடுக்கிறது என்பதையும் அந்த களத்தை எப்படி வெவ்வேறு கோணத்தில் பார்க்கலாம் என்பதையும் அவர் இதன் மூலம் அறிந்துகொண்டு தன் வடிவத்தை செழுமைப்படுத்திக்கொள்ள உதவும் . தன்னுடைய பால்யத்தை அலகிலா விளையாட்டு என்ற கதை மூலம் அவர் புரவயமாகவும் - அகவயமாகவும் அந்த சிறுவனின் பார்வையின் வழியே நமக்குள் புகுத்த முயற்சித்தது சிறப்பு . தன்னுடைய திரையுலக அனுபவத்தின் வழி சாயை கதையை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னால் ஸ்டூடியோ கால திரையுலகம் சார்ந்த பல தகவல்களின் மூலம் அதன் பின்னால் இருக்கும் அவருடைய ஆராய்ச்சியும் அதற்கான மெனக்கெடலும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது .
செந்தில் ஜெகன்னாதனின் எழுத்தின் சிறப்பே அவர் கதைகளுக்குள் கொண்டு வரும் உவமைகள் தான் . அவை கதைக்கும் அத்தருணத்திற்கும் பொருத்தமாக இருப்பதோடு நம்மை அந்த கற்பனைக்கும் பயணம் செய்ய வைத்து நம்மிடம் ஒரு நீங்க இடத்தை அந்த உவமைகள் பெற்றுக்கொள்கின்றன . அனாகத நாதம் கதையில் தன் நாதஸ்வரத்தை தொலைத்த சாமிநாதன் தான் செல்லும் வழியில் பூத்துக்குலுங்கும் செம்பருத்தி மலர்களை ஒரு செடிமுழுக்க கூட்டமாக பார்த்த தருணம் அவை அனைத்தும் நாதஸ்வரத்தின் அணைசுவை போல பாவித்து அவை அனைத்தும் ஒரே நேரத்தில் இசைப்பது போல வரும் உருவகம் ஒரு இனிமையான கவிதை போல நம்மை உணரவைக்கிறது . கடைமுகம் கதையில் தன் செயலிழந்த கால்களை பாபு நீருக்குள் மூழ்கியிருக்கும் தருணத்தை கால்கள் மீன்களின் சிறகுகள் போல தண்ணீருக்குள் வளைவதை உணர்ந்தேன் என்று கூறும் இடம் நம்மையும் அந்த கால்களை உணரச்செய்கிறது . விடம் கதையில் அன்விதாவின் நீளமான கூந்தலை முதல் பாதியில் ஒரு விதமாகவும் அதுவே கணவனின் பார்வையில் இரண்டாம் பாதியில் வேறு விதமாக உருவகப்படுத்தி கூறுவதும் இறுதியில் ஒரு பாம்பைப்போல அவனுடைய கையில் வழுவழுவென உருளும் தருணம் அந்த கதை யதார்தத்திற்கு வெகு அருகில் சென்றுவிடுகிறது .
செந்திலின் சிறுகதை உலகம் பெரும்பாலும் பெற்றோர்களை சுற்றியே சுழல்வதை நம்மால் உணரமுடிகிறது . எல்லா கதைகளிலும் பெற்றோர்கள் முக்கிய கதை மாந்தர்களாக வருகின்றனர் . பிள்ளைகளை வாஞ்சையோடு வளர்க்கும் பெற்றோர்கள் - ஊரே தூற்றினாலும் தன் பிள்ளையை பேணிப்பாதுகாக்கும் பெற்றோர்கள் - மாற்றாந்தாய் பிள்ளையானாலும் , தான் பெற்றெடுக்காத பிள்ளையானாலும் உடலால் தாயாகாமலே மனதால் பெண்ணாக பிறந்த அனைவரும் தாயுள்ளம் கொண்டவர்களே என்பதை ஒவ்வொரு கதையிலும் உணர்த்துகிறார் . பிள்ளைகளும் பெற்றோர்களின் மீது பேரன்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர் அவருடைய உலகத்தில் . கடைமுகம் கதையில் கெட்ட வார்த்தையில் சாவித்ரியை திட்டி காரியுமிழ்ந்து அசிங்கப்படுத்தும் அதே பாபு தான் அவளுடைய கால்களை தெய்வசிலையென பற்றிக்கொள்கிறான் . ஊரே ஞானசூன்யம் என்று தூற்றும் சாமிநாதன் தன்னுடைய அம்மாவின் ஆறுதலான வார்த்தைக்கு பின் தான் அந்த அதியசயத்தை நிகழ்த்துகிறான் . தான் பெறாத பிள்ளைக்கு தாயாக மாறும் சாவித்ரி ஒரு பக்கம் என்றால் நவ நாகரீக உலகில் நகர சூழலிலும் தான் பெறாத பிள்ளையான விச்சுவிற்கு தந்தையாகிறான் சின்னா . இதுவரை நான் வாசித்த சிறுகதைகளும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையாக தம்பொருள் அமைந்தது . பெரும்பாலும் தன்னுடைய கதைகளில் அதிர்ச்சி��ளை தராத செந்தில் இந்த கதையில் உண்மையில் வாசகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் . அனாகத நாதம் கதை வெளிவந்த நாட்களில் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு பகிரப்பட்ட படி இந்த கதை பெரும்பான்மையான வாசகரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்று நினைக்கிறன் . என்னை பொருத்தவரை அவருடைய மிகச்சிறந்த கதை தம்பொருள் தான் . வாழ்வில் சரியான நேர்கோடான