வெளிப்படையாக பார்த்தால் கதாபாத்திரங்களை பற்றிய கதையாக இருந்தாலும் உண்மையில் இது எல்லாரையும் இழுத்து அணைத்துக்கொள்ளும் நல்ல மனிதர்களின் கதை. அன்பின் கதை. தோதுபடாத இடத்தில் சிக்கி அவதிப்படும் காதலின் கதை. எல்லோருக்குமே வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், ‘என்ன வாழ்க்கை இது, அன்பை மட்டுமே கொடுத்து, அன்பை மட்டுமே வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என நினைத்திருப்போம். அப்படியொரு நிமிஷத்தில் தி.ஜா இந்தக் கதையை எழுதியிருக்கலாம். http://omnibus.sasariri.com/2012/10/b...
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
தி.ஜானகிராமனின் “உயிர்த்தேன்” நாவலை வாசித்தேன். இதற்கு முன்பு இவருடைய “மரப்பசு” நாவலை வாசித்திருக்கிறேன். அது பல பேருடைய பாராட்டுதலுக்கும் விருப்பப்பட்டியலிலும் இருப்பதைக் கண்டு, நான் வாசிப்பதற்கு முன்பே நண்பர்களுக்கு பரிந்துரை செய்து என் புத்தகத்தை இரவலாகத் தந்தேன். ஆனால் இருவரும் சொல்லி வைத்தார் போல் 20 பக்கங்களை கூட தாண்டாமல் “வாசிப்பதற்கு கடினமாக” இருப்பதாக கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்படி என்ன கடினமாக இருக்கிறது என்று “மரப்பசுவை” நானும் வாசிக்கத் தொடங்கினேன்.
“ஆமா.. தி.ஜா. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்காரு..” என தனிமையில் சொல்லிக் கொண்டே “மரப்பசுவின்” அம்மணியை வாசித்து முடித்தேன். அம்மணியை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். “மரப்பசுவை” படித்து முடித்ததும் “நல்லா இருக்கு.. ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்பதே தி.ஜா.வின் எழுத்து பற்றிய என் மதிப்பீடாக இருந்தது.
ஆனால் “உயிர்த்தேன்” படிக்கத் தொடங்கியதும் தி.ஜா. பற்றிய என் மதிப்பீடு முற்றிலும் மாறிப்போய்விட்டது. “மனிதர் இப்படி கிறங்கடிக்கும்படி எழுதக் கூடியவரா?” என வியந்து, “அதனால் தான் தி.ஜா.வை நிறைய பேர் கொண்டாடுகிறார்கள்” என என் புதிய மதிப்பீடுக்கு நியாயம் சேர்த்துக் கொண்டேன்.
“உயிர்த்தேன்” நாவலில் ஆறுகட்டியை வர்ணிப்பதிலும், அவர் படைத்த மனிதர்களின் குணநலன்களை வாசகனுக்கு கடத்துவதிலும், சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்ற கதாபாத்திரங்களை உரையாடல்களிலும் என்று மனிதர் புகுந்து விளையாடுகிறார்.
“மரப்பசு” நாவலில் அம்மணி போல் “உயிர்த்தேன்” நாவலில் செங்கம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரம். தி.ஜா. வின் எழுத்து வாசகனையும் அவளை விரும்ப வைத்துவிடுகிறது. அவளுக்கு நாவலில் எந்த தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை கொடுத்துவிடுகிறது.
செங்கம்மா கதாப்பாத்திரத்தைத் தாண்டி பட்டணத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊருக்கும் செங்கம்மாவின் பேச்சைக் கேட்டு ஊர் மக்களுக்கும் நல்லது செய்யும் பூவராகன், மனைவின் மீது மதிப்பும் அவளது புத்திக் கூர்மையை வியந்தும் பார்க்கும் கணேசப்பிள்ளை, பூவராகன் மீது சிறுவயதிலிருந்து அன்போடு பழகி வரும் நண்பனும் மாமன் மகனுமாகிய நரசிம்மன், இன்னொரு பெண் பேச்சைக் கேட்டு நடக்கிறாரே என கணவன் மீதும் “இவள் யார் என் வீட்டை அதிகாரம் செய்ய” என்று செங்கம்மா மீதும் துளியும் வெறுப்பு கொள்ளாத பூவராகனின் மனைவி ரங்கநாயகி, ஊரே ஒத்துப்போனாலும் பூவராகனின் மீது வெறுப்போடு இருப்பதும் முடிவில் திருந்தி வருந்தும் பழனிவேலு என அனைவரும் “தி.ஜா.வின்” எழுத்து மூலம் உயிர் பெற்று நாவல் முழுவதும் நடமாடுகிறார்கள்.
