நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்றுப் பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது. நவீனின் முதல் நாவல் 'பேய்ச்சி' அவ்வகையில், மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில், மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம்.