Jump to ratings and reviews
Rate this book

ராஜா வந்திருக்கிறார்

Rate this book
கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். "ராஜா வந்திருக்கிறார்" என்ற அவரது இந்தத் தேர்ந்தடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.

270 pages, Paperback

First published January 1, 2012

7 people are currently reading
111 people want to read

About the author

வாழ்க்கைச் சுருக்கம்

அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

’உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.
இதழாசிரியராக

அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

"ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.

"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.

"ராஜா வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.
மலேசியாவில் பணி

"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி.

மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின[6].
மீண்டும் தமிழகத்தில்

1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.
படைப்புகள்
புதினங்கள்

டாக்டர் அனுராதா
தீராத விளையாட்டு
புது வீடு புது உலகம்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (40%)
4 stars
19 (45%)
3 stars
3 (7%)
2 stars
0 (0%)
1 star
3 (7%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for MJV.
92 reviews39 followers
April 26, 2020
ராஜா வந்திருக்கிறார்:
தொடர்ந்து சில ஆங்கில புத்தகங்கள் படித்து விட்ட படியால், தமிழ் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவல் தோன்றிற்று. எனது வாசிக்கும் பழக்கமும் இவ்வாறாக கடந்த சில மாதங்களில் மாறிப்போய் உள்ளது. சரி எந்த புத்தகம் எடுக்கலாம் என்று தடுமாறும் அளவுக்கு புத்தக தட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதில்லை பெரும்பாலும். ஆதலால் இடைசெவல் கிராமத்தில் பிறந்து பழம்பெரும் எழுத்தாளர் கி.ரா அவர்களோடு நெருக்கமாய் இருந்த கு.அழகிரிசாமி அவர்களுடைய ராஜா வந்திருக்கிறார் புத்தகம் கண்ணில் பட்டது.

மிக நேர்த்தியான கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது அவரது கதைகள் அனைத்துமே இவ்வளவு நேர்த்தியான அடித்தளங்கள் கொண்டவையா என்று எண்ணிக்கொண்டே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அட்டைப்படம் முதல் கடைசி பக்கம் வரை பிடித்து இருத்தி இட்டு செல்கின்றன கதைகள். வாசிப்புக்குள் இப்படி இருந்தால் பிடிக்கும், வேகமாக விறுவிறுப்பாக இருந்தால் பிடிக்கும் என்ற எல்லைக் கோடுகளை தாண்டி வெகு காலங்கள் ஆயிற்று. மனித மனங்களின் போராட்டங்களை, உறவுகளின் விரிசல்களை, உணர்வுகளின் பிரதிபலிப்பை இயல்பாக சொல்லி செல்கிறார்.
முதல் கதையான வெந்தழலால் வேகாது என்பதில் தொடங்கி எனக்கு மனதுக்கு மிக நெருக்கமாக மாறிப் போன ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, திரிபுரம், சுயரூபம், இரு சகோதரர்கள், குமாரபுரம் ஸ்டேஷன் கதைகளாகட்டும் ஒவ்வொன்றுக்குமான உயிர் நாடியாய் இருப்பது மனிதர்கள் தான். மிக ஆழமாக மனிதர்களையும், மனிதர்களின் வாழ்வியலையும் ஒவ்வொவொரு கதையிலும் அலசியிருக்கிறார். கதைகளுக்குள் சரளமாக மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஒரு கதையில் வருகிற அனைவரையும் மனதில் நிறுத்தும் மிகப் பெரிய வரம் எனக்கு கிடைக்கப் பெற்றது.
குறிப்பாக "திரிபுரம்" கதையில் நரசம்மாவும் வெங்கட்டம்மாவும், ஆந்திரத்தில் இருந்து பசி வாட்டும் பொழுதுகளை சுமந்து வரும் போதும், அந்த ஒரு வேளை உணவின் ஏக்கங்களை தூக்கி எறிந்து விடுவார்களா அல்லது உணவின் ஏக்கங்கள் அவர்களை விழுங்கி தீர்த்து விடுமோ என்ற அச்சத்தில் நகர்ந்தன வரிகளும், அவர்களின் அன்றைய பொழுதும்.
இனி அடுத்த நாளை எப்படி அந்த இருவரும் எதிர் கொள்ளப்போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வியில் நம்மை நிறைக்காமல் திரிபுரத்து சிவனின் சிரிப்பையே வைத்து முடியுமந்த கதையை தாண்டி அடுத்த கதைக்கு செல்ல நேரங்கள் தேவைப்படுகிறது.

"சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான்; இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள் ? அந்தக் காலத்து புத்திமான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குதான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய, ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றி பிரஸ்தாபிக்க வில்லையே!"

இரு சகோதரர்கள் கதையின் அடிநாதம், எதுவும் நடக்க வேண்டிய காலங்களில் நடந்தேறவில்லையென்றால் வறுமையில் உழலும் மக்களுக்கு எதுவுமே நிலைப்பட்டு நில்லாது செல்லும் என்பதே. மூத்த அண்ணனின் இந்த வார்த்தைகளில் உயிர் நெரிக்கப்பட்டு வீடு விட்டு வேறு திசையில் பயணிக்கிறான்.

"பிணங்களுக்குள் வரன்முறை கெடுவது அவ்வளவு பயங்கரமான விஷயமல்ல; பிணங்களாக இருப்பதுதாண்டா பெரிய பயங்கரம். போ... எங்காவது போய்ச் சௌக்கியமாக இரு. எப்படி வேண்டுமானாலும் இரு".

அன்பளிப்பு என்னும் கதைக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டதாக அந்த கதை படித்து முடித்த பின்புதான் அறிந்தேன். குழந்தைகளின் உலகில் எப்போதுமே வேறுபாட்டிற்கு இடமில்லை என்பதை எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். இருந்தும் அவர்கள் மாறிப் போவதற்கு நாம்தானே முழு முதற்காரணம். "ஏய் உள்ள எடுத்திட்டு போய் சாப்பிடு, இப்படி எல்லாருக்கும் சொல்லாத, நீ முதல்ல முடிச்சியா?". இப்படி சொல்லி சொல்லி அவர்களின் வேறுபாடில்லாத வேர்களை வெந்நீர் ஊற்றி, தினம் தினம் கொன்று கொண்டுதான் இருக்கிறோம்! சாரங்கன் ஒரு போதும் மறக்க முடியாத ஒரு குழந்தை...

கீரனை எரித்து மீண்டும் உயிரோடு கொண்டு வந்த கயிலை சொக்கநாதர் அதன் பிறகு என்னென்ன யோசிக்கிறார் என்பதான போக்கில் வரும் கதை வெந்தழலால் வேகாது, மிக நகைச்சுவையான கற்பனை. அது சிவன், பார்வதி, கீரர், கபிலர் பற்றியோரை மட்டுமே நினைத்து எழுதப்பட்ட கதை என்று நினைப்பதை தாண்டி நம்மைப் பற்றி சொல்லப்பட்ட கதை என்றே எனக்கு தோன்றியது. மன்னிப்பதோடு மட்டும் அந்த மன்னிப்பின் உயிர்ப்பு தீர்ந்திடுமா என்ன!!!!

பசி என்ற கொடுமை பிணி நிறைந்து நம்மை வாட்டும் பொழுதினில் வரும் ஒரு ரூபம் இருக்கும் பாருங்க அதுதான் நம்மில் அனைவரின் சுயரூபம். பெரும்பாலும் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம் அல்லது ஒரு சில நேரங்களில் தள்ளப்பட்டிருப்போம். சுயரூபம் கதையில் இரு நண்பர்களாக நினைத்துக் கொண்ட இருவரின் உரையாடல் வாழ்வின் அனைத்து கதவுகளையும் ஒரு முறை தட்டி செல்கிறது!!!

இந்த தொகுப்பில் மேலும் மிக முக்கியமான கதைகள் இருக்கின்றன. ராஜா வந்திருக்கிறார் கதையின் ஆழம் ஒரு முறை எங்கேயோ யாரோ சொல்ல கேட்டிருப்பதாய் நினைவு. சிறுகதைகளின் தாக்கம் உண்மையில் பெரியதாய் இருக்கும், அதை எழுதுவது நாவல் எழுதுவதைக் காட்டிலும் மிக சிரமம் என்று ஓர் உரையில் எஸ்.ரா அவர்கள் குறிப்பிட்டது நினைவில் வந்து சென்றது.