இத்தனை இருந்தாலும் நாவல் வாசிக்கும் பொது “விக்ரமன் படம்” மாதிரி இருக்கே என்று தோன்றாமலும் இல்லை. காரணம் நாவலில் வரும் அனைவருமே நல்லவர்கள். பூவராகனை முறைத்துக் கொண்டே திரியும் ஒரே நெகட்டிவ் கதாப்பாத்திரமான பழனிவேலு கூட. வாசகனின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டே வரும் பழனிவேலும் முடிவில் மனம் திருந்தி எழுதும் ஒரு கடிதத்தில் கணேசபிள்ளை, செங்கம்மாவோடு சேர்ந்து நம்மையும் கண் கலங்க செய்துவிடுகிறார்.
“மரப்பசுவின்” அம்மணிதான் இந்த நாவலில் வரும் அனுசூயாவா எனத் தெரியவில்லை. அந்த கதாப்பாத்திரமும் நாவலின் மையக் கருத்தான “சக மனிதர்கள்” மீது அன்பினை பொழிய வேண்டும் என்பதற்கு வலு சேர்க்கிறது.
நாவல் முழுவதும் அன்பு பற்றியே பேசியிருக்கும் தி.ஜா. நிஜ வாழ்வில் எப்படி சக மனிதர்களோடு பழகியிருப்பார் என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுகிறது.
நாவலில் அனுசூயா கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் சொல்லும், “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி என்று”. அதற்கு அர்த்தமாக “10 தவளையை தராசுல நிறுத்த முடியுமா. ஒண்ண வச்சி இன்னொன்னு எடுக்குறதுக்குள்ள முன்னாடி வச்சது தாவி ஓடிடும். அந்த மாதிரி என் மனசுல இருக்குறத வார்த்தைல சேர்த்து சொல்ல முடியாதபடி ஒவ்வொண்ணும் தாவி ஓடிடுது" என்று. அதுபோல இத்தனை பெரிதாக எழுதியும், இந்த நாவலின் அனுபவத்தை சொல்ல எனக்கு “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி தான் இருக்கு”.
இந்தக் கதையின் உள்ளடக்கமும் அது சொல்லப்பட்ட விதமும் அது சொல்லும் செய்தியும் எல்லாமே உன்னதமானவை. நகரத்தின் சத்தத்திலிருந்து தன் தந்தை சொன்ன கதைகளின் வழி அறிந்த சிற்றூரை மற்ற காலமெல்லாம் வாழ்ந்து பார்த்து அறிந்திட வரும் பூவராகனோடு நாமும் அந்தச் சிற்றூர்க்குச் சென்றது போலான அமைதியையும் இன்பத்தையும் தருகிறது இப்புத்தகம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுப்தாறில் எழுதப்பட்டிருப்பதால் ஆசிரியர்க்குத் தெரியாமலே கூட அந்தக் காலத்தின் பழைமை எங்கேனும் தலை காட்டியிருக்குமோ என்றும் அலசினேன் ஆனால் தி.ஜ என்னையும் தாண்டிய இடத்திலேயே இருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்தியா தன் கிராமங்களில் வாழ்கிறாள் என்று சொன்ன காந்தியடிகள் தற்சார்புப் பொருளாதாரத்திற்கு உருகொடுக்கும் முயற்சியாய் இந்நூலைப் பார்க்கிறேன். பொதுவாக ஒரு குடும்பத்தில் இருப்போர் இப்படி எண்ணுவதுண்டு "காசு என்கிட்ட இருந்தா என்ன என் தம்பி கிட்ட இருந்தா என்ன, அவன் கிட்டயே இருக்கட்டும். குடும்பம் தானே வளரப்போகுது" என்று. இதே போன்ற வழிமுறையை ஒரு ஊரே பின்பற்றினால் அந்த ஊரையே தன் குடும்பம் போல செல்வம் படைத்த பூவராகன் பார்ப்பதால் எப்படிப்பட்ட மாற்றத்தை அது கொண்டு வருகிறது என்பதைச் செறிவாய்க் கூறுகிறது இந்நூல். காந்தியமும் பொதுவுடைமையும் கலந்து உருபெறுகிறது இக்கதையில். அன்புருவாய் இருக்கும் செங்கம்மா ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கின் குறியீடாய் இருக்கிறார். பூவராகனின் தோழி அன்பின் உருவாய் மனதைக் கவர்கிறார்.
