தன் இலட்சிய கனவை நிறைவேற்றுவதற்குத் துணைபுரியும் அனைவரிடமும் பிரியம் கொண்டாலும் அதில் இருக்கும் எவரோ ஒருவரிடம் பிரியத்தை மீறிய உறவை எதிர்பார்க்கும் மனதின் செய்கை இயல்பானதே.
கலைத்துறையில் பெரும் புகழ்பெற்றவரின் மகளாக இருந்தாலும் அதில் தனக்கெதுவும் சம்பந்தமில்லை என்ற தெளிவான நோக்கில் இருக்கும் தான்யாவின் ஆசை மூலிகைப் பண்ணையை நிறுவுவதே.அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுத்து படித்தவள் செயல்முறைகளை நேரடியாக தெரிந்து கொள்வதற்கு விவசாய விஞ்ஞானியான பூமிநாதனின் கிராமத்திற்கு வந்து சேர்கிறாள்.
நடிகரின் மகளாகச் செல்வ செழிப்பில் வளர்ந்த தான்யா தன் வீட்டில் ஆறுமாதம் தங்குவதற்கு முதலில் மறுக்கும் பூமிநாதன் அவளின் பயிற்சிக்கு கிடைக்கும் பணத்தால் கிராம முன்னேற்றத்திற்கு ஏதாவது உதவலாம் என்பதினால் அவளின் வருகையை விருப்பமில்லாமல் எதிர்கொள்பவன் தன் செய்கையாலும் அதை வெளிப்படுத்த தன் குணத்தால் தான்யா அவனையும் மாற்றிவிடுகிறாள்.
பெற்றோர்கள் காதலித்து மணந்ததால் தான் சொந்தங்கள் பற்றிய விவரமில்லாமல் இருந்தவளுக்குத்த் தன் தாயின் பிறந்தவீடு தான் பூமிநாதனின் குடும்பம் என்று தெரிந்த பிறகு தான்யா பிரிவில் இருந்த குடும்பங்களை இணைத்து வைக்கத் தன் வருகையால் தான் சாத்தியமானது என்று உணர்ந்த நேரத்தில் பூமிநாதனின் மீது இருக்கும் காதலையும் வெளிப்படுத்துகிறாள்.
செல்வநிலையில் இருக்கும் இடைவெளியால் மறுக்கும் பூமிநாதன் தன் சொந்தங்கள் என்று தெரிந்த பிறகும் அக்கறை காட்டாமல் இருப்பவனைப் பிரிவு புரட்டிபோட தன்னவளை தேடி வந்து சேர்கிறான்.
பெரும்பாலும் நல்சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனதை காயப்படுத்த வரும் வெளிக் காரணிகளுக்கு முழுவெற்றியென்பது கிட்டாமல் போகிறது.