அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கத் தவறுகிற கோணங்களை வெளிக்கொணர்வதே டி.தருமராஜின் நோக்கமாக இருக்கிறது. இக்கட்டுரைகள் சித்தரிக்கும் உலகம், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான், ஆனால் அப்படியும் அல்ல. அதுவொரு இணை உலகாகத் தோன்றுகிறது. ஒரு சிறு சம்பவத்தை விவரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சித்திரத்தையும் அவரால் மாற்றிவிட முடிகிறது. இப்புத்தகத்தைப் படிக்கிற யாரும் பழைய மாதிரி சிந்திக்க முடிவதில்லை என்பது உண்மை. இணையதளத்தில் தொடராக எழுதி வந்தபோது, ஏராளமான விவாதங்களை ஏற்படுத்திய கட்டுரைகள் இவை.
வழக்கம் போல திரைப்படம், நாட்டுப்புறவியல், மானுடவியல், வரலாறு, நவீனக் கோட்பாடுகள் என்று ஒரு சாகசப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அயோத்திதாசரும் இளையராஜாவும் உதாரணப் புருசர்களாக இடையிடையே வந்து போனாலும் அவரது சிந்தனையின் ஆதார உருவகங்களாக மாறியிருப்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
இந்த வருட வாசிப்பில், வாசித்த மிகச் சிறந்த, முக்கியமான, கட்டாயம் வாசிக்கணும்ன்னு பரிந்துரைக்கிற பட்டியலில் இடம் பெறுகிற முக்கியமான ஒரு படைப்பு, யாதும் காடே யாவரும் மிருகம்.
இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், அது பேசுற கருத்தாங்களை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் பார்க்கிற மாதிரி, ஆரம்ப நிலையிலிருந்து தொடங்கி, இந்தக் கட்டுரைகள் கொஞ்சம் கொஞ்சமா நாம ஒருபோதும் எதிர்பார்க்காத திசைகளுக்கு வளர்கின்றன.
இந்த தொகுப்போட மிக முக்கியமான அம்சமா நான் பாக்குறது அதோட இயல்பு தான் —பாரம்பரியமான அனைத்து அணுகுமுறைகளையும், வழிகளையும், மரபுகளையும், பார்வகளையும் ஒதுக்கி வச்சுட்டு அனைத்தையும் அதோடு எதிர்திசையில் இருந்து பார்ப்பதோடு, பொதுவாக புறக்கணிக்கப்படும் அந்தப் பக்கத்திலிருந்து, எப்போதும் நீக்கப்படும், மறுக்கப்படும் அந்தக் கண்ணோட்டத்திலிருந்து விடைகளை வழங்க முயல்வதுதான்.
என்ன தான் இது கட்டுரைத் தொகுப்பாக இருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையும் தொடங்கி, முடிந்து அங்கேயே நின்று விடுகிற மாதிரி இல்லை. எங்க ஆரம்பிக்கிறது, எங்க முடிகிறது என்று கோடு இழுத்து காட்டாமல், இங்கே கொஞ்சம் தொட்டு, அங்கே கொஞ்சம் தொட்டு, மனம் இயல்பாகச் செல்லும் போக்கில் நகர்கிறது.
இந்த கட்டுரைகளில் எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் விட்டுட்டு போகிற அந்தக் கேள்வி. அந்த நீண்டுநிற்கும் கேள்விதான் எனக்கு ரொம்ப முக்கியமான இடம். ஒரு வாசகனாக, நான் எழுத்தாளனுக்கு மிகவும் நெருக்கமாக உணரும் இடமும் அது தான்.
அந்த கடைசி கேள்வி தான் ரொம்ப முக்கியமான இடம் – அந்த கடைசி கேள்வி கட்டுரையை முடிக்கிறது இல்ல அதை நிறைவு மட்டும் செய்யுது. அது கதவை மூடுறது இல்ல கொஞ்சம் திறந்து விடுது. அந்த இடத்திலிருந்து தான் அந்தக் கட்டுரை அதோட அடுத்த தளத்துக்கு போகுது.
உண்மையில் ஒரு நல்ல கட்டுரை தொகுப்பு முடிவில் நிற்கக் கூடாது என்பதே என் எண்ணம். அது பதில்களால் தன்னை மூடிக்காம, மேலும் சிந்தனைக்கும், உரையாடலுக்கும், முரண்பாடுகளுக்கும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். அப்படியான ஒரு கட்டுரைத் தொகுப்பு யாதும் காடே யாவரும் மிருகம்.