எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாது ‘‘கந்தர்வன் கதைகள்’’ என்று கவிதைகளிலும் தனி ஆளுமை செலுத்தியவர். ‘கவடி’ என்ற குறுநாவலும் எழுதியுள்ளார்.
கந்தர்வன் (பெப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
70-களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.