நல்லவைகளானவற்றை ஒரு பரந்த வெளியில் பேசுவதும் எழுதுவதும் சுலபம் . ஆனால் சற்று கோணலை - வழிதவறிய ஒன்றை - மீறலின் பக்கம் இருக்கும் நியாயத்தை வாசிக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படி அதற்கான தக்க காரணத்தை கூறி பொதுவெளியில் ஒரு கதையின் வடிவில் எடுத்துரைப்பது சற்று சவாலான ஒன்று . அதைத்தான் தம்பொருள் கதையில் செந்தில் செய்துகாட்டியுள்ளார் . இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளை வாசித்து முடித்த பின்னும் மனம் ஏனோ தம்பொருள் கதையில் வரும் இந்திராணியின் தனிமையுடனும் - கார்த்தியின் ஏக்கத்துடனும் - கந்தவேலுவின் வெண்மையுடனும் - கந்தவேலு மனைவியின் வாஞ்சையுடனே நின்றுவிடுகிறது . இந்த கதையில் எல்லோரும் நல்லவர்களே இருந்தும் கதையில் பல தவறுகள் நிகழ்வதாக நமக்கு தோன்றினாலும் அவரவர் பக்கம் நியாயம் இருப்பதாக பேசுவதுதான் கதையின் பலம் . குடும்பமும் சரி - ஊர் மக்களும் சரி - உலகமே என்ன நினைத்தாலும் சரி தனக்கு சரியென படுவதை செய்யத்துணியும் இந்திராணி கதையில் எங்குமே ஒரு குரலுயர்த்தலோ , புரட்சிகர வசனங்களோ , பிரச்சாரமோ இல்லாமல் அமைதியாக பெண்ணியம் பேசி செல்கிறாள் . கந்தவேலுவின் உடலுக்கு கார்த்தி கொள்ளிவைப்பதோடு கதை முடிவதும் அவனை வாஞ்சையோடு கந்தவேலுவின் மனைவி பார்ப்பதும் மனித மனங்களின் மாற்றத்தின் வெளிப்பாடு . கதையின் முடிவில் கார்த்தியை அரவணைக்க இரண்டு அன்னைகள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும்பொழுது அதிர்ச்சியான மனது சற்று ஆசுவாசப்படுகிறது . ஒவ்வொரு எழுத்தாளனும் தன் நிலத்தை , அதன் மக்களை , அவர்களின் மொழியை , வாழ்க்கை முறையை அப்படியே தங்களுடைய கதைகளில் பிரதிபலிக்க முயற்சிசெய்வார்கள் . இதில் செந்தில் சற்று மாறுபடுகிறார் . இவருடைய பெரும்பாலான கதைகள் அவருடைய நிலத்தை சார்ந்த கதைகளாக இருந்தாலும் கதையில் இடம்பெறும் கோயில்கள் , திருவிழாக்கள் , ஊர் பெயர்கள் , பேருந்துகள் , உள்ளூர் விளையாட்டுகள் , கலை விழாக்கள் , தெருக்களின் பெயர்கள் என ஒரு நாடகத்தின் பின் திரையை போல தன்னுடைய நிலத்தை பயன்படுத்துகிறார் . அதைத்தவிற வட்டார வழக்கோ , நிலம் சார்ந்த சிக்கல்களோ , அதன் பின் நிகழும் அரசியல் பற்றியோ அவர் பெரிதும் தன்னுடைய கதைகளில் பேசுவதில்லை . அதனால்தான் அவருடைய கதைகள் வீட்டிற்குள்ளும் - வீதிகளுக்குள்ளும் சுருங்கிவிடுகின்றன . வாசிப்பதற்கும் ஒரு இலகுவை கொடுக்கின்றன . அதனால்தான் இவருடைய எந்த கதையும் வாசித்தவுடனோ வாசிக்கும்பொழுதோ ஒரு அதிர்ச்சியை எந்த ஒரு தருணத்திலும் கொடுக்காது . மொழியும் வடிவமும் அவருக்கு கைதேர்ந்தவை என்பதால் இனி வரும் படைப்புகளில் அத்தகைய கருப்பொருட்களை நாம் எதிர்பார்க்கலாம் . இர.மௌலிதரன் 30-12-25 9.09 இரவு
“அனாகத நாதம்” என்ற சொல் யோக மற்றும் ஆன்மீக மரபுகளில் வரும் ஒரு கருத்து — வெளியில் எந்த இரண்டு பொருளும் மோதாமல் எழும் “ஒலி”. அதாவது, உள்ளிருந்து எழும் அமைதியான நாதம்.
இந்த புத்தகம் மனித வாழ்க்கையின் குழப்பங்கள், நினைவுகள், உறவுகள், ஆன்மீக தேடல், தனிமை, மற்றும் உள்ளார்ந்த அமைதியைத் தேடும் முயற்சிகளை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதையின் மையத்தில் இருக்கும் மனிதன் வெளிப்புற உலகின் சத்தங்களில் இருந்து மெதுவாக விலகி, தனது உள்ளத்தில் ஒலிக்கும் அந்த “அனாகத நாதத்தை” உணர முயல்கிறான்.
நூலில் நிகழ்வுகள் பெரிய திருப்பங்களோ அல்லது அதிரடி சம்பவங்களோ இல்லாமல் மெதுவாக விரிகின்றன. ஆனால் அவை மனித மனத்தின் நுண்ணிய அலைச்சல்களைப் பதிவு செய்கின்றன. நினைவுகள், இழப்புகள், கேள்விகள், மற்றும் அமைதிக்கான ஏக்கம் — இவை அனைத்தும் இந்த நூலில் மென்மையாக பின்னப்பட்டுள்ளன.
இது ஒரு கதையை மட்டும் சொல்லும் புத்தகம் அல்ல; வாசகனை தன்னுள் நோக்கச் செய்யும் ஒரு சிந்தனைப் பயணம்.