முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆகிய துறைகளிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக்கப்பட்டுள்ளன. இலக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்', அமெரிக்கவாழ் தமிழர்களின் 'விளக்கு' ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிஃபோர்னியா, சிக்காகோ மற்றும் யேல் பல்கலைக்கழகங்களிலும் ஃப்ரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றிருக்கிறார். வோடோஃபோன் - க்ராஸ்வோர்ட் மொழிபெயர்ப்பு விருதுககான நடுவர் குழுவிலும் பலமுறை பங்கேற்றிருக்கிறார்."
Dilip Kumar, whose mother tongue is Gujarathi, is a well-known short story writer and editor in Tamil with several awards to his credit. He is a Chennai-based bookshop owner. He has published three short-story collections and a critical work on Late Mouni, a pioneer of Tamil short stories. He has also translated poems, short stories, and other texts from Hindi, Gujarathi, and English into Tamil. He has edited a volume of Contemporary Tamil Short Fiction (in English) published in 1999. More recently, he has completed editing a huge volume of Tamil short stories—entitled 100 Years of Tamil Short Stories—translated into English to be published by Westland Ltd. His stories have been translated into Malayalam, Kannada, Telugu, Bengali, Gujarati, Hindi, English, French, Czech, and German. He has given talks on contemporary Tamil literature at the Universities of California and Chicago, and Yale, as well as at INALCO, France. He has also served as a jury member of the panel for the prestigious Crossword National Award for best translation and for the Sahithya Akademi translation awards.
மிகத்தாமதமாகத்தான் காபியின் சுவை என் நாவுக்குப் பரிச்சயமானது. என் முப்பதுகளின் இறுதியில்தான் காபி ஒரு அத்தியாவசிய திரவமாக என் வாழ்வில் நுழைய ஆரம்பித்தது. ஜெர்மனியின் ஆட்டோபானில், என் தனிமையான நெடும் பயணங்களில், தூக்கத்தை தவிர்க்க எடுக்க ஆரம்பித்த எஸ்பிரசோ கோப்பையின் வழியே ஆரம்பித்த பயணம், உலகின் பல இடங்களுக்கு விரிந்தது. பிறகுதான் நம்மூர் பில்டர் காபி வந்து என் மனதோடு ஒட்டிக்கொண்டது. காபியின் சிறப்பான சுவையைத் தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். கூர்க், சிக்மகளூர் என்று காபியின் தோற்றுவாய் வரை சென்று தேடியிருக்கிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் அடைந்திருந்த நேரத்தில்கூட, ஒரு கோப்பை காபிக்காக பெங்களூரில் இருந்து குணிகல் வரை எழுபது மைல் காரோட்டி சென்று வந்திருக்கிறேன். அப்படித் தேடித் தேடி அலைந்தது பருகிய கோப்பைகளில் பல, காபிக்கு பதில் ஏமாற்றத்தைத் தான் தந்தன. இருந்தபோதும் என் தேடல் மட்டும் தளரவேயில்லை. இடையிலோரு முறை புதிதாக ஒரு பார்சி உணவகத்திற்கு நண்பர்களோடான சந்திப்பிற்காக சென்றிருந்தேன். பொதுவாக பார்சி உணவுவகைகள் சுவையாக இருந்தாலும், அதீத காரம் இன்றி மிதமான சுவையுடன் இருக்கும். அன்றும் அப்படித்தான். உணவு முடித்தபின், ஒரு கோப்பையில் காபியை கொண்டுவந்து வைத்தனர். அவர்களின் உணவை வைத்து, இவர்களின் காபிக்கோப்பையை சற்று அலட்சியத்துடனே எடைபோட்டு வாயில் வைத்தேன். அது நாவில் படர்ந்தபின்தான் சுருக்கென்று உறைத்தது அதன் சூடு மட்டுமல்ல, அத்தோடு, இதுவரை கண்டறியாத வேறு ஒரு தரத்திலான அதன் சுவை... இதுவரை சுவை என்று வரித்திருந்தவற்றை மறுவரைவு செய்யும் ஒன்று அது என்றும் தோன்றியது. அந்த