கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாடு வறட்சி கொண்டிருக்காது. இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது என்பதற்கு இக்கட்டுரைகளே சான்று. ஆனந்த பேசும் பல்வேறு விஷயங்கள் எளிய மொழியில் இருப்பினும் அவற்றின் ஆழம் காரணமாகத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.
ஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார்.
கவிதைகள் குறித்த கட்டுரைகள் பெரும்பாலும் கவிதைகளைப் புரிந்து கொள்ளுதல், வகைப்படுத்துதல், பாடுபொருள் சார்ந்த திறனாய்வுகள் போன்ற பொருண்மைகளை முன்வைத்தே எழுதப்படுவது வழக்கம்.
கவிதை என்னும் வாள்வீச்சு தொகுப்பில், கவிஞர் ஆனந்த், இதுவரை பெரிதாக நுழையாததொரு பிராந்தியத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். அது கவிதைகள் மொழியப்படும் சூட்சுமம் குறித்த அவதானிப்பு. கவிதை புனைதல் எனும் படைப்பாக்கச் செயல்பாட்டில் கவியின் பங்கு என்ன என்பது குறித்தும், கவிதை மனதுள் திரண்டெழ கவிஞருக்குள் இருந்து செயலாற்றும் அக, புறக் காரணிகள் எவையெவை என்றும், அவற்றின் தோற்றுவாய்கள் குறித்து சிந்திப்பதாகவும் கவிஞர் ஆனந்த் அவர்களின் தேடல் விரிகிறது. கவிதை படைத்தல் குறித்த பல அம்சங்கள் சார்ந்த நமது இதுவரையிலான புரிதலை இக்கட்டுரைகள் மறுபரீசலனை செய்யத் தூண்டுகின்றன.
அடர்த்தியான செறிவு கொண்ட இக்கட்டுரைகள் அசை போட்டு வாசிக்க வாசகனை அழைக்கின்றன. நிறைவான செழுமைப்படுத்துகிற வாசிப்பனுபவம்.