வழிப்பறிக் கொள்ளையர்களை பற்றிய ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்த நூல். ஆங்கில நாவலை எழுதிய மெடோஸ் டெய்லர் பிரிட்டிஷ் இந்தியாவில் ஹைதரபாத் நிஜாமின் ஆட்சியில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். ஆங்கில நூலின் தலைப்பு ‘Confessions of a Thug’. இது 1839இல் லண்டனில் வெளியானது. சில குற்றவாளிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியான ஒரு சிலநாட்களில் மெடோஸ் டெய்லர் லண்டனில் புகழ்பெற்ற எழுத்தாளரானார். ஐரோப்பா முழுவதும் பேசப்பட்ட புத்தகமாக இது மாறியது. முதன் முதலாக தமிழில் தற்போது தான் வெளிவந்துள்ளது.
பக்கங்கள்: 986 "தக்கி"கள் என அழைக்கப்பட்ட வட இந்திய, தக்காணப் பகுதிச் சாலைகளில் வழிப்பறி செய்த, வலைப்பின்னல் கொள்ளைக் கூட்டத்தை பற்றிய நாவல்.
இது ஒரு உண்மைக்கதை எனவும், இத்திய கொள்ளைக்கூட்ட தலைவன் ஒருவன் காவலதிகாரியிடம் கொடுத்த விரிவான வாக்குமூலத்தை தொகுத்து நாவல் ஆக்கியிருப்பது ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நன்று. (மொழியில் consistency இருந்திருக்கலாம். எ.கா ஒரே பாத்திரம் ஒரே காலகட்டத்தில் ஒரு நேரத்தில் செந்தமிழும், மற்றோர் நேரத்தில் பேச்சுத்தமிழும் பேசுகிறது!)
கதை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலகட்டத்தில் நடக்கிறது. தக்கிகளின் தலைவன் ஒருவன் ஆங்கிலேய காவலதிகாரியிடம் தனது குற்றத்தை சொல்லவதில் துவங்கி, அவன் எவ்வாறு கைதாகி, பின் எவ்வாறு மாறினான் என்பதில் முடிகிறது. சிறிதும் இரக்கமற்ற வகையில் தக்கிகள் எவ்வாறு அவர்களின் கொலைகளுக்கான நியாயங்களை கடவுளின் (பவானி தேவி) மேல் வைக்கிறார்கள், இந்துக்களும் முஸ்லிம்களும் கொள்ளைக்கூட்டத்தில் எவ்வாறு இணைந்து ஒரே கடவுளை வணங்கினார்கள். அவர்களின் கொள்ளை நுணுக்கங்கள், சகுனம் பார்க்கும் முறை, அப்போதைய இந்திய குறுநில அரசர்கள், அதிகாரிகள் எவ்விதம் கையூட்டு பெற்று அவர்களை ஆதரித்தார்கள் என்பதெல்லாம் சுவாரசிய தகவல்கள்.
ஆனாலும், ஒரு பெரிய ஆயிரம் பக்க நாவலில் இருக்க வேண்டிய சுவாரசியம் இல்லை. பொறுமையை சோதித்தது. நூல் முழுவதும் எளிதில் யூகிக்கக் கூடிய, ஒரே மாதிரியான கொள்ளை நிகழ்வுகள். நூலின் பிற்பகுதி ஓரளவு திருப்பங்களுடன் அமைந்திருக்கிறது. நிலப்பரப்பு, காலநிலை, பழக்கவழக்கங்கள், கலாசாரம், அக விசாரணைகள் போன்றவை இல்லை. எனவே ஒரு செம்படைப்பிற்கான நிலையிலிருந்து கீழிறிங்கி விடுகிறது. மூல எழுத்தாளர் இம்மண்ணிற்கு அயலவரான ஆங்கிலேயராதலால் இவ்விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால், வித்தியாசமான period கதைகளில் ஆர்வமிருந்தால் படிக்க முயன்று பார்க்கலாம்.