கோப்பையை குடித்து முடித்ததும் இன்னும் ஒரு கோப்பையை மனம் கெஞ்சியது. தயக்கத்துடன் இன்றைக்கு இது போதும், வேண்டுமானால் இன்னொரு முறை திரும்ப வரலாம் என்று தேற்றிக்கொண்டு விலகி வரவேண்டியதாயிற்று. பிறகு சிலமாதங்கள் கழித்து அந்த உணவகத்தைத் தேடி சென்றபோது அது மூடப்பட்டுவிட்டது என்றறிந்தபோது அது ஏற்படுத்திய ஏமாற்றமும், ஏக்கமும் அளவில்லாதது. அதற்கப்புறம் பலமுறை பெங்களூரிலும், புனே நகரிலும் வெவ்வேறு பார்சி உணவகங்களைத்தேடிச் சென்று, காபி அருந்தியபோதும், அந்த சுவை கிடைக்காமல் இன்று வரை அந்த ஏக்கமும் ஏமாற்றமும் நீங்காமலே மனதோடு தங்கி இருப்பது உண்மை. அப்படி ஒரு ரசனையைப் புரட்டிப்போடும் ஒரு புத்தகம் தான் “ரமாவும் உமாவும்” என்ற தொகுப்பு. இதை எழுதிய திலீப் குமார் குஜராத்தி மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர். தமிழகத்தில் சிறுபான்மையாக வாழும் குஜராத்தி சமூக பின்னணியில் தன் படைப்புகளை உலாவவிடுபவர். சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் சமீபத்தில் இவர் எழுத்தைப்பற்றி எழுதிய பதிவில் இருந்து தேடி இவரின் இந்தத் தொகுப்பை கண்டடைந்தேன். தமிழில் மிகக்குறைவாகவே எழுதியுள்ள இவருடைய மீந்திருக்கும் தொகுப்புகளும் கிடைப்பது அறுதியாகவே உள்ளது. இன்று ஆர்ப்பாட்ட்ங்களுடன் இருக்கும் தமிழ் இலக்கிய சந்நிதானங்களின் இருப்பை எந்த அலட்டலும் இல்லாமல் அசைத்துப்பார்க்கும் எழுத்து இவருடையது. அவர், தமிழில் இனி எழுதுவதில்லை என்பது ரசனையோடு சிறப்பான வாசிப்பனுபவம் தேடும் என் போன்றவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தரும் செய்தி. நான் இந்தத்தொகுதியில் வாசித்த ஒவ்வொரு படைப்பும், அவ்வளவு கச்சிதமாக, மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகுப்பில் உள்ள முதல் குறுங்கதையான, “ரமாவும் உமாவும்” பாலியல் அடிநாதத்ததோடு ஆரம்பித்தபோதும், அங்கிருந்து மிக கச்சிதமாக தடமாற்றி மெல்லிய மனித உறவின் இழைகளை தொட்டுச்செல்கிறது. அடுத்த படைப்பான “ஒரு எலிய வாழ்க்கை” ஆங்கிலத்தில் Black Comedy வகையில் அமைந்துள்ள கதை. நகைச்சுவையுடன் ஓடி திடும் என அதிரவைத்த முடியும் படைப்பு. அடுத்து வரும், “நா காக்க அல்லது ஆசையும் தோசையும்” குஜராத்தி சமூக பின்னணியில் அதன் வழக்கமான பிம்பங்களை ( stereotyped image) உடைத்து, உணர்வின் பின்னணியில் நம்மைக் கரைய வைக்கும் படைப்பு. பிறகு வரும் “ஒரு குமாஸ்தாவின் கதை” மற்றும் “ அவர்கள் வீட்டுக் கதவு” ஆகியவை பெரும்பான்மை மதத்தினரின் வெறுப்பும் மதவெறியும் எப்படி மாற்று மதத்தினரை கொடிய மரணத்தில் தள்ளுகிறது என்று கூறி வாசிப்பவரை கலங்கவைத்து அவர்களின் மனசாட்சியோடு உரையாட வைக்கிறது. நறுக்குத்தெரித்தால் போல் குறைவான பக்கங்களுடன் , மொத்தம் ஐந்து படைப்புகளை மட்டும் கொண்டு, வாசித்து முடிந்தவுடன் இன்னும் வாசிக்கவேண்டும் என்ற ஏக்கத்தையும் தவிப்பையும் நம்மிடம் கடத்திவிடும் தொகுப்பு இது.. மிகசிறப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கும், தவறவிடவேகூடாத தொகுப்பு இது.
"ஏனோ தெரியவில்லை வலுவான கதவுடையவர்கள் வலுவற்ற கதவுகளைத் தேடித் தேடி உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் கதவுகளை யாருக்கும் பிடிக்கவில்லை. அவர்களையும்கூட யாருக்கும் பிடிக்கவில்லை. உலகம் இப்போது மிகவும் மாறிவிட்டது. வலுவற்றது இருக்க நியாயமற்றது என்றாகிவிட்டது. முன்பெல்லாம் பனி பெய்யும் நள்ளிரவில் ஏழையின் வீட்டுக் கதவைத் தட்டிக் கடவுள் வந்து காட்சியளிப்பார் .
ஆனால், இப்போது கடவுள்கூட காப்பாற்ற என்றில்லாமல் காட்டிக்கொடுக்கவே ஏழையின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் போலும்.
