விலங்குகளையும், பறவைகளையும் வைத்துக் கதையில் நீதி புகுத்துவது பஞ்ச தந்திரக் கதைகளிலும், கீதோபதேசக் கதைகளிலும், ஈசாப்புக் கதைகளிலும் உண்டு. ஆனால் அந்த நீதிக் கதைகளில் காணாத குத்தல், கிண்டல் ஆகியவை நீறு பூத்த நெருப்பாக இல்லாமல் வீறுகொண்டெழுந்த அக்கினிப் பிழம்பாக விளங்குவதே ‘ஓ, மனிதா!’ கட்டுரைக் கதைகள்.
மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துகளை மறைப்பதற்காகவே என்பது தெரிந்தே, பேசாத உயிரினங்களைப் பேசவிட்டிருக்கிறார், சராசரி மனிதனிடத்தில் ஆழப்பதிந்துள்ள உணர்ச்சிகளைத் தேடிக் கொணர்ந்து தருகிறார். தீவிரமான மனவெழுச்சிகளைக் கடைந்தெடுக்கிறார்.