தி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘மலர் மஞ்சம்’. ‘கிராம ஊழிய’னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘அமிர்தம்’ போலவே இந்த நாவலும் ‘சுதேச மித்திரன்’ வாரப்பதிப்பில் 1960ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. நாவலாசிரியராக தி. ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே. பாத்திரச் சித்திரிப்பு, பின்புலவலு, மொழிச் சரளம், வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற, நிற்கும் படைப்பு. மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி. ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது. பலதார மணம், மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது. நான்கு மனைவியரை மணந்துகொள்ளும் ஆண் அந்த உறவு களின் சுமை தாளாமல் ஆன்மீகத்தில் அடைக்கலம் தேடுவது ஓர் இழை. அந்த உறவில் பிறந்த பெண் தனது உரிமையை மௌனமாக நிலைநாட்டுவது இன்னொரு இழை. இந்த இரு இழைகளிலிருந்து விரியும் கதை, பாலி என்ற பாத்திரத்தால் சமகாலத் தன்மை பெறுகிறது. தனது பிறப்புக்கு முன்பே குடும்பம் பேசிவைத்த ஆண் துணையை ஏற்பதா அல்லது தனது மனம் விரும்பும் துணையை வரித்துக்கொள்வதா என்ற பாலியின் தடுமாற்றமும் தேர்வுமே கதையை இன்றைக்கும் பொருந்தும் ஒன்றாக ஆக்குகிறது. ஒருவகையில் பாலி, அவளுடைய காலத்தை மீறியவள். தனக்குத் தளை பூட்டிய மரபுகளை உடைத்தவள். பாலியே தி. ஜானகிராமனின் பிற்காலப் பெண் பாத்திரங்களின் மூலப் பிரதிமை. -சுகுமாரன்
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
போனவாரம் ஒரு நாள் மாலை நானும், மனைவியும் டீ குடிக்க வேளச்சேரியில் இருக்கும் 'கீதம்' சென்றோம். ஒரு வடையும் சொன்னோம். கொண்டு வந்த வடையில் நீளமாக ஒரு முடி இருந்தது. அங்கே டீ குடிக்கும் ஆசையே போய்விட்டது. மலர் மஞ்சம் அப்படித்தான் இருந்தது. நன்றாக சென்று கொண்டிருந்த கதை கடைசி 50 பக்கங்களில் தடம் மாறி, வடையில் இருந்த மயிர் போல முடிந்துவிட்டது. படித்து மூன்று நாட்களாகியும் மனம் ஆறவில்லை. தி.ஜாவின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பது உண்டு என்றாலும், இந்தப் புத்தகத்தை இதுவரை வாசித்ததில்லை. ராமையாவின் மனைவி சாகும் போது, அப்போதுதான் பிறந்த குழந்தையை யாருக்கு திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார். ராமையா அதுவே தன்னுடைய ஜென்ம பலன் என்று வாழ்கிறார். அந்தப் பெண்குழந்தை, பாலாம்பா, அவர்கள் தஞ்சாவூர் செல்லும் போது நட்பான குடும்பத்தின் பேரனை விரும்பிவிடுகிறாள். இறுதியில், அவள் தாய் சொன்ன மாப்பிள்ளை, ராமையாவிற்காக ஒரு கொலை செய்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், அவளும் மனம்மாறி அவனை திருமணம் செய்து கொள்கிறாள். ராமையா ஜென்ம சாபல்யம் அடைந்து காசிக்கு சென்றுவிடுகிறார். அவ்வளவுதான். இந்திய பெற்றோர்களை போல சுயநலவாதிகளை உலகில் எங்கும் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல், அவர்கள் தங்களது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு முன் தங்களது சுயநலத்தை வைத்துவிடுகிறார்கள். பையனோ, பொண்ணோ தங்கள் சொல்லும் வரனை திருமணம் செய்து, தாங்கள் சொல்லும் நேரத்தில் குழந்தை பெற்று, அதையும் தாங்கள் சொல்லும் வழியில் வளர்த்து என்று அவர்களின் ஈடுபாடு இல்லாத இடமே இருக்காது. அவர்களது பிள்ளைகளும் அப்படியே அதை தங்களது பிள்ளைகளிடம் கடத்துவார்கள். இதை மீறி காதல், கீதல் செய்துவிட்டால் பெரிய துரோகியாக இந்த சமூகம் முத்திரை குத்தும். இன்றும் இங்கே திருமணம் என்பது தனிமனித விருப்பமாக இருப்பதே இல்லை. தான் பார்த்திருக்கும் பையன் ஒரு கொலை செய்தவன் என்று தெரிந்தால் ஒரு அப்பா என்ன செய்ய வேண்டும்? ராமையா அதை செய்ய மறுக்கிறார். வாக்கை மீற முடியாத அவர், தன்னுடைய மகளுக்கு ஒரு கொலைகாரனை திருமணம் செய்து வைக்கிறார். இதற்கும் கற்பழித்தவனை கணவனாக காட்டும் தமிழ் சினிமாவிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் ஒரு 200 பக்கங்கள், பாலாம்பா சென்னையில் படிக்க வந்து, காதல் செய்கிறாள், மிகவும் ரசித்து வாசித்த பக்கங்கள் அவை. திகட்ட, திகட்ட செய்யும் காதல் அல்ல. ஒரு மயிலிறகை போல வருடிக் கொண்டு செல்லும் காதல். எனக்கு என்னவென்றால், அது போல எழுதுவதற்கு என்னமாதிரியான நிதானமான, தீர்க்கமான மனநிலை வேண்டியிருக்கும். நமக்கு அது வாய்ப்பதில்லை. அதனால்தான் தி.ஜாவை வாசித்து தொலைய வேண்டியிருக்கிறது. கடைசியில் கோணவாய் நாயக்கர், ராமையாவிடம் மலர்மஞ்சம் என்றால் என்னவென்று சொல்கிறார். . “மஞ்சத்திலே பக்கத்திலே படுத்திருப்பான் உன் மாப்பிள்ளை (தங்கராஜன்). மனசிலே அந்தப் புள்ளையும் (ராஜா) வந்து வந்து போகுமில்ல? அதுதானே எங்கேயும் நடக்குது!” என்கிறார், காசிக்கு ஓடிச் சாமியாராகிச் சாவுக்காகக் கங்கைக்கரையில் காத்திருக்கும் நாயக்கர். அதற்கும் அந்த மனிதர் எதுவும் சொல்வதில்லை. 1960ல் எழுதப்பட்ட கதை என்பதற்காக மன்னிக்க முடியவில்லை. காலத்தை கடந்து நிற்கும் எழுத்தாளன், காலத்தை கடந்தும் சிந்திக்க வேண்டும் இல்லையா? இங்கே திஜா சமூக கட்டுப்பாட்டிற்குள் விழுந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அடுத்து கொஞ்ச நாட்களுக்கு திஜாவுடன் சண்டை.