"முன்னாடி எல்லாம் ஏதாவதுனா பிள்ளையாரப்பானு கோவில் ல போயி நிப்பேன். இப்போ என் கைல காசு இருக்கு எதாவது பிரச்சினைனா அடுத்து என்ன செய்யணும் னு தான் யோசிக்கிறேன்"
"இறைவன் இலட்சம் படி கட்டி ஒவ்வொரு மனுசாளையும் ஒரு ஒரு படியில வச்சுட்டான். என்ன பண்றது" "இறைவன் ஒரே ஒரு படி தான் கட்டினான்......." ஆகிய வசனங்கள் வலிமையானவை.
எளிமையான ஒரு கதையில் இப்படிப்பட்ட கருவை கோர்த்து எழுதியிருப்பதைக் கண்டு மலைக்காது இருக்க முடியவில்லை.
இதை யேன் எழுதினார், ஒரு வேளை தொடர் கதை எழுதி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்னவோ. செங்கம்மா - தி.ஜா வின் டெம்ப்ளேட் கதாநாயகிகளின் வரிசை அதை தவிர கதையில் சுவாரசியம் மிக குறைவு.
'உயிர்த்தேன்'. தி.ஜாவை படிப்பதற்கும் தேவைப்படுகிறது. சென்னை 4 நாட்களாக மழையின் வெள்ளத்தில் தத்தளித்த போது வீட்டில் மின்சாரம், கைபேசி எதுவும் இன்றி வெறும் மெழுகுவர்த்தி துணையுடனும், நிற்காமல் மழையை பார்த்து ஊழிக் கால மழை எல்லாம் நினைவில் வர இருந்த நாட்களில் ஒன்றில் ஒரு மெழுகுவர்த்தி துணையுடன் படிக்க ஆரம்பித்தேன்.
தி.ஜாவின் பலமே அவரது உரையாடல்கள்தான். இதுவும் அது போலவே உள்ளது. செங்கம்மாவின் கதையாகவே போகும் இந்த நாவல் தி.ஜாவின் சிறந்த நாவல்களில் ஒன்று அல்ல. நாவலின் கதாபாத்திரங்கள், குறிப்பாக செங்கம்மாவும் அனுசூயாவும் கொஞ்சமும் யதார்த்த தன்மை இல்லாமல் இருக்கிறது ஓரு காரணம். அது போலவே கதையின் பல நிகழ்வுகள் சற்று நாடகத்தன்மையுடன் இருப்பதுமே.
பூவராகன் பட்டணத்தில் இருந்து ஆறுகட்டி கிராமத்தில் பூர்வீக நிலங்களை பார்த்து கொள்ள வருகிறார். அவரின் கணக்க பிள்ளை கணேசன் மற்றும் அவரது மனைவி செங்கம்மா சமையல்காரியாக அவரின் வீட்டில் இருக்கின்றனர். ஆறுகட்டியில் பூவிற்கு முன்னர் மிராசாக இருந்த பழனி காரணம் தெரியாத வன்மம் பாராட்டுகிறான். என்ன நடக்கிறது என்பதே கதை.
