உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எதிர்காலம் பற்றிய கனவுகளும், இலட்சியங்களும் ஏராளம். அதை அடைவதற்குத் தடைகளும் தாராளம்! சிலர் இலட்சியப் பாதையில் வெற்றி கொள்வர்... சிலர் தோல்வியைத் தழுவுவர்...
தன்னால் முடியாது போய்விட்டதை எல்லாம் தாம் பெற்ற பிள்ளைகள் மூலம் சரி நிவர்த்தி செய்துவிடவேண்டும் என்பது எம்மிடையேயுள்ள, அதுவும், அவ்வளவாகத் தவறென்று உணரப்படாத ஒரு வழக்கமாகச் சொல்லலாம்.
பெற்றோர்களின் இந்த எண்ணங்கள் திணிப்பாக மாறுகையில் பிள்ளைகள் நிலை அந்தோ கதிதான் ..
கெளதம், அப்படியானதொரு சூழ்நிலையில் வாழ்பவனை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டான். அவன் அம்மா , அப்பா என்று எல்லோரும் வலு தத்ரூபமாக பூச்சுகளின்றி கதையில் வந்து சென்றார்கள். இவர்களைப்போல் எத்தனை எத்தனை அப்பா , அம்மா இருக்கலாம் . நனவாக மலரும் வாய்ப்பைத் தொலைத்த கனவுகளும் எண்ணிக்கையின்றி இருக்கலாம். பொதுவாகத் திருநங்கைகள் பற்றிச் சொல்வார்கள், சற்றே மாறுதலாக திருநம்பிகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. அவர்களின் வலிகளை வார்த்தைகள், சம்பவங்கள் மூலமாக வாசிப்போரின் நெஞ்சில் இறங்கிவிடும் வகையில் இருந்தது பிரசாந்த் வாழ்வு.
வித்யா ...திடமும் துணிவும் மிக்க நாயகி . தோல்வி, துன்பம், கோபம் என்று என்னதான் எதிர்ப்பட்டாலும் இலேசில் துவண்டுவிடவில்லை. 'பட்டிக்காடு' அப்படியொன்றும் just like that என்று கடந்து விடக்கூடியவள் இல்லை. ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும் கதையை வாசித்து முடிக்கையில் 'அப்பாடா நல்லதா ஒன்றை வாசித்துவிட்டேன்' என்ற திருப்தி என்னுள்! மேலும் மேலும் பல தரமான படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் மா!