"நியூட்டனின் மூன்றாம் விதி" நா . முத்துக்குமார்
-------------------------------------------
திரு நா. முத்துக்குமாரின் கவிதைகள் வாசிக்கும்போது நம்மையறியாமல் ஒரு வறட்சி புன்னகை மலர்ந்து மறைவதை தடுப்பதற்கில்லை.
அப்படியான சிறுகவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் .
நமது கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்துவந்து அதன் சாரத்தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது.
நகைச்சுவையும் வலியும் ஒருங்கே தரவல்ல ஆழமான கருத்தியல்களை கவிதைகளாக கொண்டுள்ளது . சில கவிதைகளின் வரிகள் ஆழமானது அழுத்தமாக மனதில் பதியக்கூடியது. புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்துபோகவும் ஏராளம் உள்ளன இக்கவிதைகளில்.
சில கவிதைகளின் தலைப்புக்களும், அதை பற்றிய சிறு குறிப்புகளும்:
"நியூட்டனின் மூன்றாம் விதி" - மாடியில் குடியிருப்பவன் தன் தரைதளம் மூலம் கீழ்த்தளத்தில் இருப்பவனுக்கு தரும் சப்தங்கள். அதற்கு கவித்துவுமாய் கீழ்தளக்காரன் ஆற்றும் எதிர்வினை.
"வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்" - பதின்ம சிறுவனின் பார்வையில் வெண்டைக்காயுடன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உண்டான தொடர்பை சொல்கிறது.
"அனுமதி இலவசம்"* - இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இறப்பையும் அதை ஒட்டிய இறப்பு வீட்டு நிகழ்வையும் வீடியோ காட்சிப் பதிவு செய்வது வழக்கம். வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் பார்ப்பதற்காகவாம். கல்யாண வீடியோ காசெட்டுகளை சாவகாசமாய் ஒரு மாலையில் பார்ப்பதை போல இறப்பு நிகழ்வையும் பார்க்க அனுமதி இலவசம் என்கிறது.
"நூறு வருடப் பொறுமை" * - ஒல்லியானவன் ஊதிப் பெருக்க எண்ணும் ஏக்க புலம்பல்.
"மலையாளம் கலர்(பகல் காட்சி மட்டும்) "* - 18+திரைப்படத்தைத் திரையில் பார்த்தவனின் மனவோட்டம்.
"கெட்டாலும் மேன்மக்கள்" - கிராமத்தில் ஈசல் சமைத்து உண்டவன், நகர வாழ்க்கையில் அது வாய்க்காது போனதின் உள்ளக்கிடக்கையை சொல்கிறது.
"அஃறிணையாளர் சங்கத்திலிருந்து ஒரு வேண்டுகோள்"* - திருவாளர் ஒயின்ஷாப் வாடிக்கையாளாரின் மிக்ஸிங் அளவிற்கு, (துடைப்ப குச்சிக்காக) ஒயின்ஷாப்பின் துடைப்பங்கள் மெலிகிறது என அஃறிணையாளர் சங்கத்திலிருந்து புகாராக ஒரு அறிக்கை.
"வெளிநடப்பு"* - வயிறுவலிக்கு காவி நிறமா?, கம்யூனிஸ்ட் நிறமா? எந்த நிற மருந்து என குழம்பி சென்ற கடவுளின் வெளிநடப்பை பற்றி.
"ஐந்து கட்டளைகள்" - ஐந்து ஆசைகள், கட்டளைகளாக(1. குடிகார தகப்பனின் மகன் தோள்வலிமை பெற , 2. ஆடு மேய்ப்பவன், தான் தொடரமுடியாத கல்வி ஞாபகத்திற்கு வராமலிருக்க, 3. பறக்கும் பட்டங்கள் மின்கம்பிகளில் சிக்காமலிருக்க, 4. பனங்காட்டு பழம் எடுக்க பாம்புகள் மடிந்திருக்க, 5. கணவனிடம் கோபித்து தாய் வீடு செல்லும் மனைவிகளின் கையிலுள்ள குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்படாமல் இருக்க.
"களவு" - மாடு களவானதா? அல்லது தானே தொலைந்ததா? என தேடும் படலம்
"குழந்தை மாமாக்கள்"* - மாமாக்களின் காதல் தூதாகும் குழந்தைகள். கடிதம் கொடுக்கப்பட்ட அக்காகளை விட மாமக்களே குழந்தைகளின் பிரியமானவர்கள். காதல் தோல்வி குறித்தும் கடைசி வரி(லி)களில்.
"உறுப்பு நலன் அறிதல்" - காலைக்கடன் கழிக்க வந்தவர்களின் உறுப்புகள் கண்டு அதிர்ந்து குழம்பும் குளமும் நீர்கோழியும்.
" செய்முறை" - சாக்லேட் உறைகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் பற்றியும் பெண்ணாய் பிறந்தவளின் புலம்பல் பற்றியும்.
"காந்தி ரோடு"* - எல்லா ஊரிலும் உள்ள இப்படி ஒரு ரோடில் நடக்கும் கீழ்ப்படிநிலை சமூக சம்பவங்கள்.
"அக்காவின் கடிதம்"* - திருமணமான அக்கா தனது கையறுநிலை வாழ்க்கை குறித்து எழுதும் கடிதம்., வலியுடையதாய் இருப்பினும் நலமாய் இருக்கிறேன் என்று முடிக்கிறாள்.
"இன்று செய்த சமூக சேவைகள்" - தான் செய்த சிறு உதவிகளுடன் தான் எழுதிய புத்தகத்தை வெளியிடாததையும் சேவையாக சொல்கிறது.
"உனக்கும் எனக்கும் புரியாத கவிதை" - புரியாத புதிர் கவிதை கடவுளை வைத்து.
"கிராமந்தோறும் விஞ்ஞானம்"* - திருவிழாவில் தெருக்கூத்துக்கள் அருகி வருவதை வலியுடன் பகிர்கிறது.
"காதல் 2000"*- தோழியிடம் தன் அவல நிலையை கூறி , காதலனை வந்து அழைத்து சொல்லும்படியான, காதலியின் வலிகளை சொல்கிறது.
"இடம் சுட்டி பொருள் விளக்கம்"* - கரும்பு லாரியை பற்றிய உருவகம்.
"பிறழ்வு" - அன்னையை அண்ணி என விளிக்கும் கூட்டு குடும்ப பழக்கங்கள்.
"இப்படிக்கு உறவுகள்"* - தன்னுடைய மடத்தனத்தை நொந்துகொண்டவனின் புலம்பல்.
* - நம்மை வெகுவாக கவர்ந்த கவிதைகள்.