பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் என்று தெரிந்தாலும் சட்டத்துக்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். காவல்துறை முடிந்தவரை தனது கடமையைச் செய்தால்கூட, முக்கியமான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகிவிடுவார்கள். ஆனால், காவல்துறையின் கைகளை அரசாள்பவர்கள் கட்டிப்போட்டுவிடுவதால்தான் பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே தெரியாமல் போகும்! பிரபலங்கள் வழக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது மீடியாக்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மக்களுக்குத் தகவல் அளிப்பார்கள். அந்த ஜுரமும் கொஞ்ச நாளில் அப்படியே அமுங்கிப் போகும். தமிழ்நாட்டில் நடந்த பிரபலமான 25 வழக்குகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து இருக்கிறார் நூல் ஆசிரியர் கோமல் அன்பரசன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைக்கதை போல் சொல்லி, படிப்பவர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுள்ளார். ஆஷ் கொலை வழக்கு, மருதுபாண்டியர் நகைகள் வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு, அன்னிபெசன்ட்& ஜெ.கிருஷ்ணமூர்த்தி வழக்கு, தூத்துக்குடி சதி வழக்கு என்று பழைய வழக்குகளையும் எடுத்துக்கொண்டது இந்தத் தலைமுறையும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான். இந்த நூலில் உள்ள பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே இதுவரை தெரியாதது வேதனையையும் வியப்பையும் தான் தருகிறது.