‘பர்மா வழிநடைப் பயணம்’ என் வாழ்க்கைப் பயணத்தில் - என் சுய சரிதத்தில் ஒரு பகுதி; ஒரு திருப்பம். இந்த நடைப் பயணத்தின் பெரும் பகுதி என்னைப் பொருத்தமட்டில், ஏதோ ஒரு வகை வாகனப் பயணமாகவே அமைந்தது. பர்மாவிலிருந்து நடையாகப் புறப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதிலிருந்து சென்னை வந்து சேரும் வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ஏற்பட்ட அனுபவங்களும் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏறக்குறைய நூற்று நாற்பத்தைந்து நாள் சரித்திரம் என்று கூறலாம். இந்த நூலை நடைப் பயணத்தைப் பற்றிய நூலாக மட்டும் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். - வெ. சாமிநாத சர்மா
இரண்டாம் உலக போரின் போது பர்மாவில் குடியேறி வசித்துவந்த தமிழ் பிராணமண குடும்பத்தின் வடகிழக்கு இந்தியா வழியூடான பயணகுறிப்புகள் பற்றி புத்தகம். 90% பயணம் வாகன பயணமாக தான் நடந்துள்ளது . ஆனால் நடைவழி பயணம்னு புத்தக பெயரை ஏன் எழுத்தாளர் வைத்தார் என்று தெரியவில்லை. இன்றைய கோவிட் முடக்கத்தின் போதைவிட அன்றைய பிரிட்டீஷ் அரசு மக்களை நன்றாகவே நடத்தி மக்களை கொண்டுவந்து சேர்த்துள்ளதாக தான் இந்த புத்தகம் வாயிலாக தெரிகிறது.
ஆசிரியர் : வெ . சாமிநாத சர்மா பயணக்கட்டுரை சந்தியா பதிப்பகம் 224 பக்கங்கள்
மனிதன் தன் விருப்பத்தின் பெயரில் ஒரு பக்கம் தொடர்ந்து பயணம் செய்தாலும் மற்றொரு பக்கம் சூழ்நிலைகளின் நிர்பந்தத்தால் பயணிக்கிறான் . இந்த பயணங்களின் முறையும் , வழியும் அவரவரின் வசதிக்கும் , வாய்ப்புக்கும் ஏற்ப ஏற்படுத்திக்கொள்கின்றனர் . சமகாலத்தில் நம் நாட்டில் கொரோனா ஊரடங்கு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வடமாநில மக்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளையும் , பிள்ளை குட்டிகளையும் சுமந்துகொண்டு நடை பயணமாகவே தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி சென்ற பயணங்கள் யாவும் நாம் மறக்கமுடியா ஒன்று . உண்மையில் இந்த வகை பயணங்களின் வலியை அனுபவித்தாலேயொழிய நம்மால் புரிந்துகொள்வது கடினம் . இந்த பயணத்தில் வெற்றிகண்டவரை விட தோல்வியுற்றவர்களே அதிகம் , மேலும் கொரோனவை கண்டு அஞ்சி தன் சொந்த மண் தான் தங்களுக்கு உலகிலேயே பாதுகாப்பான கருவறை என்றெண்ணி உயிர் என்ற ஒற்றை நம்பிக்கையை மனதில் சுமந்துகொண்டு சென்றவர்களில் எத்தனை பேர் வழி நெடுக பிணமாக ஒதுங்கினார்கள் என்பதை அறிந்துகொள்ளவோ , கண்டுகொள்ளவோ , வருந்தவோ கூட நம் அரசிற்கும் , நாட்டு மக்களுக்கும் நேரமில்லாமல் போனது பெரும் வருத்தத்திற்குரியது . இப்படி நாட்டிற்குள்ளே நிகழ்ந்த பயணங்களிலே இவ்வளவு கொடூரம் என்றால் , நாடு விட்டு நாடு செல்லும் நடை வழிப் பயணம் பற்றி சொல்லவா வேண்டும் . அதிலும் யுத்த பின்னனியில் ஒரு தரை வழிப் புலம் பெயர்வு என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று . இப்படி ஒரு பயணத்தின் தன் சொந்த அனுபவப்பதிவு தான் இந்த புத்தகம் .
