நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.The lives of the scavengers and their worlds are picturised in a realistic way.
நாவல் : தோட்டியின் மகன் எழுத்தாளர் : சுந்தர இராமசாமி பக்கங்கள் : 188 2023 : 2/50
கதைச் சுருக்கம் :
தோட்டியின் மகன் எனும் இக்கதை தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்டது. இக்கதையைத் தமிழில் மொழிப்பெயர்த்தவர் சுந்தர இராமசாமி அவர்கள். தோட்டி எனும் ஒரு தொழில் முன்காலத்தில் இருந்ததே நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. நவீன கருவறைகள் உருவாவதற்கு முன்னர் மலக்கழிவுகளைக் கைகளாலும் மண்வெட்டியாலும் அள்ளி வாளியில் போட்டு,அது நிறைந்ததும் பீப்பாய் வண்டியில் நிறப்பி,அதனை மலக்கிடங்கில் தோட்டிகள் போட்டனர். இதனைப் படிக்கும் போதே நமக்கு நாற்றம் வீசும் வகையில் கதாசிரியர் தோட்டிகளின் வேலைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். கேரளாவில் ஆழப்புழா மாவட்டத்தில் வாழ்ந்த தோட்டிகளின் வாழ்க்கையே இக்கதை. இசக்கிமுத்துவின் மகனான சுடலைமுத்து தன் தகப்பன் நோய்வாய்ப்பட்டதும் தோட்டியாக பணி ஏற்கிறான். தன்னுடைய மகனும் இவ்வாறு தோட்டியாக ஆகக்கூடாது என சுடலைமுத்து கங்கணம் கட்டிக்கொண்டு தன் வாழ்க்கை முறையையே மாற்றுகிறான்.அவன் ஆசை நிறைவேறியதா?? என்பதே இக்கதை. படித்து இன்புறுங்கள்.
ஆசிரியர் - தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாள நாவல் தமிழில் - சுந்தரராமசாமி காலச்சுவடு பதிப்பகம் 173 பக்கங்கள்
ஒரு நாவல் உருவாவதற்கான கதைக்களம் ஒரு எழுத்தாளன் தன் நினைவோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதற்கு அது எழுதப்படும் காலம், பின்னணி, சமகால சமூக நிலைப்பாடு, போன்ற எண்ணற்ற படிநிலைகளை தாண்டி வருவதே ஆகும். ஆனால் ஒரு எழுத்தாளன் மனதில் திடமாக நினைத்துவிட்டால் அது எத்தகைய தர்கங்களை உருவாக்கும் கதை களமாக இருந்தாலும் அவை அத்தனையும் அவன் தன் தோள்களில் தாங்கி நின்று அந்த கதை கருவுக்கு உயிர் கொடுத்து, அந்த உயிரை பத்திரமாக வெளிக்கொனர்ந்து இந்த உலகத்துக்கு கொடுத்தே தீருவான். அப்படி 1940 களில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா என்ற நகரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றிய நாவலே இந்த தோட்டியின் மகன். இந்த சீர்மிகு குழந்தையை பெற்றெடுத்தவரும் ஒரு பெரும் ஆளுமை அதனை தமிழுக்கு தத்தெடுத்தவரும் ஒரு மிகப்பெரும் ஆளுமையே. பெற்றோரை விட தத்தெடுத்தவர் தமிழில் வெளிக்கொண்டு வர அரும்பாடு பட்டிருக்கிறார்.