யாருக்கும் தெரியவில்லை. யாருக்கும் தோன்றவில்லை என்ன செய்வதென்று. மௌனமாய் இருப்பதைத் தவிர.
சிறுமைகளின் தொடுவானம் முற்றாகக் கவிழ்ந்துவிட்டது நம்மீது. நிறமிழந்த வனத்தைப் போல் குரல் இழந்த பறவையைப் போல் வரலாறும் நிற்கிறது அறமிழந்து.
முன்புபோல் வரலாறு யாரையும் காப்பாற்றுவதில்லை. யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் தண்டிப்பதுமில்லை. ஆனால் ஒன்று! இன்று கதவுக்கு இப்பால் இருப்பவர்கள் நாளை கதவுக்கு அப்பாலும் அப்பால் இருப்பவர்கள் இப்பாலும் வந்துவிட நேரும். அப்போதும் நிறங்கள் இழந்த கானகத்தைப் போல் குரல் இழந்த பறவைகளைப் போல் அறம் துறந்த வரலாறும் நம் கயமையைப் பரிகசித்தபடி சிலையாகச் சமைந்துவிடும் இப்போதே போல்.
எனவே, நண்பர்களே, மூடியிருக்கும் கதவுகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவுசெய்து விலகிச்சென்றுவிடுங்கள்.
ஏனெனில், மாசற்ற உலகம் ஒன்று குழந்தையின் இதயத்தைப் போல் துடித்துக்கொண்டிருக்கக் கூடும் அவற்றுக்குப் பின்னால்."
5 கதைகளின் தொகுப்பு( ரமாவும் உமாவும், ஒரு எலிய வாழ்க்கை, நா காக்க அல்லது ஆசையும் தோசையும், ஒரு குமாஸ்தாவின் கதை, அவர்கள் வீட்டுக் கதவு). ஒரு குமாஸ்தாவின் கதை & அவர்கள் வீட்டுக் கதவு கதையில் மதத்தின் பெயரில் சிறுபான்மையினர் மீது நிகழ்தப்படும் வன்முறைகளை தெளிவாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
புத்தகம்: ரமாவும் உமாவும் வகைமை: சிறுகதைத்தொகுப்பு பதிப்பகம்: க்ரியா (CRE-A) எழுதியவர்: திலீப் குமார் வாங்கிய நாள்: 14-ஜனவரி-2024 வாங்கிய இடம்: சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண்: 180-181
வாசிப்பனுபவம்:
கானல் என்ற கதையை பவா செல்லத்துரை அவர்களின் கதையாடலில் கேட்டது முதல் எனக்கு திலீப் குமாரின் கதைவுலகின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. ஆனால் அவரின் எழுத்தை நான் ஏனோ நினைவுகூர்ந்து தேடவில்லை. 2024 சென்னை புத்தக கண்காட்சி இந்த தேடலுக்கு ஒரு நிமித்தமாக அமைந்தது. 127 பக்கங்கள் கொண்ட சிறிய அளவிலான புத்தகம்.
சிறுகதைத் தொகுப்பு என்று முகப்பில் குறிப்பிட்டிருந்தாலும், இதில் ஒரு குறுநாவல், மூன்று சிறுகதைகள் மற்றும் ஒரு நாடகம் உள்ளது.
ரமாவும் உமாவும் வாசித்தவுடனே எனக்கு ஏதோ உலக திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற பிரக்ஞை தந்தது. கிட்டத்தட்ட ஒரு பிறழ்வெழுத்தின் தாக்கம். கதை எழுதுபவர்கள் கதாப்பாத்திரங்களோடு உரையாடுவதை "நாத்தோலி ஒரு செரிய மீனல்ல" மற்றும் "RK/ RKAY" பார்த்து வியந்திருக்கிறேன். ரமாவும் உமாவும் கதையிலும் இதுபோன்று ஒரு கதைசொல்லலை உணர்ந்தேன். முக்கிய கதாபாத்திரங்களின் முதல் உரையாடல்கள் மற்றும் அவர்களின் கருத்து பரிமாற்றங்கள் மறைபொருளாக கற்பிக்கப்பட்ட அந்தரங்கத்தையும் தத்துவார்த்த ரீதியாகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு தொய்வில்லாமல் நகர்கிறது. கதைசொல்லியின் தன்னிலையை அப்பட்டமாக விளக்கும் தருணங்களை நான் வெகுவாக ரசித்தேன்.