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் (1942 )ஜப்பான் - பிரிட்டன் மோதலின் இறுதி அத்தியாயத்தில் ஜப்பான் பர்மாவை ( இன்றைய மியான்மார் ) கைப்பற்றப்போகும் விளிம்பில் அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கினர் . வசதி படைத்தவர்கள் கப்பல் வழி , வான் வழி சென்றனர் அதுவே வெகுஜன மக்கள் நடை பயணமாக இந்தியாவை நோக்கி பயணித்தனர் . அப்படி வெகுஜன மக்களோடு பயணித்த ஒரு எழுத்தாளர் வெ சாமிநாத சர்மா , இவர் பர்மாவில் 10 ஆண்டுகாலம் தமிழ் பத்திரிக்கை நடத்தியவர் . இவரும் இவருடைய துணைவியாரும் சேர்ந்து பல நண்பர்களின் துணை கொண்டு 1942 - பிப்ரவரி இறுதிவாரத்தில் தங்களுடைய பயணத்தை தொடங்கி மே -15 1942 இல் சென்னை வந்து சேர்கின்றனர் . மகிழுந்து , பேருந்து , ராணுவ லாரி , மாட்டு வண்டி , மிதிவண்டி , டோலி , நடை , இறுதியில் ரயில் என பல்வேறு விதமான பயண முறைகளை கடந்து வந்துள்ளனர் .
எப்படி சாத்தியம் ?
இந்த கேள்விக்கான பதில் - இந்த கேள்வியை ஒரு போதும் அவர்கள் தங்கள் மனதில் வளர விடாமல் முளையிலேயே கிள்ளியெறிந்ததுதான் . இந்த உலகத்தில் மனிதன் நினைத்தால் நிகழ்த்தமுடியாத ஒன்று இல்லவே இல்லை . தன்னுடைய 45 ஆவது வயதில் , தன் துணைவியுடன் , தன் மொத்த சொத்துக்களையும் அப்படியே கைவிட்டு , தான் பெரிதும் நேசித்த ஜோதி பத்திரிகை அலுவலகத்தை நிற்கதியில் விட்டு , தன் நண்பனிடம் கடனாக பெற்ற 160 ரூபாயுடன் தன் சொந்த மண்ணை அடைந்தே தீருவேன் என்ற அந்த வலுவான எண்ணம் புயலிலும் அணையாத ஒரு எரிதழல் போல் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்ததே இப்பயணத்தை சாத்தியப்படுத்தியது .
என்னென்ன இன்னல்கள் ?
திட்டமிட்ட பயணத்திலேயே ஓராயிரம் இன்னல்கள் தலைதூக்குமாயின் , ஊசலாடும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வழியறியா இந்த பயணத்தில் இன்னல்களுக்கு ஏது பஞ்சம் ? . இன்று கணக்கிட்டு பார்த்தால் ஏறத்தாழ 2500 மைல் தூரம் இவர்கள் சாலை போக்குவரத்து சரிவர இல்லாத காலகட்டத்தில் , போர் பின்புலத்தில் , ஆங்கிலேய ஆட்சியின் பிடியில் , உணவு ,உடை, உறைவிடம் ஆகியவற்றிற்கு எந்தவித உத்தரவாதமுமில்லாத ஒரு சூழ்நிலையில் இந்த பயணம் அசாதாரண ஒன்று . கொளுத்தும் வெயில் , கொட்டும் மழை , சூறை காற்று , உறையவைக்கும் பனி , அடர்ந்த காடுகள் , செங்குத்தான மலைகள் , அபாய பள்ளத்தாக்குகள் , முகாம்கள் எனப்படும் குப்பை மேடுகள் , ரத்தப்போக்கு , காலரா , சொல்லமுடியா உடல் வலி , சாலையெங்கும் ஒதுங்கிக்கிடக்கும் பிணங்கள் , வெல்லமுடியாத பசி , சுமந்துவந்த பொருட்களை ஒவ்வொன்றாக களைந்தெறியும் வேதனை என இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம் . தனக்கு நிகழ்ந்த இன்னல்களை காட்டிலும் தன் கண்முன்னே பயணத்தின் கடினத்தால் சுருண்டு விழுந்து இறந்த பாட்டாளி மக்களை கண்டு இவரடைந்த துயரம் தான் மிகுதி . இத்தனை துயரங்களுக்கு நடுவே இந்த பயணம் தொடர காரணம் மனிதன் தன் சக மனிதனின் மேல் வைத்த பேரன்பு மட்டுமே . இவரை பத்திரமாக வழியனுப்பிய பர்மா மக்கள் தொடங்கி - ஒரு குழந்தையை சுமந்துவருவது போல ஏனையில் சுமந்து மலைகள் கடந்து வந்த அந்த நாகர்கள் , மணிப்பூரிகள் வரை எல்லோருக்கும் பொதுவான ஒரு பண்பு பேரன்பு மட்டுமே .