தோட்டி என்றால் யார்? அவர்கள் என்ன செய்வார்கள்? இந்த கேள்வி தோட்டியின் மகன் மோகனுக்கு மட்டுமல்ல இந்த புத்தகத்தை திறக்கும் ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் எழும் கேள்விகளே? 1950 க்கு முந்தய காலங்களில் நவீன கழிப்பறை வசதிக்கு முந்தய காலங்களில் ஒவ்வொரு வீடாக சென்று அங்கு கழிப்பறையில் இருக்கும் மலக்கழிவுகளை கைகளாலும், மன்வெட்டி, அகப்பைகளில் அள்ளி ஒரு பீப்பாய்களில் சேமித்து அந்த நாளின் முடிவில் ஊருக்கு வெளியே உள்ள மலக்குழிகளில் அதனை நிரப்ப வேண்டும். இவை அனைத்தும் காலை தொடங்கி மாலைக்குள் செய்துமுடிக்க வேண்டும். மலம் அல்லும் வேலைகளிலேயே எஜமானர்கள் தரும் உணவை வாங்கி உண்ணவோ, சேமித்து வீட்டுக்கு கொண்டு செல்லவோ வேண்டும். மாத கூலி அந்த ஊர் தலைவரும், கண்காணிப்பாளரான ஓவர்சீயர் தான் நிர்ணயிப்பார்கள் அதிலும் ஒரு பங்கை ஓவர்சீயர் எடுத்துக்கொண்டு மிச்சத்தை மட்டுமே கொடுப்பார். அவர்கள் குடிசைகள் ஊருக்கு வெளியே அந்த மலகுழிக்கு அருகேதான். மாலைக்கு மேல் அந்த ஊரும் சரி அந்த மக்களும் சரி இந்த உலகமும் சரி அவர்களை மறந்து விடும். மறுபடியும் அவர்களின் கழிப்பறைகள் நிறையும் காலை நேரம் மட்டுமே அவர்கள் தேடப்படுவார்கள். ஒரு தோட்டி தன் வாழ்வில் 40 வயதை தாண்டுவது அரிது. நோய்கள் அவர்களுக்கு மிக நெருக்கமான தோழர்கள். அனாதை குழந்தைகள் அவர்களின் அளவில்லா செல்வங்கள். மற்றொரு எழுதப்படாத விதி தோட்டியின் மகன் தோட்டியே, தோட்டியின் துணைவியும் ஒரு தோட்டியே. இதுவே தோட்டிகளின் வாழ்க்கை முறை. இப்படி ஒரு வாழ்க்கையா? என்று நீங்கள் வினவினால் ஆச்சர்யமில்லை, ஏனெனில் இவர்களை பற்றி நம் முன்னோர்களும் சரி, இலக்கியமும் சரி சற்று குறைவாகவே பேசியுள்ளனர். அது ஏன் என்பது இந்த புத்தகத்தை வாசித்தால் உங்களுக்கும் புரியும்.
தோட்டியான இசக்கிமுத்து உடல்நிலை குன்றி படுக்கையில் கிடக்க அவன் வேலையை தக்கவைத்து கொள்ள தன் மகன் சுடலைமுத்துவை அவனுக்கு பிடிக்காத தோட்டி வேலைக்கு அனுப்புவதோடு கதை தொடங்குகிறது. முதல் நாள் வேலை முடித்து வரும் பிள்ளையோடு சேர்ந்து உண்ண காத்து காத்து இசக்கிமுத்து இறக்கிறான். மரணப்படுக்கையில் துவழும் தன் தந்தைக்கு ஒரு வாய் கஞ்சி கொண்டுவராத தன் நிலைக்கருதி வெதும்பும் நேரத்தில் தன் தகப்பணை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் பணமின்றி, தோட்டிகளின் குடிசைகளுக்கு அருகிலேயே தோண்டி புதைக்கின்றனர். இத்துடன் அவனுக்கு கொடுமை அகலாமல் இரண்டு நாள் கழித்து தன் தந்தையின் உடலை தெருநாய்கள் இழுத்துச்செல்வதை காண்பதும் பின் அவனே தன் தந்தையின் உடலை மீண்டும் தோண்டி புதைப்பதும் என எண்ணற்ற கொடுமைகள் இக்கதையின் தொடக்கத்திலே. இத்தனையும் கண்டு இடிந்துப்போய் அமராமல் சுடலைமுத்து வேறு ஒரு முடிவுக்கு வருகிறான். அவன் ஒரு மாறுபட்ட தோட்டியாக இருக்கு விரும்புகிறான் .