ஓரளவு வசதி படைத்த நிலப்பிரபுவின் மகனாகப் பிறந்த மாவோ, சீனாவும் சீனாவின் மக்களில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளும் துன்பத்திலும் வறுமையிலும் வாடுவதை கண்டும் காணாமல் தந்தையின் சொற்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவர்களது வியாபாரத்தை கவனித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாததன் காரணமாகவே இன்றளவும் பேசப்படுகிறார். நினைவு கூறப்படுகிறார்.
கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் பெரும்பாலான தலைவர்களின் வரலாறு புத்தகங்கள் அளவில் மிகச் சிறியதாகவே இருக்கும். அவர்களின் இளமைக்காலங்களின் சுருக்கமான அறிமுகமும் வரலாற்றில் அவர்களை இடம் பிடிக்க செய்த முக்கியமான தருணங்களும் அவர்களின் போராட்டங்களும் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். அதைப்போலவே இந்த புத்தகத்திலும் மாவோவின் இளமை காலங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அவரை புரட்சிப் பாதைக்கு இழுத்துச் சென்ற சம்பவங்கள், அதற்காக அவர் தன்னை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தயார்படுத்திக் கொண்ட சம்பவங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
மங்கோலியர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் என்று வரலாறு முழுக்கவே சீனாவிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வெளியாட்களால் சீனாவின் வளங்களும் சீன மக்களும் சுரண்டபடுகிறார்கள். பெயருக்கு அரசாங்கம் நடத்தி வந்த சீனாவின் மஞ்சூரி அரசும் மக்களை சுரண்டுவதையே கடமையாக செய்திருக்கிறது. மஞ்சூரி அரசு விவசாயிகள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மாவோவை பாதிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கம்யூனிச, மார்க்சிய, லெனினிச கருத்துக்களை வாசித்து உள்வாங்கி கொண்டு புரட்சிப் பாதைக்கு நகர்கிறார். கம்யூனிஸ்ட்களை களையெடுக்கும் கோமிண்டாங் படைகளுக்கு எதிராக மக்களையும் சேர்த்துக் கொண்டு போர் புரிகிறார். படிப்பறிவற்ற மக்களை அரசியல்படுத்த நினைக்கிறார். பல இன்னல்களையும் இழப்புகளையும் சந்தித்து முடிவில் சீன குடியரசினை நிறுவுகிறார்.
ஒரே பாட்டில் ஓஹோ வென வளர்ந்து விடும் சக்திவேல் ட்ரான்ஸ்போர்ட் போல மாவோவின் போராட்ட வாழ்வை நான் இங்கே சொல்லி இருந்தாலும் புத்தகம் வாசிக்கும் போது மிக உணர்ச்சிகரமானதாகவே இருந்தது. பச்சை பசேலென்ற சீனாவும் லட்சக்கணக்கான மக்கள் காடு மலை என நடைபயணம் செய்ததும் என் கண்முன்னே ஓடியது. புத்தகம் வாசித்து முடித்த கணம் முதல் சீனா குறித்தான documentary, சீனாவின் வரலாற்றை சொல்லும் படங்கள் என தேடிக் கொண்டிருக்கிறேன்.
மாவோ குறித்த சுருக்கமான அறிமுகத்தை விறுவிறுப்பான நடையில் வாசிக்க உகந்த புத்தகம் இது.
🚩ஒரு கருத்தியலை நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு செல்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. அதுவும் அம்மக்கள் அடிமை முறைக்குப் பழக்கப்பட்டு அறியாமையில் மூழ்கி இருக்கையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் மாவோ பெருமளவில் அதை சாத்தியப்படுத்திருக்கிறார்.
🚩புரட்சி செய்வது, போராட்டம் நடத்துவது, கூட்டம் கூட்டி பேசுவது, மக்களிடையே கல்வி அறிவைப் புகட்டுவது, இராணுவத்தை பலப்படுத்துவது, கட்சியை வழி நடத்துவது, உள்நாட்டுச் சிக்கல்கள், வெளிநாட்டினரின் ஊடுருவல்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது செம்படை. சில சமயங்களில் தோல்வியும்.
🚩ஓநாய் குலச்சின்னம் புத்தகம் படித்தபின் மாவோ பற்றியும், கலாச்சாரப் புரட்சி பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மாவோ பற்றியும், அப்போதைய சீனா பற்றியும் மட்டுமே இப்புத்தகத்தில் தகவல்கள் உள்ளன. கலாச்சார புரட்சி பற்றி இப்புத்தகத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை.
🚩இந்தப் புத்தகம் மாவோ பற்றி ஒரு சிறு மேலோட்டமான அறிமுகத்தைக் கொடுத்துள்ளது.
மாவோ எனும் பதத்தை பல புத்தகங்களிலும் கட்டுரைகளிலும், அரசியல் கொள்கைகள் மூலம் தெரிய வந்திருந்தாலும், அவரைப் பற்றி முழுவதுமறியாதிருந்தது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை அந்நியர்களாலும் கடனாலும் உள்நாட்டு பதவிவெறி கொண்டவர்களாலும் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தேசம், இன்று வல்லரசாக இருப்பதற்கான ஆக்கப்பூர்வ சக்திகளுக்கு அடிக்கோளிட்ட ஒரு சாதாரண மனிதனின் வரலாறு. இந்தியாவும் சீனாவும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுப்பட்டிருந்தாலும், இந்தியாவை விட சீனா மக்கள் தொகையில் அதிகமாக இருப்பினும்; இன்று சீனா அடைந்திருக்கும் வெற்றி அசாதாரணமானது. தன் நாட்டு தேவையை தானே பூர்த்தி செய்வது எனும் கொள்கை எந்தளவு ஒரு தேசத்தை வளர செய்துள்ளது என்பதற்கு கண்முன்னே உள்ள சாட்சி சீனா. அதை வடிவமைத்தவர் மாவோ. மிக அதிகமான தகவல்களுக்கு இன்னும் பல புத்தகங்கள் தேவையெனினும் புரிதலுக்கும் தகவலுக்கும் மாவோவின் ஒரு பக்கத்தைப் பற்றிய அறிமுகத்திற்கும் இப்புத்தகம் சிறந்தது
Unlike most of the leaders about whom I ve read..Mao has not fled his country in difficult times, always faces and operated without disguise, stayed with people eventhough as a dictator..did not taste power, not even luxury of a leader till he was 55, but towards the end of his life, failed to materialise his visions.Overall a great biography...!!