எழுத்தாளனாக ஒரு பயணம் -
தான் பெற்ற அறிவில் 20 விழுக்காடு சாமிநாத சர்மாவின் புத்தகங்களின் வழிதான் துன்று கண்ணதாசனே கூறுவதற்கு என்ன காரணம் ? எழுத்தின் மேல் இவருக்கு இருந்த விருப்பம் மட்டுமே காரணம் . தன் வலிமிகுந்த பயணத்தில்கூட அவர் தன் வாசிப்பை கைவிடவில்லை , புத்தகங்களை சுமந்து வந்தார் , தினசரி தவறாமல் நாட்குறிப்புகள் எழுதினார் , இதற்கெல்லாம் மேலே தன் பயணம் நெடுக இவர் பிளாட்டோவின் அரசியல் என்ற புத்தகத்தை முழுவதுமாக மொழிபெயர்த்து முடித்துவிட்டார் . வரும் வழியெங்கும் மக்களின் வாழ்வை , பண்பாட்டை அறிந்துகொள்கிறார் , இயற்கை அழகை ரசித்து உள்வாங்கிக்கொள்கிறார் , நகர்வலம் செல்கிறார் , தன்னால் இயன்ற உதவிகளை தவிக்கும் மக்களுக்கு செய்கிறார் , மொழியறியா மக்களிடம் உணர்வுகளின் வழி உரையாடுகிறார் , எக்காரணம் கொண்டும் தன் நிலையையோ , நட்பையோ , செல்வாக்கையோ பயன்படுத்தி உதவி கோர எண்ணவில்லை அவர் . தான் கடனாக பெற்ற 160 ரூபாயை இந்தியா வந்தவுடன் தன் நண்பருக்கு மணிஆர்டர் செய்துவிட்டார் என்றால் இவரை எந்நிலையில் வைத்துப்பார்ப்பது என்பதை நீங்களே முடிவெடுங்கள் . நிச்சயம் ஒரு எழுத்தாளனால் மட்டுமே இத்தகைய வலிமிகுந்த , தடை மிகுந்த ஒரு பயணத்தையும் இத்தனை அனுபவித்து கடந்து செல்ல முடியும் , அதனை பதிவு செய்து , காலம் கடந்து 21 ஆம் நூற்றாண்டில் ஒரு வாசகன் கையில் கொண்டு சேர்க்கவும் முடியும் .
பல்லாயிரம் மைல்கள் கடினமான பாதைகளை கடந்து இந்தியாவின் எல்லையில் தன் தாய்நாட்டின் மண்ணில் முதலில் கால் பதிக்கும் தருணம் தன் உடல்சிலிர்த்து தன்னையறியாமல் சில கண்ணீர்த்துளிகள் தாய்மண்ணை தொட்டு��ிடும் அந்த காட்சியை 80 வருடங்களுக்கு பின் இன்று நாம் வாசிக்கையில் நமக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு உடலெங்கும் படர்ந்து கண்களை கனமாக்கி விடுகின்றது . அட்டவணை கொண்டு , அடுக்கிவைத்த பெட்டிகளுடன் , அலுப்பு தெரியா வண்ணம் , அதீத பாதுகாப்புடன் பக்கத்துக்கு மாநிலங்களுக்கு விடுமுறையில் மட்டுமே பயணிக்கும் இக்காலத்து சமூகத்தினர் பயணம் குறித்த மாய பிம்பத்தை கடந்து உண்மையான பயணம் எதுவென்பதை அறிந்துகொள்ள வாசிக்கவேண்டிய புத்தகம் .
புத்தகத்தின் தலைப்பு இருப்பதைப் போல இது நடைவழிப் பயணம் அல்ல கார் ரயில் கப்பல் படகு லாரி டோலீ (பல்லக்கு போன்றது) இப்படி பல வாகனங்கள் வழியாகவே பயணங்கள் வருகிறது அதுமட்டுமல்லாமல் முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் தவிர பிறகு வரும் அனைத்தும் வெறும் அன்றாட நிகழ்வாக மட்டுமே இருக்கிறது.