வேறு வேறு அனுபவங்களை விதைத்து செல்லும் 18 கதைகளை தாங்கிய புத்தகம். படித்துப் பாருங்கள்....
Profile Image for Abirami Sridhar .
64 reviews4 followers
March 11, 2025
கல்லூரிக் காலங்களிலேயே கு . அழகிரிசாமி அவர்களின் கதை தொகுப்பை படித்திருந்தாலும் நீண்ட நாட்களாகியதால் அவரது எழுத்தை மீண்டும் படிக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அதிலும் ராஜா வந்திருக்கிறார் புத்தகம் சமீபமாக பலராலும் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருவதால் இந்த புத்தகத்தையே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என வாசிக்கத் தொடங்கினேன். மொத்தம் 18 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வைக் கடத்தி மனதில் பலவித எண்ணங்களையும் சுய அலசல்களும் ஏற்படுத்துகின்றன. 


கல்யாணகிருஷ்ணன், சுயரூபம் போன்ற கதைகள் நகைச்சுவையானதாகவும் தன்னையரிந்தவர், தேவஜீவனம் போன்ற கதைகள் சாமானிய மனிதனின் ஜீவனத்தையே கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் இருந்தன. ஒவ்வொரு கதைக்குள்ளும் உயிர் நாடியாக இருப்பது மனிதர்கள் தான். பல்வேறு மனிதர்களையும் அவர்களது அழகான ஆழமான மனதையும் அச்சாகப் பிரதியெடுத்தது போல் எழுதியிருக்கிறார். மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஆழமாக அலசி இருக்கிறார். சிறுகதைகளில் சுருக்கமாக எப்படி ஒரு உணர்வை வாசகர்களுக்குக் கடத்த முடியும் என யோசிப்பவர்கள் இக்கதைத் தொகுப்பை நிச்சயமாக வாசிக்க வேண்டும். 


இக்கதை தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கதைகள் திரிபுரம், பாலம்மாள் கதை, இரு சகோதரர்கள், மற்றும் முகக் களை. அன்பளிப்பு சிறுகதையை நான் எனது கல்லூரி தமிழ் பாடத்திலேயே வாசித்திருப்பதால் அதை மீண்டும் நினைவுகூர்ந்ததில் மகிழ்ச்சி உண்டாயிற்று. பசி பஞ்சம் பொறாமை பேதமை வறுமை இறப்பு துன்பம் அன்பு என வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை அழகில் சாமி அவர்கள் மிக அற்புதமாக தனது எழுத்துக்களில் உருண்டோட வைத்துள்ளார்.


 ராஜா வந்திருக்கிறார் கதையில் தாயின் அன்பும் திரிபுரம் கதையில் வரும் தாயின் அன்பும் எவ்வாறாக மாறுபட்டு இருக்கின்றன என்பது பிரமிப்பைத் தருகிறது. வெந்தழல் வேகாது மற்றும் திரிவேணியில் வரும் கடவுள் பாத்திரங்களின் நடவடிக்கைகள், அழகம்மாள் மற்றும் பாலம்மாள் கதையில் வரும் பெண்கள், சுயரூபம் மற்றும் இரு சகோதரர்களில் வரும் ஆண்கள், தேவஜீவனம் மற்றும் தன்னை அறிந்தவர் கதைகளில் வரும் ஆண்கள், முகக்களை மற்றும் திருவொற்றியூர் வள்ளியில் வரும் பெண்கள் என  இத்தொகுப்பின் பல கதைகளில் வரும் பாத்திரங்களை ஒப்பீடு செய்து பார்க்கவே தோன்றுகிறது. 


ஒவ்வொரு கதையை படித்து முடித்த பின்பும் அப்பாத்திரங்களோடு நம்மை பொருத்திவிட்டு அவர்களோடு நாம் எவ்வாறு புரிந்து இருக்கிறோம் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறோம் என ஆழமாக சிந்திக்க வைக்கும் எழுத்து. கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களில் கட்டாயமாக கு.அழகிரிசாமி அவர்கள் இருந்தே தீர வேண்டும்.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.