தோட்டிகளுக்கு உரிய கோட்பாடுகளுக்கு நேரெதிராக மாறுகிறான்.அவன் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் - தன் மகனை ஒரு தோட்டியின் மகனாக வளர்க்கக்கூடாது, தோட்டி என்றால் யாரென்றே அவனுக்கு தெரியுக்கூடாது, தனக்கென ஒரு நிலம், ஒரு வீடு ஒரு குடும்பம் என்று கிடைத்த பின் இந்த தொழிலுக்கு முழுக்கு போட வேண்டும். வள்ளி என்ற தோட்டிச்சியை காதலித்து கரம் பிடித்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையாகிறான். அவனுக்கு மோகன் என்ற பெயரும் பேபி என்ற செல்ல பெயரும் சூட்டுகிறான். பிரச்சனை இப்பொழுதுதான் தொடங்குகிறது. பிச்சாண்டி, முனியாண்டி, வடிவேலு, சோலைமுத்து இடையே ஒரு மோகன் தோன்றியதுதான் பெரும் சிக்கல். சுடலைமுத்துவின் கனவு பலித்ததா? மோகன் தோட்டியனானா? என்பதே இக்கதையின் முடிவு.
ஒரு கண்ணாடி பிம்பம் காட்டுவது போல தகழி அவர்கள் தோட்டிகளின் வாழ்க்கையை படம் பிடித்து எந்த ஒளிவு மறைவுமின்றி அப்பட்டமாக தன் எழுத்தின் மூலம் பதிவுசெய்துள்ளார். முதலில் அந்த முயற்சிக்கும், வீரத்திற்கும் நாம் தலைவணங்க வேண்டும். இப்படியும் ஒரு மனித இணம் இவ்வுலகில் கொடுமை படுத்தப்படுள்ளது என்பதை இன்று நினைத்து பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நெஞ்சம் பதருகிறது.உலகிலேயே அதிக ஊதியம் கொடுக்கப்படவேண்டியவர்களுக்கு நாம் கொடுத்ததோ சில்லறைகளும், எச்சி இலைகளும், தீண்டாமையும், உரிமை மறுப்பும், கல்வி மறுப்பும், கேலிகளும், வசைகளுகம்தான். சற்று சிந்தித்து பார்த்தால் தோட்டிகள் இல்லாமல் நாம் நோய் நொடியின்றி வாழ்ந்தந்திருப்போமா என்பது சந்தேகம்தான், இருந்தாலும் அவர்களை ஏன் நாம் அடிமைப்படுத்தி வைத்திருந்தோம்? ஏனெனில் அவன் அடிமை என்று அவன் எண்ணும் வரையில் தான் அவன் கேள்வி கேட்க மாட்டான். உரிமைக்காக போராடமாட்டான், அவன் உரிமைகள் என்னவென்பதே அவனுக்கு தெரியாமல் இருக்கும் வரையில்���ான் அவன் அடிமையாக இருப்பான். அந்த அடிமை தீயில் குளிர்காய்ந்தவர்கள் பல கோடி ஆனால் அதே சமயம் அந்த தீயில் தினம் தினம் வெந்து மாண்டவர் கோடானகோடி. ஓர் இனம் தன் இனத்தையே தனக்கு கிடைத்த நிலையையும், அதிகாரத்தையும் கொண்டு அடிமைப்படுத்துமாயின் அவ்வினம் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
"எழுதிவெய்கப்படாத அந்த சட்டத்தை எப்படி உடைப்பது?"- தகழி
உடைப்பதற்கான ஆயுதம் என்றோ அரியப்பட்டுவிட்டது. அந்த ஆயுதத்தைதான் நீங்கள் இப்பொழுது வாசித்து கொண்டுள்ளீர்கள்.
சமுதாயத்தில் நிலவும் சாதியக் கண்ணோட்டத்தையும், இழி தொழில் என தொழில்களை வகைப்படுத்தும் பார்வையையும் ஒரு நகர சுத்தித் தொழிலாளியின் வாழ்க்கையின் மூலம் பிரதிபலிக்கிறது திரு. தகழி சிவசங்கரம் எழுதிய "தோட்டியின் மகன்".