தி.ஜா காட்டும் அந்த 60களின் உலகம் அதன் பல மாய்மாலங்களுடன் நம்மை மயக்குகிறது.அது ஒன்றே இந்த கதையை காப்பாற்றுகிறது எனலாம். அனுசூயா யார் அவளுக்கும் பூவிற்கும் எப்படி பழக்கம் போன்ற சிறு தகவல்கள் அங்கும் இங்குமாக இல்லாமல் இருப்பதால் அனுசூயாவே ஒரு ஆதர்ச பெண் கதாபாத்திரமாக கதையின் ஓட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியாக ஆகி விடுகிறாள்.
அந்த ஆதர்ச நிலையே கதையின் பலமும் பலவீனமும் எனலாம். அதுவே கதையுடன் ஒன்றமுடியாமல் செய்து விடுகிறது. ஆனாலும் தி.ஜாவின் சில உரையாடல்கள் புன்முறுவலை வரத்தான் செய்கின்றன. "ரொம்ப ஜாக்ரதையாகதான் இருக்கிறேன். இந்த தேசத்திலேயே ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ' வயசு வந்த மகளா இருந்தா அதோட தனியா இருக்காதே'னு நீதி சாஸ்திரம் எழுதி வச்சிருக்கிற புண்ணிய தேசமாச்சே இது. ராவணன் சீதையைத் தூக்கிட்டு போறப்ப, சீதை ஒரு பக்க ஆபரணங்களெல்லாம் கழட்டி போட்டா, வானரங்க மத்தியில விழுந்தது அது. பின்னாலே, ராமனும் லக்ஷ்மணனும் வந்தப்ப, லக்ஷ்மணன் சொன்னனாம் 'எனக்கு காது கை தெரியாது, மூக்கு நகை தெரியாது, கை நகை தெரியாது, கால் கொலுசுதான் தெரியும்'னு, கற்புக்கனல்,அருள் வீசுது முகம் - அதை பார்க்கவே கூசினானாம் இவன். அவ்வளவு சுத்தாத்மா! ராமாயணம் எழுதின மகானா இந்த அசிங்கத்தை எழுதுவான்! பின்னால் வந்த நாட்டமைகாரன் எவனோ அப்படி சாமர்த்தியமா செருகியிருக்கிறான். ஆகா ஆகா எப்பேர்ப்பட்டவன், எப்பேர்ப்பட்டவன்னு எத்தனை ஆடுங்க தலையாடிக்கிட்டே வருது அன்னியெ பிடிச்சு! சீதைய அசோக வனத்தில இருந்து பல்லக்கிலே ஏத்திக்கிட்டு வரப்ப, 'எல்லோரும் பாக்கட்டும், திரையை விலக்குங்கடா'ன்னு ராமப் பிரபு உலகத்துக்கு அந்த அருளைப் பளிச்சுன்னு திறந்து காமிச்சான். லக்ஷ்மணன் கால் நகைதான் தெரியும்னு சொன்னானாம். அத்தனை அயோக்கியனா அவனைப் பண்ணனும்னு தோணிச்சே பின்னால வந்த நாட்டமைக்காரங்களுக்கு! எப்பேர்பட்ட புண்ணிய பூமி! என்ன பண்பாடு "ப்ராய்ட்" எல்லாம் தோத்து போகணும். நான் ஜாக்கிரதையாத்தான் இருக்கேன். பயப்படாதே" ..... "என்ன இத்தனை ஆவேசம் வந்தது உனக்கு? ராமாயணத்து மடியிலேயே கை போட்டுட்டியே!" "நான் போடலே, நாமெல்லாம் கெட்டு போயிடப்படாதுன்னு கண்ணில விளக்கெண்ணையைப் போட்டுக்கிட்டு கவலைப்பட்டு புதுசு புதுசா சேர்க்கராங்களே , அவங்களை சொன்னேன் சிங்கு"
இதை படிக்கும் போது இப்போது உயிரோடு இருந்திருந்தால் தி.ஜா என்ன பாடு பட்டிருப்பார் என்று தோன்றாமல் இல்லை.