யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. காலமே அதை வழிநடத்திச் செல்கிறது. மாற்றங்கள் அவை நடக்கும் காலத்தில் முழுமையாக உணரத்தக்கவையாக இல்லை. மாற்றங்களின் வெளிப்பாடுகளை அவற்றின் வேர்களோடு தரிசிக்கச் செய்வது புனைவின் பெரும்கொடை. அந்த அற்புதமான அனுபவத்தை இந்த நாவலில் பெறலாம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கும் கதை சற்றே உன்னிப்பாகக் கவனிக்கும்போது ஒரு காலகட்டத்தின் கதையாகவும் மனிதர்களின் கதையாகவும் வாழ்க்கையும் உறவுகளும் மாறிவரும் விதம் குறித்த தரிசனமாகவும் விகாசம் பெறுவதை உணரலாம். கதை நிகழும் களம் இருபதாம் நூற்றாண்டின் அறுபது ஆண்டுகள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்புகளும் மாபெரும் மாற்றங்களும் நிகழ்ந்த காலகட்டம். காலனி ஆதிக்கத்தின் தாக்கமும் அதிலிருந்து விடுபடும் திமிறலும் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய வாழ்வு நவீனத்துவத்துடனான தன் போராட்டத்தையும் மேற்கொண்டது. இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வையும் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் மதிப்பீடுகளையும் பெருமளவில் மாற்றி அமைத்தது. வேரிலிருந்து முற்றாக வெட்டிக்கொண்ட மாற்றங்களும் வேர்களின் தன்மைகளை உள்வாங்கிய மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தின் பெரும் சலனங்களை ஒரு குடும்பத்தின் பின்னணியில் வைத்து நமக்குக் காட்டுகிறது அசோகமித்திரனின் கலை. பிரகடனங்கள் அற்ற இயல்பான வெளிப்பாடாக அமைந்துள்ளதே அசோகமித்திரனின் கலையின் சிறப்பு. அந்தச் சிறப்பை இந்த நாவலிலும் உணரலாம். — அரவிந்தன்
Though this novel speaks about war, it is not entirely based on it. It is a story of a family, which travels through 60 years of various emotions and torments of life. It is set in the early twentieth century, during which the entire world was going through various changes. It was the time when colonial rule was at its peak and people were striving to oppose it. All these changes and their impacts are narrated from the perspective of a family. Narrated without exaggeration, the unique style of Ashokamitran, echoes everywhere in this novel.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
என்னைக் கவர்ந்த பாதித்த எழுத்தாளர்களின் அசோகமித்திரனுக்கும் ஒர் இடம் உண்டு. அவர் தன்னுடைய வாழ்க்கையில் எழுதிய கடைசி நாவல்தான் இந்நூல், சுயசரிதம் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சொந்த வாழ்க்கையின் மீட்சியை வைத்து இக்கதையை எழுதியுள்ளார். இந்நாவல் இடம் பெறும் காலம் இரண்டாம் உலகப்போர் யுத்தம் ஆரம்பிக்கும் தருணம்.
இந்நாவல் குறிப்பிடும் யுத்தம் ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடக்கும் யுத்தம். ஆரம்பத்தில் வாசிக்கும் போது முடிச்சுகளே இல்லாத பல கிளைகதைகளை வாசிப்பது போல உணர்ந்தேன், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு நபருடைய கதைகளை அடுக்கிக் கொண்டே போவார், ஆனால் போகப் போக இவை அனைத்தும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலோடு இணைந்தது. இருந்தாலும் பல குழப்ப நிலை இருக்கத்தான் செய்தது. இதனால் தானோ என்னவோ இந்நாவலை பற்றி பலரும் அவ்வளவாக பேசவில்லை என்றும் தோன்றுகிறது.
பெண்களின் அவலம் தான் அந்த யுத்தம். இளம் வயதிலேயே மணமாக்கப்பட்டு விதவை கோலத்தில் வாழும் அவலம். அந்நாட்களில் எல்லாம் விதவை என்றால் மறுமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை, அதிலும் ஐயர் வீட்டு பெண்கள் என்றால் தலையை மழித்து வீட்டிற்குள்ளே அவர்களுடைய வாழ்வை வாழ்ந்து கழிக்க வேண்டியது தான் வாழ்க்கை என எழுதப்பட்டிருக்கிறது என வாழ்ந்து வந்தார்கள். இந்நாவலில் இருக்கும் பெண்களும் இப்படித்தான்- பெரும்பான்மையானவை. இப்படி சாவை சாபமாக வாங்கிய குடும்பம் என்ற நிலைக்கு தள்ளப்படும் அளவுக்கு அந்த குடும்பத்தை மரணம் காவு வாங்கிக் கொண்டே இருக்கும். இருந்தும் அக்குடும்பநபர்கள் அவர்களுடைய வாழ்க்கையை போராடி வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். பிழைப்பிற்காக பல ஊர்களில் வாழ்ந்தார்கள். சொந்த ஊரான தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்திலும், மும்பையில் பல ஆண்டுகள், முடிவில் ஹைதராபாத்தில் மீதம் மிஞ்சி இருந்த மூன்று ஆண்களின் குடும்பம் வாழ்ந்தது. அதில் ஓர் குடும்பம் தான் அசோகமித்திரனுடையதாக இருக்கக்கூடும் என்று நான் உணர்ந்தேன்.
அந்த குடும்பத்தின் அவலத்தை அவர் காண்பித்த விதம் அவருடைய தோணியிலேயே எளிதான நடையில் ஆழமான வலிகளை உள்ளடக்கி இருந்தது. இந்நூலை பல தூசிகளுக்கிடையில் எங்கள் ஊரில் உள்ள கிளை நூலகத்தில் கிடைத்தது. இப்பொழுது அச்சில் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை முடிந்தால் தேடி வாசித்து பாருங்கள்.
“யுத்தம் நடைபெறும் போது, யுத்த களத்தில் மனித உடல்கள் சிதைந்து கொண்டிருக்கிறது, யுத்த களமாக இல்லாத இடத்தில் வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது”
அசோகமித்ரனின் மற்றொரு அருமையான நாவல். வழக்கமான அசோகமித்ரனின் எழுத்தாக இருந்த போதிலும் இந்த நூலின் அமைப்பு சுவாரசியமாக இருந்து. நான்-லீனியராக கதை சொல்ல முயன்றிருக்கிறார்.. இரண்டு உலக யுத்தங்களுக்கு இடையில் நடைபெறும் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கை யுத்தத்தை பற்றின கதை. பிராமண சமூகத்தில் பெண்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை பதிவு செய்யாத அந்த சமூகத்தை சார்ந்த எழுத்தாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக கணவனை இழந்த இளம் விதவைகளின் வாழ்க்கை. இந்த கதையில் பல மரணங்கள் நிகழ்கின்றன, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நிறைய மரணங்கள் ஒரே குடும்பத்தில் நிகழ்கின்றன... படிக்கும் போது ஒரு அலுப்பு ஏற்படும் அளவிற்கு மரணங்கள் நிகழ்கின்றன, கதையின் அமைப்பு நம்மை அதை கடந்து இறுதி வரை கொண்டு செல்கிறது... வழக்கமாக அ.மி யின் கதை முடிவில் வரும் வாக்கியங்கள் அந்த மொத்த கதையின் மீதான நம் அபிப்பிராயத்தையே மாற்றிவிடும்.. அது போல இந்த நாவலின் கடைசி வரிகள், நாவல் முழுக்க நிகழ்ந்த மரணத்தால் அவதிக்குள்ளான அனைத்து பெண் கதாபாத்திரங்களும் நினைவில் வருகிறார்கள்.
“யார் இருந்தால் என்ன? யார் மறைந்தால் என்ன? பெண்கள் சுகப்படுவதில்லை. சாபம் என்பது உண்மையோ?அது உண்மையானால் அது எப்போது தீரும்?”
இது ஒரு சாதாரண வரியாக தோன்றும் இந்த வரியின் வீரியம் உணர இந்த நாவலை வாசிக்க வேண்டும்.
Asokamitran Never disappoints. 112 pages he explained the life of a middle class family between 1918 to 1945 . This is one awesome book . At the end of the day , You have to live because you were born :)