பழைய புத்தகங்களைத் தேடி வாசிக்கின்றவன் என்ற காரணமே விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை தேடிப்படிக்க முக்கிய காரணமாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த கட்டுரை புத்தகங்களில் மிக முக்கியமானது என்று இந்த நூலைக் கூறுவேன்,
விட்டல்ராவ், சிறந்த எழுத்தாளர், ஒவியர், கட்டுரையாளர், அவரை திருவல்லிகேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் நானே பலமுறை பார்த்திருக்கிறேன், நுண்கலைகள் பற்றி தேர்ந்த அனுபவமும் தெளிந்த ஞானமும் கொண்டவர்,
தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும் பழைய புத்தக கடைகாரர்களின் குணாதிசயங்களையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார், இது ஒரு அரிய ஆவணப்படுத்துதல், - http://www.sramakrishnan.com/?p=3463
விட்டல்ராவ், எழுத்தாளர், ஒவியர், மற்றும் கட்டுரையாளர். எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரும்கூட. எழுத்தாளர் என்ற ஒற்றைச் சொல்லில் அவரை அடையாளப்படுத்துவதும்கூட ஒரு வகையில் அவரைக் குறைத்துக் கூறுவதுதான். அவர் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, ஏராளமான சிறுகதைகள் மற்றும் தமிழின் முக்கியமான மூன்று நாவல்கள் தவிர, தமிழ் திரைப்பட வரலாற்று (விமர்சன) நூல் ஒன்றும் கன்னடத் திரைப்பட வரலாற்று நூல் ஒன்றும் எழுதியவர். இவை தவிர வரலாறும் அவர் ஆர்வம் அதிகம் கொண்டுள்ள ஒரு துறை. அதில் தமிழகத்தின் கோட்டைகள் குறித்து அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த தமிழகத்துக் கோட்டைகள் நூல்.