Room in Rome என்ற ஸ்பானிய திரைப்படத்தின் தாக்கம் இருப்பதகவும் எனக்கு தோன்றுகிறது. இருப்பினும், ஜெயமோகன் கூறுவது போன்றதொரு ஆன்ம தரிசனம் தருவதால் இலக்கிய தன்மைமேலோங்கி இருக்கிறது. இந்த கதைசொல்லலின் வடிவமைப்பில் இருந்த கட்டமைப்பின் புதுமையை நான் இதுவரை வேறு எந்த படைப்பிலும் உணரவில்லை. கதையோட்டத்தை கவனிக்க வைத்துவிடும் பரபரப்பு, நாடகீயத்தன்மை, நிகழ்வுத்தொடர்ச்சி இவை அனைத்திலிருந்தும் விலகி, ,மற்றொருபுறம் கிளர்ச்சியும், அதிர்ச்சியும் பரவசமும் தரக்கூடிய வணிக எழுத்துக் கவர்ச்சிக்கூறுகளை தன்வயமாக்கிய இந்த படைப்பினை முக்கியத்துவம் வாய்ந்த பின்நவீனத்துவ சிறுகதையாக ,முன்னிறுத்துவதற்கு எல்லாத் தகுதியும் வாய்ந்தது.
ரமாவும் உமாவும் உரையாடும் போது வாழ்க்கையை பற்றி அவர்கள் எழுப்பும் கேள்விகளும் அவதானிப்புகளும் சிக்குண்டு அந்த உரையாடலை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் அளவுக்கு பொன்மொழிகள் நிறைந்ததாக இருக்கிறது.
இலகுவான சூழலில் பின்னப்பட்ட ஒரு எலிய வாழ்க்கை மற்றும் அண்டி பிழைக்கின்ற நிலையிலும் வாழ்வை மூப்பு எய்தியவரின் நா காக்க அல்லது ஆசையும் தோசையும் என்ற கதைகள் என் கவனம் பெற்றாலும் ரமாவும் உமாவும் கதையை போல என்ன ஈர்க்கவில்லை. காரணம் அது ஒரு தலைசிறந்த படைப்பு.
அடுத்த "ஒரு குமாஸ்தாவின் கதை " என்ற கதையிலும் கதை சொல்லலில் ஒரு புதுமையை நிகழ்த்தியிருக்கிறார். கதை வாசிக்கும் வாசகரை நோக்கி வாசகரின் ஆன்மாவை ஒரு கதை மாந்தரின் உடலில் கூடு விட்டு கூடு பாயச் செய்து அந்த கதாபாத்திரத்தின் உரையாடல், செயல்கள், எண்ணவோட்டங்கள் நம்முடையதாக சித்தரிக்கப்பட்டது நாம் அந்த கதையினை நுகரும் வாசகனாக மட்டும் இல்லாது அதையும் தாண்டி அந்த கதாப்பாத்திரத்தின் பதைபதைப்பையும் யாருமற்று விட்டுச்செல்லும் துயரின் பீதியை நம்மில் செலுத்துவது தான் இந்த படைப்பின் வெற்றி. இந்த கதை நடக்கும் நிலப்பரப்பு மற்றும் காலம் இந்த உத்தியின் பயன்பாட்டை நியாயப்படுத்துகிறது.
ரமாவும் உமாவும் என்ற படைப்பின் இலக்கியத் தரத்திற்கு அருகே நிற்க கூடிய மற்றொரு கதை நாடக வடிவில் எழுதப்பட்ட இந்த தொகுப்பின் கடைசி கதையான "அவர்கள் வீட்டுக் கதவு ". இந்த கதையை நான் வாசித்த தினம் "அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினம் " என்பதை என்னால் மறக்கவே இயலாது. தற்செயலாக ஏற்பட்ட நிமித்தம். இந்த நாடகத்தில் எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் சூட்டப்படவில்லை. பெயர்கள் சூட்டப்படாமலே எதை, யாரை, எந்த பிரிவினரை குறிக்கிறது என்று எளிதாக ஊகித்து விடக்கூடியதாக இருப்பினும் இந்த கதையில் நமக்கு வரும் படிப்பினை இந்த மனிதவுலகத்திற்கே உரியனவாகும்.
திலீப் குமாரின் இந்த கதை தொகுப்பு பிடித்துப் போக அவரின் படைப்புகளை நுகரலாம் என்று தேடித் பார்த்தபோது மிக குறைவான புத்தகங்களையே எழுதியிருக்கிறார் என்று தெரிய வந்தது. இரண்டாம் முறை புத்தக கண்காட்சிக்கு சென்று கடவு புத்தகத்தை வாங்கலாம் என்று க்ரியா அரங்குக்கு சென்றால், அது அரங்கில் இல்லை எனது தெரியவந்தது. சரி மௌனியுடன் கொஞ்ச தூரம் புத்தகம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் வானதி அரங்கில் விசாரித்த போது அப்படி புத்தகம் எங்கள் பதிப்பில் வரவில்லை என்று சொன்னார்.