"தோட்டி மவன் தோட்டியா தான் ஆவனுமா?" என்ற கேள்வி இந்த நாவல் முழுக்க ஒலிக்கிறது. அது பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம முறைக்கு எதிரான குரல். தனது அடுத்தத் தலைமுறையை தோட்டி தொழிலில் ஈடுபடுத்தாமல் படிக்க வைக்க முற்படும் சுடலைமுத்துவை பற்றிய கதை இது.
புரட்சிகர சிந்தனையாயினும், சுடலைமுத்துவை புரட்சிகர நாயகனாக சித்தரிக்கவில்லை - தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிய அவனது கனவை நிறைவேற்றிக் கொள்ள சுயநலமாக சிந்திக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே முன்னிருத்துகிறது இந்நாவல். அவனது சுயநலத்தினால் அவன் மனைவி என்னென்ன கட்டுப்பாடுகளுக்கு ஆளாகிறாள் என குடும்பச் சூழலில் நடக்கும் ஆணாதிக்கத்தை காட்டும் பல காட்சிகள் அமைகின்றன. அதிகார மையமான முனிசிபல் சேர்மன், ஓவர்சீயரின் துணையோடு தோட்டிகளுக்கான சங்கம் அமைவதை தடுக்க சுடலைமுத்துவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். தான் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்தை விட தன் தனிமனித முன்னேற்றத்தை முக்கியமானதாகக் கொள்ளும் சுயநலவாதியான சுடலைமுத்து மற்ற தோட்டிகளுக்கும், நண்பனுக்கும் துரோகம் இழைக்கிறான். இது சமூகச் சூழலில் அதிகார வர்க்கம் அடித்தட்டு மக்களிடம் காட்டும் ஒடுக்குமுறையின் நிதர்சனமான பிரதிபலிப்பு.
தான் கழிவறை சுத்தம் செய்யும் வீடுகளில் வசிக்கும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்து பணம் சேமிக்கக் கற்றுக்கொள்கிறான் சுடலைமுத்து. அவன் வாழ்வின் பொருளாதர நிலை உயர்ந்தும், அவனின் சாதி அடையாளம் மட்டும் அவனையும் அவன் மகனையும் துரத்துகிறது. அதனால் அவன் தோட்டி தொழிலை ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற எத்தனிக்கிறான். அவன் மயானக் காவலாளியாக மாறுகிறான். அதுவே அவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு மற்றும் அவனது சமூக நிலையின் உயர்வு.
சாதிய படிநிலையின் அடுக்குகளும், அவற்றின் ஆழமும் கடக்க முடியாத மதில்களை ஒடுக்கப்பட்டோரின் முன் விரிக்கின்றன. சுடலைமுத்து போன்ற மனிதன் அவற்றை உடைக்க முற்படும் போது அவனுக்கு இருக்கும் மலைப்பை மீறி அந்த பாதையில் பயணிக்க வைப்பது அவனுக்கு இருக்கும் காரணம். முடிவில்லா அந்த பயணத்தையும், அதில் அவன் அனுபவிக்கும் வலிகளையும், சமூகச் சிக்கல்களையும் விவரிக்கிறது இந்நாவல்.
எத்தனை கோடி சுடலைமுத்துக்களும், வள்ளிகளும் இப்படித் திணறித் திணறி அழிந்துபோனார்கள் ! இந்தச் சரித்திரம் எத்தனை ஆயிரம் வருடங்களாகத் தொடர்ந்து கொண்டே வருகிறது! அவர்களுடைய ஆசைகளும் அபிலாஷைகளும், கனவுகளும், அன்பும் துவேஷமும், இந்தச் சூழ்நிலையில்தானே சங்கமமாக வேண்டும்? நீங்கள் உட்கொள்ளும் பிராணவாயுவிற்குக் கனம் கூடி விட்டதென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?