புத்தகம் வெளிவந்த ஆண்டில் விகடன் விருது இந்த புத்தகத்திற்கு கிட்டியதால் சென்னை புத்தக கண்காட்சியிலேயே இந்தப் புத்தகம் விற்றும் தீர்ந்து விட்டது. நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்புகளிலேயே மிக முக்கியமான தொகுதி எது என்றால் இதுதான். இந்த தொகுப்பில் அப்படி என்ன விசேசம்? என்றால்.. கிராமிய வாழ்வை அப்பட்டமாக பல கதைகள் சித்தரிப்பது தான். இதற்கு மேலும் இனி ஒரு தொகுதி தமிழில் வருவதற்கு சாத்தியக்கூறுகளே கிடையாது! ஏனெனில் கிராமங்கள் தம் முகங்களை இழந்து காலங்களாகிவிட்டன. என்னாலும் இப்படி ஒரு நிறைவான சிறுகதை தொகுதி ஒன்றை மீண்டும் தர முடியாது! நான் கிட்டத்தட்ட நிறைவாகவே இதில் சொல்லி முடித்துவிட்டேன்.. என்று முடிவே செய்துவிட்டேன். - வா.மு.கோமு
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.