புத்தக வாசிப்பு ஒரு சுகமான அனுபவம் என நான் உணர்ந்தது கண்ணதாசனின் அரத்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை வாசிக்கும் போது தான். பிறகு அவருடைய சேரமான் காதலி என்ற புத்தகத்தை வாசித்தவுடன் அவரது எழுத்தின் மேல் உள்ள ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. சொல்லப்போனால் பொன்னியின் செல்வனை விட சேரமான் காதலி என்னை மிகவும் ஈர்த்தது. இப்படி இருக்க அவருடைய வனவாசம் மற்றும் மனவாசம் என்ற புத்தகங்களை பற்றி வாலி ஆயிரம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிரேசி மோகன் அவர்கள் இதை பற்றி குறிப்பிட்ட போது இதை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வந்தது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு வார இறுதி விடுமுறையில் நானும் என் மனைவியும் மாமியார் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலையில் புத்தகமின்றி என்னால் இயங்க முடியவில்லை. எப்படியாவது ஒரு புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற வெறியில் ஞாயிற்று கிழமை யான அன்று காலையில் ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர், வடபழனி என தனியே சுற்றி திரிந்தேன், எங்கும் புத்தகக் கடைகள் தென்படாத போது ஹிக்கின் போதம்ஸ் கடைக்கு அருகே ஒரு புத்தகக் கடை தென்பட்டது. அங்கே நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று தான் மனவாசம்.
தனது அரசியல் வாழ்க்கை, தனது பெண் தோழிகளுடான உறவு, பயண கட்டுரைகள் இதற்கிடையில் இவரது பத்திரிக்கை என தனது அனுபவங்களை பகிர முற்பட்டு முடிவடையாமல் நின்ற கட்டுரை தொகுப்பு தான் இது.
திமுக, தமிழ் தேசியக் கட்சி, காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என தனது கட்சிச் சார்பை காலப்போக்கில் மாற்றிக்கொண்டதையும், அதற்கு கைமாறாக அவருக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொய்வில்லாமல் நமக்கு தந்திருக்கிறார் கவிஞா் கண்ணதாசன்.
அண்மையில் பெரியார் சேலம் மாநாட்டில் ராமரை அவமதித்தாரா இல்லையா? என்ற விவாதம் நடந்தது, இந்த வரலாற்று நிகழ்வை கூட பதிவு செய்திருக்கிறார் கவிஞா். பெருந்தலைவர் காமராஜர் பற்றி உயர்வான கருத்துக்களையே கொண்ட சூழலில் , அவருக்குள்ளேயும் இருக்கும் விரும்பத் தகாத தந்திர குணங்களையும் சுட்டி காட்டியிருக்கிறார், அதேபோல் கருணாநிதி பற்றி கடுமையான விமர்சனம் இருந்தாலும், அவருடைய நிர்வாகத் திறனும் அவருடைய கணிப்பையும் பாராட்ட தவறவில்லை.
இதையெல்லாம் விட என்னை ஈர்த்தது இந்தத் தொகுப்பில் இருக்கும் இவருடைய பயண கட்டுரைகள் தான்! விமானப் படைவீரர்களை மகிழ்விக்க இவரது தலைமையில் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் பஞ்சாப் சென்றது , கவிஞரின் மலேசிய பயணம், தாய்லாந்து பயணம் மற்றும் சிங்கப்பூர் பயணம் மிகச் சுவையான பகுதிகள்.
இந்திரா காந்தியின் காங்கிரஸ் பற்றி விரிவாகச் சொன்னாலும் இந்திரா காந்தியின் அவசர கால பிரகடனம் குறித்து எழுத வில்லை என்பது சிறிது ஏமாற்றம் தான்.
இந்த புத்தகத்தில் என்னை ஈர்த்த சில வாசகங்கள்
" தனிப்பட்ட நபர் மீது எதிர்ப்பு என்று தொடங்கி, கொள்கை எதிர்ப்பில் தான் போய் நிற்பார்கள் என்பதை அவன் அறிவான்"
"யாருக்கும் துன்பம் தராமல் உனக்கு எது சந்தோஷத்தை தருகிறதோ அதில் எந்தவிதமான பாவமும் கிடையாது என்பது அவனது திடமான அபிப்ராயம் ஆகும்"
எனது அடுத்த வாசிப்பு வனவாசத்தை நோக்கி!