சாருலதா காதலின் படிமம். அவள் ஒரு வானம்பாடி பறவையின் குறியீடு. அவள் எல்லைகள் அற்றவள். எங்கும் காற்றாய் விரவுபவள். அவள் இருக்கிற இடத்தில் ஜீவிதம் ததும்பும்.
சாருலதா நாவலில் தனிமையில் தன் இணையை நினைத்து ஏக்கத்துடன் கூவும் குக்கூ பறவையின் குரல் அடிக்கடி ஒலிக்கும். அது ஓரு குறியீடு. சாருலதாவின் மனதை அறிந்து கொள்கிற ஒரு சக இதயத்தின் வரவிற்கான ஏக்க பெருமூச்சை அந்த குறியீடு உணர்த்துகிறது. இதை ஒலி வடிவில் நீங்கள் உள்வாங்குகிறபோது, அன்பில்லா உலகத்திற்குள் போய், அதன் ஏக்கத்தை பருகிவிட்டு வருகிற தாபத்தை உணர்வீர்கள். அது அந்த அன்பின் தாபத்தை முழுமையாய் அனுபாவிப்பில் உணர வைக்கும். அந்த கணங்களில் சாருலதாவாகவே மாறி கரைந்து போவீர்கள்.
இதில் வரும் காற்றின் ஓசை, கடலலையின் இரைச்சல், விதவிதமான தருணங்களில் எழும் ஊஞ்சலின் கிரீச் சத்தங்கள் எல்லாம் வெறும் ஒலிகள் அல்ல. அவை சாருலதாவின் மனப்பக்கங்களை நமக்கு விரித்துக் காட்டும் சங்கேச மொழிகள். அதை ஒரு முறை அனுபவித்து பார்த்து விட்டால், திரும்பத்திரும்ப அனுபவிக்க தோன்றும். அவளின் காதல் மனதாகவே ஆகிப் போவீர்கள்.