கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம் சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, பிற்போக்குத்தனம் ஆகிய வேட்டை விலங்குகள் உலவும் இருண்ட காடாக உள்ளது.
இளம் படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியர் மலர்வதியின் இந்தப் புதினம் சமூகம் புறக்கணித்துள்ள விபச்சாரிகளின் மன உணர்வுகளையும் அவர்கள் எவ்வாறு உருவாக்கம் பெறுகிறார்கள் என்பதையும் வேதனையுடன் சித்திரிக்கிறது.
மலர்வதி (பிறப்பு: 1979) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்.
மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 1979 ல் கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு என்னும் ஊரில் ஜி. எலியாஸ்- ரோணிக்கம் இணையருக்கு பிறந்தார். வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். முளகுமூடு குழந்தை இயேசு உயர் நிலையில் பள்ளிநிறைவை முடித்து தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டப்படிப்பு முடித்தார்.
மலர்வதி கிறிஸ்தவ பக்திநூல்களையே முதலில் எழுதத்தொடங்கினார். முதல் இலக்கியப் படைப்பு 2008 ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கருப்பாயி என்னும் நாவல். தூப்புகாரி என்னும் நாவலுக்கு 2012 கேந்த்ரிய சாகித்ய அக்காதமியின் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது.