சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், 'இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது' என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, 'இவனும் ஏதோ சொல்லுகிறானே' என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப் போயிருக்கிறது. எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து. அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எ
Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.
கடல் காற்றும், அலைகளும் எவ்வாறான மன நிறைவையும், அமைதியையும் தருமோ, அதே அளவு நிறைவைத் தரக்கூடியது வண்ணநிலவன் அவர்களின் 'கடல்புரத்தில்' நாவல். நாவல் பற்றிய சுருக்கமான அறிமுகம் இந்தக் காணொளியில்.
தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் கடல் மீன்பிடிக்கும் சமூகத்து பெண்ணொருத்தியையும், மனப்பாட்டுக்குக்கடற்கரையையும் தலமாக கொண்டு 1977ஆம் ஆண்டே எழுதப்பட்ட ஒரு குறுநாவல் . நான் படித்த வண்ணநிலவனின் இரண்டாம் நாவல் இது.இந்த கதையில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் , பிலோமியை ஒட்டியே கதை நகர்ந்தாலும் , எனக்கென்னவோ அனைவருமே கதாநாயகர்களாவே உணரப்பெற்றேன்.
என் மாமியாரின் சொந்த ஊர் மனப்பாட்டுக்கு மிக பக்கம் என்பதாலோ, நான் சிலமுறை இந்த கடற்கரைக்கு சென்றதாலோ, இதேபோன்ற மனிதர்களை சந்தித்ததினாலோ என்னவோ கதையை படிக்கும் போது ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். கிட்டநின்றாலும் உரக்க கத்தி பேசும் பழக்கமும் (கடலுக்கு செல்பவர்கள் கத்திதான் பேசியாகவேண்டும்) ,தெற்கத்தி பாஷையையும்,கடல் உப்பு காற்றையும், காயப்போட்ட சாளைமீன் கருவாட்டு வாசமும் (கவனிக்க:நாற்றம் என்று சொல்லவில்லை) , சுட்டெரிக்கும் பகல் வெயிலையும், தேவாலய மணி ஓசையையும் என் வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டார் வண்ணநிலவன்.
இந்த நூலில் பல நுட்பமான செய்திகள் சொல்லப்பட்டதை கவனித்தேன் . அம்மக்களின் வாழ்வுமுறை , அவர்களின் கஷ்டங்கள், வறுமை, உலகில் என்றுமே நடந்துகொண்டிருக்குக்கூடிய வர்க்க போராட்டம் , பெண்களின் நெடுந்துயரம் ,ஏமாற்றங்கள் , பழமைக்கும் புதுமைக்கும் நடக்கும் தள்ளுமுள்ளு , ஆச்சர்யமூட்டக்கூடிய , சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத ஆனால் இன்றும் தொடர்கிற நட்பு, மதம்கடந்த சகோதரத்துவம் என அடுக்கிகொண்டே போகலாம். இதை எல்லாம் வெறும் சொற்பம் 5 மாத காலகட்டத்திலேயே அந்த பகுதியில் தங்கி கிரகித்து எழுதினேன் என்று வண்ணநிலவன் ஒரு பேட்டியில் சொன்னது பெரும் ஆச்சரியம்.
இந்நூலை படிக்கும்போது இது எவ்வளவு தமிழ் சினிமாக்களுக்கு அகத்தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன் . நீர்ப்பறவை , கடல் நினைவுக்குவருகிறது .
கண்டிப்பாக படிக்கவேண்டிய சாமானியர்களை பற்றிய குறுநாவல்.
புத்தகம்: கடல்புரத்தில் எழுத்தாளர்: வண்ணநிலவன் புனைவு? ஆம் வகைமை(கள்): குடும்பம், உறவுகள், தனிமை, அமைதி, கடல், மனிதம் புத்தகம் அறிமுகம் ஆனது விதம்: பல எழுத்தாளர்கள், வாசகர்களின் பரிந்துரை
3 வாக்கியங்களில் புத்தகம் பற்றி: மணப்பாடு என்ற கடலோர கிராமத்தில் வசிக்கும் பருவ வயதான பிலோமி என்ற பெண், அவளது குடும்பம், சுற்றம், நண்பர்கள் மூலம் அவள் அடையும் முதிர்ச்சிதான் பிரதானமான கதைகரு. எழுபதுகளில் நடக்கும் கதை என்று கொண்டால் அப்போதைய பொருளாதார, சமூக மாற்றங்கள், அதனால் ஏற்படும் வேறுபாடுகள், இருந்தாலும் அப்பகுதி மக்களிடம் இருக்கும் அன்னியோன்யம் என்பவை அழகாக காட்டப்பட்டுள்ள குறுநாவல்.
புத்தகம் கொடுத்த தாக்கம்: கடற்கரை மணலில் அலைகளில் நிற்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நீர் காலை சுற்றி மணலை இழுத்துச் சென்று புதைபடும் போது ஏற்படும் ஒரு சிறு இன்பத்தை இப்புத்தகம் வாசிக்கும் போது உணர முடிந்தது. பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு சென்ற காலங்கள் பல. அப்படியே சில தூரங்கள் தள்ளி அங்கே குடியிருக்கும் மக்களை கை பற்றி அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறது. கவிச்சு வாடையும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்து கரோல் சத்தங்களும் காதோடு ஒலிக்கக் கேட்டன. வாழ்வின் பெரும்பகுதியை கடற்கரையோர நகரங்களில் செலவிட்டுருப்பினும் இரண்டு மூன்று நிகழ்வுகளே கடலோர மக்களோடு பழகும் வாய்ப்பாக கிடைத்தது, அந்த நாட்களை நினைவுபடுத்தி திரும்பிப் பார்க்க வைத்த வாசிப்பு. கதைமாந்தர்கள் பெயர்கள் (அப்பச்சி குரூஸ், செபஸ்தி, மரியம்மை, ஐசக், கேதரின், ரஞ்சி, ரோசாரியா, தாசையா, அமலோற்பவம்) ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக, இதே போன்ற பெயர்கள் கொண்ட பழைய நண்பர்களை நினைவுபடுத்தின. கடற்கரையோரத்தில் நிலவைப் பார்த்தபடியும், அலைச்சத்தத்தைக் கேட்டபடியும், அலைகளை உணர்ந்தபடியும் கழித்த பின்னிரவு நாட்களின் நினைவுகள் அலாதியானவை. அப்படிப்பட்ட நினைவை மீட்டி எடுத்த வாசிப்பனுபவம். பிலோமியின் மன உணர்வுகளை அப்படியே கொண்ட பாடலாக தேவனின் கோவில் மூடுய நேரம் (அறுவடை நாள்) பாடல் ஒலிக்கிறது, இளையராஜா இசையில், சித்ரா அவர்களின் குரலில்.
யார் இந்த புத்தகம் வாசிக்கலாம்? எழுத்து நடையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் வாசம் வீசும். வாசிக்க வாசிக்க அது பிடிபடும். கடல், மனவோட்டங்கள், மனித உறவுகள் பற்றி வாசிக்க பிடிக்கும் என்பவர்கள் வாசிக்கலாம். இயல்பான கதை, பெரிய திருப்பங்கள் இல்லாத மென்மையான எழுத்து நடை என்பவை கவர்ந்த விடயங்கள்.
பிடித்த மேற்கோள்கள்: * கடல் இரைச்சல் 'சோ'வென்று மழை பெய்கிறது மாதிரி கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலேதான் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள்; செத்துப்போனார்கள். கடல் அம்மை அவர்கள் வழிபடுகிற மரியாளுக்கும் சேசுவுக்கும் சமம்
* கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக மேகங்கள் மேற்கே சென்றுகொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது.
* ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன?
* அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப்போல, வாத்தியைப் போல் வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
தொடர்புடைய பிற வாசிப்புகள், பிற ஆக்கங்கள்: புத்தகங்கள்: * வண்ணநிலவனின் கதை பெண்கள்: எஸ்தர்: சிறுகதை, ரெயினீஸ் ஐயர் தெரு பெண்கள், மனிதர்கள் * கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம் (P. Singaram) திரைப்படங்கள்: கடலோரக் கவிதைகள், நீர்பறவை, கடல் மீன்கள், கடல், கட்டுமரம் திரைப்பாடல்கள்: * தேவனின் கோவில் மூடுய நேரம் (அறுவடை நாள்) நானொரு சோக சுமைதாங்கி துன்பம் தாங்கும் இடிதாங்கி பிறந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி இணைவது எல்லாம் பிரிவதற்காக இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக மறந்தால்தானே நிம்மதி
* ஆகா காதல் கொஞ்சி கொஞ்சி பேசியதே (மூன்று பேர் மூன்று காதல்) - இந்தப்பாடலின் இசை��ும், ஒளிப்பதிவும், மணப்பாடு கிராமத்தின் அழகும்!
“அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப்போல, வாத்தியைப் போல் வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.”
You can almost taste the salt of the sea in this well written book set in a fishermen village. With it's 'vattara' tamil (which sounds beautiful), their faith and beliefs and the 'neithal thinai' (Water and beach land type in Tamil) - this is the first books I have read in this setting.
The fishing village of Manapattu is seeing a change with the arrival of new 'lange kappals' (Fishing boats) giving a tough time to the old boats. We find the Cruze Michael family - heavily in debt - with an old boat and his world revolving around the sea. We follow Philomy kutty - the last daughter of the family and through her we see the moved out brother and sister, the people of the village.
We watch the almost guileless innocence of Philomy kutty as she falls in love, tragedy, poverty, loss and sickness - and then rise back from it all like the sea. The best part is that other characters in the novel have already gone through similar experiences and hence the author downplays her as a heroine. Characters like Ranji, Vaathi and Catherine are written with so much compassion and yet seem realistic.
There is a rawness in the language - whether hurling abuses, loud arrack influenced exchanges or the deep yet selfless love affairs. Enjoyed the book's narration and voice which reminded me of Ceylon radio.
கடலை நம்பி வாழும், கடல் மாதாவைத் தெய்வமாக வணங்கும் கடல்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளை, அவர்களது மொழியின் வழியிலேயே விளம்பிச் செல்லும் கதைக்களம்...
கடலும் அதில் மிதக்கும் அவர்களது வல்லமும்(boat) போலவே தான், அவர்களது அகமும் புறமும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கிறது. புற வாழ்வின் போதாமைகளும் இல்லாமைகளும்… அக வாழ்வின் தனிமைகளும் துயரங்களுமான ஏராளமான கதைகள் அக்கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கின்றன. அவைகள் ஒன்றோடொன்று பிணைந்து நின்ற வகையிலும், கடலின் ஆழமும் கரையின் அழுத்தமும் ஒருங்கிணைந்த உணர்வுகளின் நேர்த்தியிலும் கதையின் களம் மேலும் விரிவு கொள்கிறது..
எந்த காலத்திலும் மாறாத ஒன்றான தந்தைக்கும் மகனுக்குமான சச்சரவுடனேயே கதை ஆரம்பிக்கிறது. வாத்தியாராக இருக்கும் மகன் செபஸ்திக்கு, தனது தந்தை குரூஸின் பழைய வல்லத்தையும்(boat) வீட்டையும் விற்று விட்டு, நகரத்தில் ஒரு பெரிய சைக்கிள் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், குரூஸ் அவனது வல்லத்தை மிகவும் நேசிப்பவனாதலால், மகனது ஆசைக்கு மறுப்பு சொல்கிறான். இருவருக்குமிடையே இதன் காரணமாக அவ்வபோது பனிப்போர் நடப்பது வழக்கமாகிப் போகிறது.
குரூஸின் மனைவி மரியம்மைக்கு மகனுடன் செல்வதிலேயே தான் விருப்பம். அதற்கு குரூஸ் முட்டுக்கட்டைப் போடுவதால், ஏற்கெனவே அவன் மேலிருந்த வெறுப்பு அதிகரிக்கிறது. இயல்பிலேயே அவள் எல்லோரிடமும் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே நடந்து கொள்கிறவள். அது கட்டியவனானாலும், பெத்த பிள்ளைகளானாலும், ஊர் சனங்களானாலும் எல்லோரிடமும் அவளுக்கு ஒரே முகம் தான். ஆனால், அவளுக்கும் பிரியமான ஒரு முகம் இருக்கிறதென்றால், அது அந்த ஊர் வாத்தியின் முகம் தான். அவளுக்கும் அவருக்கும் இருக்கும் நட்பு ஊரறிந்த ரகசியம். ஆனால், ரகசியங்களின் நிலை பெரும்பாலும் எதிர்மறை பிம்பங்கள் தானே. இவர்களது உறவும் அதற்கு விதி விலக்காகவில்லை. ஆனால், அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையும் இல்லை.
குரூஸின் இளைய மகள் பிலோமிக் குட்டி…. அவளுக்கு சாமிதாஸின் மேல் தீராத காதல். அவனுக்கும் அவள் மீது அப்படித்தான் என்றாலும், அவளுடன் படுத்துக் கொண்ட பின்பும், அவனுக்கு வேறு ஒருத்தியுடன் திருமணம் ஆகிறது. அதனால், மனமுடைந்து போகும் பிலோமியை சிறிது நாட்கள் டைஃபாய்டு பிடித்துக் கொள்கிறது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில், எதிர்பாராதவிதமாக அவளது தாய் மரியம்மையும் மரித்து விடுகிறாள்.
நோய்மையினாலும் மரணத்தினாலும் எழும் அதீத உணர்வுகள் சில நேரங்களில் பிரமிக்கத்தக்க வகையில் ஆழ்ந்த தெளிவைக் கொடுக்கும். அது போன்றதொரு தெளிவையே பிலோமியும் அடைகிறாள். காதல் மரத்த மனமும், அம்மை மரித்த வீடும் அவளுக்கு சொல்லொணாத துக்கத்தைக் கொடுத்தாலும், அதிலிருந்து வெளியே வருகிறாள். அவளுக்கு ஆறுதலாக அவளது தோழி ரஞ்சியும், அம்மையின் மனம் கவர்ந்த வாத்தியும் இருக்கின்றனர். ஆம், மரியம்மையின் மரணத்திற்கு பிறகான நாட்கள், பிலோமியை அவர்பால் அன்பு கொள்ள வைக்கிறது.
காலமாற்றத்தின் விளைவால் கடலில் ராஞ்சிகளின்(மீன் பிடி கப்பல்) வரவுகள் அதிகரிக்கின்றன. அதன் வேகத்தை சிறு சிறு வல்லங்களால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது. ஆகவே, முடிந்தவரைத் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த குரூஸிற்கும், மரியம்மையின் மரணத்திற்கு பின்னால் எதுவும் முடியாமல் போகிறது. வல்லத்தையும் வீட்டையும் விற்று விடுகிறான்.
குருஸும் பிலோமிக்குட்டியும் தத்தம் துக்கங்களைத் துறந்து… இன்னும் கூட மிச்சமிருக்கும் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்கின்றனர்….
கதையின் மாந்தர்கள்… அது ஆணானாலும் பெண்ணானாலும் எல்லோருக்குள்ளும் ஒரு அகத்தனிமை இருக்கிறது. அது கடலின் அலைகளைப் போல எப்போதும் ஏமாற்றங்களாலும் ஏக்கங்களாலும் நிரம்பித் ததும்பிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும், அதற்காக அவர்களது வாழ்க்கை அப்படியே நின்று விடுவதில்லை. அடுத்தடுத்த படி நிலைகளை நோக்கி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது..
இப்படியான வாழ்வின் அக உணர்வுக்கும் புற வாழ்வுக்குமான முரண்களை அவர்கள் புரிந்திருந்தனர். அதன் காரணங்களை ஆராயவும் முற்படவில்லை, நியாயம் கேட்டு கடவுளிடம் முறையிடவுமில்லை. மாறாக, இத்தகைய முரண்களே வாழ்வின் இயல்புகளென அவர்கள் உணர்ந்து, அதை ஏற்றுக் கொள்ளவும் பழகி விட்டிருக்கின்றனர் என்பதை… ரஞ்சி, சாமிதாஸ், பிலோமிக்குட்டி, வாத்தி போன்ற கதாபாத்திரங்கள் உணர்த்துகிறது.
வாழ்வின் நியதிகள் எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லை என்றாலும், மனதின் வலிகள் பெரும்பாலும் ஒன்றின் கிளைகளாகவே விரிக்கப்படுகின்றன. அவை அன்பின் உணர்வுகள் அரவணைக்கப்படாமல் போகும் போது உருவாகும் வெற்றிடங்களின் நீட்சிகளே.
நூற்றிச்சொச்ச பக்கங்களில் விரல்பிடித்து நெய்தல்நில மக்களோடு பழகவைத்துவிட்டார் வண்ணநிலவன். துரோகம், வஞ்சம், தொழிற்போட்டி இவைகளையும் மீறி அவர்களுக்கிடையே அனைவரையும் ஒருங்கிணைக்கும் அன்பிருக்கிறது. சொல்லப்படாமல் அவர்களுக்கு மத்தியிலிருக்கிற பிரியம் வெளிப்படும் தருணங்கள் நம் மார்பு மேலும் கீழும் மூச்சுவாங்க ஆரம்பித்துவிடுகிறது.'கடல்புரத்தில்' நடந்துபழகியபின் (வாசித்துமுடித்தபின்) காலிடுக்கில் இருக்கும் மணற்துகள்களை அவ்வளவு எளிதில் உதற மனம் வருவதில்லை.
என்னத்த சொல்ல, மனசுக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு, மீனவ சமுதாய பறையக்குடி மக்களோட வாழ்க்கை தான் இந்த புத்தகம், இந்த புத்தகத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர் அவருக்கான ஒரு நியாய கோட்பாடோடு இருப்பார்கள், அதில் நம்மை ஈர்க்கும் கதாபாத்திரம் தான் பிலோமி, அவளது மூலமாக தான் கதையே நகர்கிறது அவளது குடும்பத்தை வைத்து தான் வ��்ணநிலவன் பறையக்குடி மக்களின் கதைகளை சொல்கிறார், மனிதனுக்குள் இருக்கும் நல்லது கேட்டது என எல்லாமே இந்த பறையக்குடி மக்களிடம் உள்ளது, ஏழை பணக்காரன், கஷ்டப்படுகிறவன் கஷ்டம் கொடுக்கிறவன் என்றெல்லாம் இந்த சின்ன சமுதாயத்துக்குள்ளும் இருக்கு, லாஞ்சி படகு வைத்திருப்பவன் விசை படகு வைத்திருப்பவனை ஒடுக்குவதும், ஒரே சமூகத்துக்குள் வன்மங்கள் வளர்ந்து படகை தீயிட்டு கொளுத்துவது, இதற்கிடையில் பிலோமியின் காதல் ஏமாற்றம் அடைவதும் அந்த ஏமாற்றம் பிலோமியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதுமாய் நாவல் ஒரு நல்ல கடல்வாழ் மக்களின் வாழ்வியலையும், மனித மாண்புகளையும் நம்முள் கடத்துகிறது.
A fictional story of a family and the life around Manappad, a coastal Village in South India.
மணப்பாடு கடலையும், அந்தக் கடல் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாவலே 'கடல்புரத்தில்'
// அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்தான் ஊற்றுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனாதி காலந்தொட்டு கடலுடனே பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கடல் அம்மையை அவர்களுடைய சேசுவுக்கும் மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். அவள் பதிலுக்கு தன்னுடைய பெரிய மடியிலிருந்து மீன்களை வாரி வாரி அவர்களுக்கு வழங்குகிறாள். //
Somebody wrote this about this novel in a review – “கடல்புரத்தின் ஈரத்தை தன் எழுத்தில் பாய்ச்சி வண்ணநிலவன் நம் நெஞ்சிலும் அன்பை பெருகச்செய்கிறார்.” Well said! Nothing more needs to be said.
பிலோமியை சாமிதாஸ் ஏமாற்றுகிறான். பிலோமியின் அண்ணன் செபஸ்தி ரஞ்சியை ஏமாற்றுகிறான். மரியம்மை தன் கணவன் குரூசுக்குத் தெரிந்தே வாத்தியுடன் தொடர்பில் இருக்கிறாள். குரூசின் நண்பன் ஐசக் தன் மனைவி இறந்தபிறகு பிலோமியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். வல்லத்தை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்காமல் குரூசை சிலுவை ஏமாற்றிவிடுகிறான். ரஞ்சிக்கும் அவன் கொழுந்தனுக்குமான உறவு வேறு ஒருவிதத்தில் நாவலின் இறுதியில் விவரிக்கப்பட்டிருக்கின்றது. கடைசியாக பிலோமி தன் தாயாருடன் பழக்கத்தில் இருந்த வாத்தியுடன் சென்று வசிக்கிறாள்.
இந்த நாவலின் முன்னுரையில் வண்ணநிலவன் இப்படிக் கூறுகிறார்."கொலை செய்தார்கள்; சினேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி புருஷனுக்குத் தெரிந்தே துரோகம் இழைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனால் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு."
ஒருவரிடம் அன்பு, நேசம் இருக்கிறது என்பதற்காகவே அவர்கள் செய்யும் துரோகம், வஞ்சகம் எல்லாம் நியாயமாகிவிடுமா? '
இந்த நாவல் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வையும் சிறுமைப்படுத்துவதாகவே உணர்கிறேன்.
இந்த நாவல் இலக்கியத் தரத்தில் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளில் எனக்கு உடன்பாடு இல்லை.
மணப்பாடு என்கின்ற கடற்புரத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் அன்றாட நிகழ்வுகளை அங்கு நடக்கும் வாழ்வு சார்ந்த அரசியலை நவீன படகுகளுக்கும் வள்ளங்களுக்கும் இடையே உள்ள நிகழ்வுகளை எளிமையான வார்தைகளால் எடுத்து கூறுகின்றார் வண்ணநிலவன்.மனதை உருக வைக்கும் கதை.
"கடல்புரத்தில்" - வண்ணநிலவன் ***************************** தூத்துக்குடி மணப்பாடு(மணல்பாடு)ல் உள்ள கடற்கரை கிராமத்தில், வல்லங்களையும்(படகு) லாஞ்சுகளையும் வைத்து மீன்பிடிக்கும் பரதவகுலத்தவர்(பறையர்) இடையே நடக்கும், அவர்களது வாழ்போக்கை படம்பிடிக்கும் புனைவு நாவல். 1977ல் முதல் பாதிப்பு கண்டது.
கீழே வைத்து விட்டு மீண்டும் தொடரக்கூடிய அளவிற்கெல்லாம் இல்லாது தொடர்ந்து படிக்க தூண்டும் எழுத்து நடை. கதையெங்கிலும் மென்சோகம் இழையோடும்., இதுதான் தொடக்கம் இதுதான் முடிவு என ஒரு புள்ளியில் தொடங்கி இன்னொரு புள்ளியில் முடிந்து விடக்கூடிய வாழ்வு இல்லை நம்முடையது.,யார் இருந்தாலும் போனாலும் அதன் போக்கில் அதனுடன் பயணிக்கும் விதமாக கதைமாந்தர்களின் வாழ்வு புனையப்பட்டிருக்கிறது இக்கதையில்.
குறிப்பாக, பிலோமி எனும் இளம்பெண்ணின் பார்வையிலேயே, நம்மை கதை நெடுகிலும் அந்த கடல்புற கிராமத்தை சுற்றி வரச்செய்யும். அவளின் தந்தை குருஸ், தாய் மரியம்மை, அண்ணன் செபஸ்தி, அக்காள் அமலோற்பவம், காதலன் சாமிதாஸ், தாயின் ஆண் நண்பர் வாத்தியார், சாயபு இப்படி மேலும் பல கதை மாந்தர்களை, விளிம்புநிலை மனிதர்களாய் காட்டினாலும், அவர்களை முதிர்வும், தேர்ந்த பக்குவமும் கொண்டவர்களாகவே படைத்திருக்கிறார், திரு வண்ணநிலவன். அன்பும் காதலும் பிரதானமாக கொண்டு, ஒழுக்கம், வறுமை, உதவும் பண்பு, கிறிஸ்துவ வழிபாட்டு நம்பிக்கைகள்., மேலும், வல்லங்கள், மீன் பிடி நுணுக்கங்கள் , கடல் சீற்றம், நுரைகளுக்கான காரணங்கள் என பல உள்ளிணைப்புகள் கொண்டதாகவும் இந்நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தகடல்புறமும் அதில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் வல்லங்களும் லாஞ்சுகளும், அவர்களுக்குள்ளான பகைமைகளும், பிலோமியின் குடும்பத்தில் அவள் குடும்பத்தில் ஏற்படும் பிணக்கங்களும் என அனைத்தையும் அக்கிராமத்தில் அவர்களுடனேயே அருகிலிருந்து பார்த்த உணர்வை பெறமுடிகிறது.
1977 களிலிருந்து இப்படி ஒரு முதிர்ச்சியான , எக்காலத்திற்கும் பொருந்தும்படியான, எக்கால வாசகர்களுக்கு பொருந்தும்படியான படைப்பாக இந்நாவல் இருப்பது நிச்சயம் வியப்பை அளிக்கிறது.
வண்ணநிலவனின் "கடல்புறத்தில்" கடலோர கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்வை மையமாக கொண்டு பயணிக்கிறது. இந்நாவலில் வரும் கதைமாந்தர்களின் வழி அம்மனிதர்களின் தனிமனித உறவுகளையும், அந்த உறவுகளினால் ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கலையும் விவரிக்கிறார் வண்ணநிலவன். உறவுகளில் வரும் சண்டைகளையும், குற்ற உணர்வுகளையும், துரோகங்களையும் மீறி நிலைத்திருக்கும் அன்பை பேசும் நாவல் இது.
வல்லத்தில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும், லாஞ்சியில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் நடக்கும் தொழில் போட்டியின் தொடர்ச்சியாய் வரும் சச்சரவுகளையும், அதன் விளைவுகளின் எல்லைகளையும் பேசுகிறது இந்நாவல்.
தலைமுறை தலைமுறையாய் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் குரூஸ் மிக்கேலுக்கும், குலத்தொழிலை விட்டுவிட்டு வாத்தியாக அண்டை ஊருக்குச் சென்ற அவரது மகன் செபஸ்த்திக்கும் நடக்கும் உரையாடலில் துவங்குகிறது நாவல். வல்லத்தையும் குலதொழிலையும் உயிரென பாவிக்கும் தந்தைக்கும், வறுமையிலிருந்து விடுபட நினைக்கும் மகனுக்குமான தலைமுறை இடைவெளியை இதில் காட்சிப்படுத்துகிறார் வண்ணநிலவன்.
நாவலின் பிரதான கதாப்பாத்திரமாக வரும் பிலோமி தான் சந்திக்கும் எல்லோரிடமும் அன்பை காண்கிறாள் - அந்த உறவு தனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும். சமூக பார்வையில் பிலோமியின் தாய் - வாத்தியார் உறவு சிக்கலான உறவாக இருந்தும், காமத்தை தாண்டிய ஆண்-பெண் உறவை பிலோமி-வாத்தியார் இடையே இந்நாவலில் காண முடிகிறது.
இந்நாவலில் வரும் மனிதர்களின் வாழ்வில் "கடல்" ஒரு அங்கமாய் இருக்கிறது. பல இடங்களில் தங்கள் துயரங்களை கடலிடமே புலம்புகின்றனர். நலிந்து வரும் வியாபாரத்தால் படும் நட்டங்களை கடலிடமே முறையிடுகின்றனர். அவர்களுக்கு பல நேரங்களில் கடவுளாகவும், கண்ணிர் துடைக்கும் கரமாகவும் கடலே இருக்கிறது.
கடல்புரத்தில் என்ற பெயருக்கு ஏற்றார்போல் தூத்துக்குடி மீனவ கிராமத்தின் கதை இது. பிலோமியின் கதை இது, ரஞ்சியின் கதை இது. உள்ளத்தின் அளிக்க முடியாத வலியை கடந்து போக சொல்லும் கதை இது. மொத்தத்தில் ஒரு கவிதை இது..
கடலோரம், ஒரு குடும்பம், குடிப்பழக்கம் உள்ள தகப்பன்., அவ்வப்போது குடிக்கும் தாய், அதிகம் படித்து ஒரு உத்யோகத்தில் இருப்பதால் இருக்கும் வீட்டையும், எல்லோரையும் அவன் வீட்டுக்கு வரச்சொல்லும் அன்பான மகன், பின், அக்கை ஒருத்தி, அப்புறம், பிலோமி என்னும் கடைசி மகள், இவள் தான், இவள் வார்த்தைகளில் நாம் இவளோடு கடலை பலமுறை உணர முடியும்.
பிலோமி, வாழ்வின் எல்லா தருணங்களிலும் கடலின் இரைச்சல் மூலம் ஒன்றை பெறுகிறாள். சிலசமயம், வெறுமையையும் அதிகமாய் உணர்கிறாள். இவ்வளவு தான் கதை, இன்னும் சொல்ல வேண்டுமானால்,
வண்ணநிலவன், இவர் தன்னுடைய எழுத்துக்களால் ஒரு மீனவக் குடும்பத்தின் வழியே அவ்வளவு அழகாய், அற்புதமாய் ஒவ்வொன்றையும் அழகியல் குறையாமல் எழுதி முன்வைத்திருக்கிறார்.
நாவலில் எனக்கு பிடித்த நிறை அழகான தருணங்களில் சில,
' சில ஓலைகள் காற்றில் கிளம்பிக் கொண்டுவிட்டன. அந்த ஓட்டைகளில் ஒன்றினூடே சூரிய வெளிச்சம் அம்மையுடைய சிவப்பான கால்களில் வட்டாமாக விழுந்திருந்தது. அந்த வெளிச்சத்தில் கால் முடிகளெல்லாம் தெரிந்தது. '
' எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இரைச்சலில் தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்கு சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில் தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. '
என இந்நாவல் முழுதும் அழகியல் அம்சங்களோடு கதை கடலருகில் பயணிக்கிறது.
லாஞ்சியினால் வல்லங்களுக்கு வரும் இடர்பாடுகள், இதனால் அமைதி குலைந்து திரியும் கதாபாத்திரங்கள் என எழுதியிருப்பதை படிக்கையில் நம்மோடும் அது ஒட்டிக்கொள்கிறது.
பிலோமியும், இவள் அம்மாவும், இவள் தோழி ரஞ்சியும் அந்த பழைய நினைவுகளை, காதலை மறவாது ஒரு டிரங்கு பெட்டி போல் பத்திரமாய் வைப்பதில் ஒன்றிணைகிறார்கள். இது ஏற்படுத்திய தாக்கம், " பேன்பின் வழி உயர்நிலை " என்பது போல உயர்வானது.
நாவல் முடியும் தருவாயில் இருக்கும் போது, பிலோமியை பார்க்க சாமிதாஸ் தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான், பிலோமியோடு நாமும் " வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானது தான் என்று நம்புவதற்குத் தயராகிவிட்டாள் " நாமும், இப்படி எல்லா கனங்களிலும் நம்புவோம்.
வாங்கி படியுங்கள், ஒவ்வொரு வார்த்தைகளிலும் நீங்கள் ஸ்பரிசிக்கப் படுவீர்கள், நெஞ்சில் ஈரம் ஏறி போகும். #சிவசங்கரன்
இது ஒரு சிறு புதினம். ஆனால் எவ்வளவு அர்த்தங்கள் அதற்குள்.பிலோமியுடன் நாம் செல்லும் ஒரு சிறு பயணம் தான் எத்தனை விஷயங்களை நமக்கு சொல்லி தருகின்றனது - வாழ்க்கையை பற்றி, உறவுகளை பற்றி, நட்பு மற்றும் நம்பிக்கையை பற்றி. இந்த புதினத்தை வாசிக்கும்பொழுது இருந்த என் மனநிலையோ தெரியவில்லை ஆனால் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சிறு புதினம். பிலோமி பேதமையில் இருந்து சில நூறு பக்கங்களில் முதிர்ச்சி அடைகிறார். அவள் பார்வை விரிகிறது. நமக்கும் கூட. பிலோமி - ரஞ்சி இடையே நிலவும் அந்த நட்பு எவ்வளவு தத்ரூபமாக மென்மையாக சொல்ல பட்டிருக்கிறது. எனக்கு இந்த புதினத்தில் பிடித்த பாத்திரங்கள் கூட இவர்கள் தான். கவலைகள் இடையே அவர்கள் நட்பு ஒரு கலங்கரை விளக்கமாகவே தென்படுகிறது. ஆண் பாத்திரங்களை விட பெண் பாத்திரங்களை புரியும் தன்மை அதிகமாக கொண்டவர்களாக தென்படுகின்றன. இருக்கும் வரையில் அம்மாவை புரிந்துகொள்ளாதவள் அவர்கள் இறந்த பிறகு இன்னும் ஆழமாக அவர்களை கண்டறிவது நெகிழ்ச்சி. செபஸ்தி, சாமிதாஸ் - இரண்டு பெரும் எனக்கு என்னமோ ஒன்றாகவே பட்டனர். தேவையற்ற ஓசைகளை எழுப்பும் வெண்கல பாத்திரங்களாகவே தென்பட்டனர். கதை முடியும் தருணத்தில் பிலோமி அந்த பள்ளிக்கூட வாத்தியாரிடம் நடத்தும் உரையாடல் மிக குறைவான பக்கங்களே என்றாலும் எனக்கு எத்தனையோ விஷயங்களை சொன்னது. வண்ணநிலவனின் எழுத்து என்னவென்று அறியாத எண்ணங்களை அலை அலையாக என்னுள் தந்தது. பல இடங்களில் அவர் எழுத்துக்கள் கவிதைகளாக தோன்றின. அவரின் எழுத்துக்களின் வாயிலாக நம்மை அலைகள் கொஞ்சி விளையாடும் அந்த அழகிய சிறு கிராமத்திற்கு இட்டு செல்கிறார்.
இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று கண்டிப்பாக இந்த 'கடல்புரத்தில்'. மென்மையாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் சொல்ல பட்டிருக்கும் மணப்பாடு என்ற ஒரு அழகிய ஊரில் வாழும் மனிதர்களின் கதை. இனியும் திருச்செந்தூர் செல்லும்போது எல்லாம் இந்த குட்டி ஊரை கடந்தது செல்லத்தான் போகிறேன். அப்பொழுது கண்டிப்பாக என��� கண்கள் பிலோமியையும் ரஞ்சியையும் குரூசயும் தேடி கொண்டு தான் இருக்கும்.
- Book 19 of 2022- கடல்புரத்தில் Author- வண்ணநிலவன்
“எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும் தான் காரணம்”.
மணப்பாடு என்னும் கிராமத்தில் கடலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் ஒரு மனித இனத்தின் கதை இது. மீனவர்களின் அன்றாட வாழ்க்கையை சினிமா கூட இத்தனை தெளிவாக படம் பிடித்து காட்டியதில்லை. நம்மையும் அந்த மக்களின் புகலிடத்திற்கு இந்த புத்தகம் மூலம் அழைத்து செல்கிறார் வண்ணநிலவன்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அப்படியே மனதில் நிற்கிறார்கள். குறையில்லாத மனிதன் தான் ஏது!! யார் எப்படி இருந்தாலும் கடல் தன் எழுச்சிமிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசிர்வாத்த்தை அள்ளிக் கொடுக்கும். அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியை தவிர வேறொன்றுமில்லை.
ஒரு எளிய குடும்பத்தை பற்றிய கதையாக தொடங்கி, பின் அவர்களின் தொழிலான மீனவர்களின் கதையாக மாறி, பின் அவர்கள் வசிக்கும் கிராமத்தின் கதையாக மாறி, பின் இவை அத்தனையையும் தூர நின்றும் அவ்வப்போது கட்டியணைக்கும் கடல்புரத்தின் கதையாக இது மாறுகிறது.
கடலில் இருக்கும் ஈரம் இதன் ஒரு பக்கங்களிலும் நாம் காணலாம்..இறுதியில் நம் கண்ணிலும் நீர் இருக்கும்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இரவு “வெண்ணிற இரவுகள்” படித்தேன், அந்த இரவு மிகவும் நிறைவாகவும் அதே சமயம் ஏதோ ஒரு சொல்ல தெரியாத சோகமும் ஆழ்க்கொண்டிருந்தது. அதே போன்றொரு உணர்வை தான் இதிலும் உணர்ந்தேன்.
வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்ர்கபள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தமாக பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்குகிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. பிலோமிக்கும் ரஞ்சிக்குமான நட்பு, பிலோமியின் சாமிதாஸ் மீதான காதல், அதன் தோல்வி, பிலோமியின் தாய், அவளுடைய நட்பு, மிக்கேலுக்கும் வல்லத்துக்குமான உறவு என மிக அழகான சித்திரம் இந்த வண்ணக்கடல்.
நம்மில் பலரில் நமக்கே உரித்தான சில பகிரப்படாத பக்கங்கள் இருக்கலாம். அப்படி புதைந்திருக்கிற நினைவுகளைக் கூட பகிர்வதற்கு தருணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமையும்போது வயதைக்கடந்து, இன மத பாலின பேதங்களை கடந்து பந்தங்கள் உதயமாகும்போது வாழ்வு லேசாகிறது.
வாழ்க்கையின் எதார்த்த அனுபவங்களை எதிர்க்கொள்ளும்போது கற்பிதங்கள் சிதைந்து போவதை ஒரு பெண்ணின் வாழ்வனுபவங்களினூடே சித்தரிக்கிறது. வல்லங்களை போலவே வாழ்வனுபவங்களும், நினைவுகளும் 'கடல்புரத்தில்' உணர்வுகளோடு ஏறி இறங்கி பயணப்படுகின்றன; நம் கரங்களையும் பிடித்துக்கொண்டு.
/**பிலோமி வாத்தியையே மாற்றிவிட்டாள் . வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது முன்பின் அறியாதவர்களையெல்லாம் இணைத்து போடுகிறது.**/ பிலோமி ஒரு மகளாக காதலியாக காம இச்சைகளை தீர்ப்பவளாக தாயுள்ளம் கொண்டவளாக வாழும் மீனவ அபலைப்பெண். அவளது வாழ்வு தினம் போராடத்தையே களமாக கொண்டது . அவளது வாழ்க்கையை வண்ணநிலவன் ஒரு மீனவ கிராமத்தையும் அதன் வாழ்வியலையும் ஒட்டி ஒரு அற்புதமான கதையாக சொல்லி போகிறார் . எளிய எழுத்து நடை எவரும் படிக்கும் வண்ணம் உள்ளது மிக சிறப்பு . தமிழில் ஒரு அண்ணா கரீனா சாயல் நாவலாக நான் பார்க்கிறேன் . சிறப்பானதொரு சுமார் 200 பக்க நாவல் .
ஆசிரியர் - வண்ணநிலவன் நாவல்(1977) 127 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம்
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் வண்ணநிலவன். அவர் மீது ஒரு இனம் புரியாத வாஞ்சை உண்டு. குழந்தை முகம் அவருக்கு. வெகுளி சிரிப்பு. பெரும்பாலும் சிறுகதைகளில் பயணிக்கும் அவர், எழுதிய ஒரு சில நாவல்களுள் மிக சிறந்த ஒன்று தான் இந்த கடல்புரத்தில் நாவல். பக்கங்கள் அளவில் மிக சிறிதாக இருந்தாலும் இந்த புத்தகம் கொண்ட கதை மிக கணமான ஒன்று.
கடல் - இது ஒரு மந்திரச்சொல். கடல் என்று சொன்னாலோ, எழுதினாலோ, உடனே கடல் நீர் என் கால்களையும், மனதையும், நினைவுகளையும் சேர்த்து நனைத்து விடுகிறது. கடல் இன்னும் எத்தனை வருடங்களுக்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு இந்த உலகில் தனக்குள் மூழ்கிப்போன கதைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று தெரியவில்லை. அளவில்லாமல் அள்ளி அள்ளி கொடுத்தும் அலுத்து போகாதவள் கடல். இந்த உலகையே தன் நெஞ்சுக்கூட்டிற்குள் அரவனைத்து வைத்திருக்கும் பேரன்பு மிக்க தாய் கடல். அந்த கடல் தாயின் பிள்ளைகளை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியுமான கதையே இந்த கடல்புரத்தில் நாவல்.
மணப்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் வசிக்கும் குருசு - மரியம்மாள் என்ற மீனவ குடும்பத்தில் ஒரு ஆண் ( செபாஸ்டி), இரண்டு பெண் ( அமலோற்பவம், பிலோமி ) மக்கள். செபாஸ்டி திருமணமாகி வேப்பங்காட்டிலும், அமலோற்பவம் மணம் முடித்து உவரியிலும் வசித்து வருகின்றனர். பிலோமி தன் பெற்றோருடன் திருமணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறாள். பிலோமி அதே ஊரில் சாமிதாஸ் என்ற லாஞ்சு முதலாளி மகனை காதலிக்கிறாள். இந்த சூழ்நிலையில் செபாஸ்டி தன் தொழில் விருத்திக்காக தன் தந்தையின் வல்லத்தையும், சொந்த வீட்டையும் விற்று விட்டு அந்த பணத்தை தனக்கு கொடுக்குமாறும், பெற்றோரை தன்னோடு தன் ஊருக்கு வந்து வாழுமாறு வற்புறுத்தி சண்டை போடுகிறான். ஆனால் வம்சாவழியாக வல்லம் வைத்து மீன்பிடி தொழில் புரியும் குருசு இதற்கு மறுக்கிறார். இதன் நடுவே லாஞ்சுகாரர்களுக்கும், வல்லத்துகாரர்களுக்கும் அவ்வப்போது வாய்ச்சண்டையும், கைகலப்பும் நடைபெற அதனை ஊர் பெரியவரான பவுலு பாட்டா சமரசம் செய்கிறார். சில நாட்களில் அடுத்து அடுத்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மணப்பாட்டு கிராமத்தில் நிகழ்ந்து விடுகிறது. பிலோமியின் தாய் மரியம்மாள் இறந்து விடுகிறாள், ஒரு லாஞ்சு காரன் கொல்லப்படுகிறான், பிலோமி சாமிதாஸால் ஏமாற்ற படுகிறாள், குருசு தன் உயிரேன மதித்த வல்லத்தையும், வீட்டையும் விற்று விடுகிறான், குருசு புத்தி பேதலித்து நடைபிணமாகிறான், பிலோமி சொந்தம் இருந்தும் அனாதையாகிறாள். இறுதியில் பிலோமி என்ன ஆனாள், குருசு என்ன ஆனான், வல்லத்துக்காரர்களின் நிலை என்ன? என்பதின் முடிவுகளே இக்கதையின் முடிவு.
இக்கதையில் மூன்று கதை மாந்தர்களை பற்றி மட்டும் நான் கூற விரும்புகிறேன். பிலோமி, வாத்தியார் மற்றும் பவுலு பாட்டா பிலோமி - ஒரு விவரம் அறியா பதின் பருவ பெண்ணாக கதையின் தொடக்கத்தில் இருக்கும் பிலோமி கதை முடியும் தருவாயில் சிதிலமடைந்த சிற்பம் பல நூறு ஆண்டுகள் அந்த கடலையே எதிர்த்து நிற்பது போல இந்த கதையின் மிகவும் நம்பிக்கையும்,வாழ்க்கை பற்றும் கொண்டவளாக தன்னை தானே உருமாற்றி கொள்கிறாள்.மரப்பசு அம்மணி, மோகமுள் யமுனா, ஜெயகாந்தனின் கங்கா வரிசையில் நிச்சயம் பிலோமிக்கும் நம் தமிழ் இலக்கியத்தில் மறுக்கமுடியா ஒரு இடம் உண்டு வாத்தியார் - நம் வாழ்வில் சில உறவுகளுக்கு பெயரில்லை. நம்மால் அதற்கு ஒரு பெயர் சூட்டவும் முடியாது. யாரிடமும் அந்த உறவை புரியவைக்கவும் முடியாது. நமக்கும் அந்த உறவுக்காரருக்கும் மட்டுமே அந்த உறவின் அர்த்தம் புரியும். அப்படி ஒரு உறவு தான் மாரியம்மை - வாத்தியார் உறவு, பிலோமி - வாத்தியார் உறவு. அம்மாவையும் அவர் புரிந்து கொண்டார், அவரை வசைபாடிய அவள் பெற்ற பிள்ளையையும் அவர் புரிந்து கொண்டார். ஒரே வரியில் வண்ணநிலவன் அந்த உறவை விவரித்து விடுகிறார்." குருசுக்கு என்றைக்குமே என் மேல் கோபம் இருந்ததில்லை " பவுலு பாட்டா - கதையில் மூன்று அல்லது நான்கு இடங்களில் மட்டுமே இவர் வந்தாலும். என் மனதிற்குள் ஏனோ இவர் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். லாஞ்சுகாரர்களை தடுக்கும்போதும், கடற்கரையில் நடக்கும் கலகத்தை தடுக்கும்போதும், பறையர்களை வாஞ்சையோடு அணுகும்போதும், குருசு தன் வீட்டை விற்று விட்டு திரும்பும்போது அவனை கோபிக்கும் போதும் அவர் கூறுவது ஒரே வரிதான் " போங்கலே போங்க. ஒங்கள்ல எவனுக்கும் கடல் மேலே, செய்யுற தொழில் மேல நம்பிக்கே கெடையாது. நீங்க கடலுக்கு விசுவாசமா இருந்தா அது ஒங்கள வாழத்தானலே வக்யும்.... " இந்த வரிகள், இந்த கிழவன்,இந்த புலம்பல், இந்த நடுக்கம் நிறைந்த அரைக்கூவலை எங்கோ நான் கேட்டிருக்கிறேன்? இந்த கிழவன் வேறு யாரும் அல்ல, கிழவனும் கடலும் கதையில் வரும் அந்த கிழவன் சாந்தியாகோ வே தான். இது தான் இலக்கியத்தின் அருமை. எங்கோ உலகின் மூலையில் எழுதப்பட்ட ஒரு கதையில் வரும் ஒரு கிழவனும் இங்கு நம் தமிழகத்தில் தென் கோடியில் கடற்கரை கிராமமான மணப்பாட்டில் வசிக்கும் கிழவனும் ஒரே கருத்தை தான் கூறுகின்றனர். அந்த இரண்டு கிழவர்களும் வேறு வேறு காலகட்டத்தில் வேறு வேறு நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் அவர்கள் எண்ணமும், நம்பிக்கையும் ஒன்றுதான். அதனை பதிவு செய்தவன் ஒரு எழுத்தாளன் தான். இதுதான் ஒரு எழுத்தின் வீரியம், ஒரு எழுத்தாளனின் மூன்றாம் கண்.
நெய்தல் நில கதைகளில் ஒழுக்கம் இருக்காதுதான், அதீத கோபம் இருக்கும்தான், கொலைகள் கூட நடக்கலாம், பேசும் மொழியிலும், வீசும் காற்றிலும் சற்று நாற்றம் இருக்கும்தான், வஞ்சம் - ஏமாற்றுதல் - பழி - பாவம் - பொறாமை - போட்டி எல்லாம் இருக்கும் தான். உடம்பு இறுகி, கைகள் காப்பு காய்ச்சி, உடைகள் அழுக்கேரி, உருவம் கறுத்து இருந்தாலும் உள்ளம் மட்டும் எப்பொழுதும் அந்த கடலை போலவே அகண்டு பரந்து விரிந்து இருக்கும். இவர்களை பார்த்து நான் பொறாமை கொள்வது இவர்களால் மட்டும் வாழ்க்கையை எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிகிறது? பிறப்பு இறப்பு இரண்டையும் இவர்கள் எப்படி வாழ்க்கை தராசில் ஒரே அளவில் நிறுத்தி பார்க்கின்றனர்? கடந்து போவதுதான் வாழ்க்கை என்பதை எந்த ஒரு தயக்கமும் இன்றி எப்படி இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? என் மனதிற்குள் எழும் இத்தனை கேள்விகளுக்கும் அவர்களிடம் இருக்கும் ஒரே பதில் அவர்கள் கடல் அன்னையின் பிள்ளைகள்.
வண்ணநிலவனின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.தி.ஜானகிராமனின் மோகமுள் கதையில் வரும் யமுனாவைப் போல இக்கதையைப் படித்த பின் பிலோமி குட்டியை வாசிப்பாளர் மிகவும் விரும்புவர்
இது ஒரு classic novel. மணப்பாடு கடலோரத்தில் வாழும் மக்களைப் பற்றியது. பிலோமியை சுற்றியே கதை பிண்ணப்பட்டுள்ளது. பிலோமியின் தந்தை குரூஸ்மிக்கேல், தாய் மரியம்மை, அண்ணன் செபஸ்தி, அக்கா அமலோற்பவம் என்று என்ன தான் பிலோமியை சுற்றி உறவுகள் இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள தன்னுடைய தோழி இரஞ்சியைத் தவிர யாரும் இல்லை அவளுக்கு. தன்னை விட அந்தஸ்தில் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சாமிதாசை பிலோமி காதலிக்கிறாள். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அதற்குப் பின் அவள் தன்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறாள் என்பது தான் கதை.
கடலோர மீனவ மக்களின் பேச்சு வழக்கு, வாழ்வியல், மத வழிபாடு, குடியினால் ஏற்படும் இன்னல்கள், வல்லம் மற்றும் லாஞ்சிக்காரர்களின் தகராறுகள் என்று கதை சுழல்கிறது. ஏனோ கி. ரா அவர்களின் "கோபல்ல கிராமம்" புத்தகம் நியாபகம் வந்தது.
புத்தகத்தை மூடி வைத்தப்பிறகும் ஒரு சில வினாடிகள் கடலின் இரைச்சல் சத்தம் கேட்பது போலவே தோன்றியது.
காதலித்தவனைக் கரம் பிடிக்க முடியாது என்று ஆன பிறகு கொஞ்சம் கூட கோபமோ கழிவிரக்கமோ இல்லாமல் முன்பிருந்த அதே அன்பை வெளிப்படுத்துவது தான் உண்மையான காதலா? அல்லது எப்படியாவது காதலித்தவனைக் கைப்பிடிக்க வேண்டும் என்று கடைசி வரை போராடுவது உண்மையான காதலா? இரண்டாவது தான் சரி என்று நினைத்தால் இந்தக் கதை உங்களுக்கானது அல்ல. ஒரு சராசரி பெண்ணின் காதல் தோல்வியைக் குடும்ப சூழ்நிலையின் பின்னணியோடு மீனவ சமுதாயத்தின் தொழில் முறைகளோடு, வாழ்வியலின் யதார்த்ததோடு ஆசிரியர் இந்த நாவலில் விவரித்து இருப்பது அருமை.
This entire review has been hidden because of spoilers.
கடல்தாயின் கருணையை நம்பி வாழும் ஒரு மீனவ குடுமபத்தின் வாழ்வு தான் கடல்புரத்தில் குறுநாவல்.மணப்பாடு கடல்புர கிராமத்தில் வாழும் க்ரூஸ் மைகேல் மற்றும் அவர் குடுத்தும் சார்ந்த கத���.
பிலோமி குட்டி, க்ரூஸ் மைக்கேலின் மகள் தான் இந்தக்கதையின் நாயகி நாயகன் எல்லாம். அம்மீனவமக்களின் வாழ்வியல், உறவுகள், பண்டிகை, கடல் தாயின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை என பிலோமியை சுற்றி நடப்பதை படம் பிடித்து காட்டுகிறார் வண்ணநிலவன் அவர்கள்.
மனதை விட்டி நீங்காத எண்ணற்ற கதாபாத்திரங்கள் பிலோமி, ரஞ்சி, தரகனார், வாத்தி, பவுலு பாட்டா என. பிலோமிக்கு ரஞ்சி போல எனக்கும் ஒரு தோழியோ தோழனோ நமக்கு அமைய வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. பிலோமி வாழ்வில் ஒரு பெரும் புயலுக்கு பிறகு வரும் அமைதியை போல,நம் கடினமான நாட்களுக்கு பிறகு நமக்கும் ஒரு அமைதி கிடைக்கட்டும்.
கடல்புரத்தில் நாவலிலிருந்து "அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப்போல, வாத்தியைப் போல் வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை."
ஓரு மீனவக்குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் அன்புவழியைக் காட்டுகிறது கடல்புரத்தில். கடலின் அலைகள் மனதை நனைக்கும்படியான காட்சிப்படுத்துதலைத் தாண்டி இதை ஒரு காவியமாக்கும் பல தருணங்களைக் கொண்டுள்ளது இச்சிறு நூல். வாழ்வின் நுண்மைகளையும் எதார்த்தத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் ரஞ்சி, தன்னை வெட்ட அரிவாளெடுத்து வந்தவரோடு அடுத்த நாளே ஒன்றாய்த் தேனீர் அருந்தும் ஐசக், மரியன்னையின் இறப்புக்கு பின் மரியன்னையாகவே பிலோமியைப் பார்க்கும் வாத்தி, தன் காதலன் வேறு கலியாணம் செய்துகொள்கையிலும் அவனை வெறுக்காத பிலோமி, பிலோமியையும் அக்கலியாணத்திற்கு அழைக்கும் காதலன், அறத்தை வலியுறுத்த அளவுகோலாய் இருக்கும் கடல் எனப் பல விதங்களில் மனதில் ஈரம் சுரக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.