நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே பொது. ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான். ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி. மிகப் பெரும் வெற்றியாளன். ஆனால், எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன். ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘கங்காபுரம்’ நாவல்.
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
தமிழில் வரலாற்று புதினம் எழுதுவதெற்கென்று ஒரு பாதை உண்டு. கல்கியால் ஆரம்பிக்கப்பட்டு , விக்ரமன், அகிலன், நா.பா, சாண்டில்யன் என ஒவ்வொருவரும் நூல் பிடித்தாற் போல் நடந்த பாதை. ஒரு நாயகன் - அவன் பயணம் - ஒரு இளவரசியின் காதல் - ஒரு வரலாற்று சம்பவத்தின் நடுவே நம் நாயகன் - பல திருப்பங்களுக்கு பின் கதை முடிவுறும்.
இந்த templateக்கு சுஜாதாவும் விலக்கல்ல - 'காந்தளூர் வசந்தகுமாரனின் கதை' வாசிக்கும் போது எப்போது கணேஷும் வசந்தும் வருவார்கள் என்று தோன்றாத நேரமே இல்லை. பல வருடங்களுக்கு முன் கணையாழியில் வந்த நகுபோலியன் எழுதிய 'மழநாட்டு மகுடம்' மட்டுமே இந்த template கதைகளை கேலி சித்திரமாய் ஆக்கியது. தமிழ் வரலாற்று புதினத்தில் இந்த அலுப்பூட்டும் கதைகளை எழுதுவதை யாரும் நிறுத்த போவதில்லை என்பதே ஆயாசமாய் இருந்தது.
'கங்காபுரம்' இந்த templateஐ உடைப்பதன் மூலம் ஒரு புது வகையான (உண்மையில் வெகு பழமையான) வரலாற்று புதினத்திற்கு வழி வகுக்கிறது. இது ஒன்றே இந்த புத்தகத்தை படிப்பதற்கு போதுமான காரணம்.
ராஜேந்திர சோழனின் கதை எப்போதும் ராஜ ராஜனின் கதையின் ஊடாகவே சொல்லப்பட்டு வருகிறது. சோழ நாட்டின் பெரும் அரசனாய் இருந்த போதும் தன தந்தையின் நிழலிலேயே இருக்க வேண்டிய நிலை அவனுக்கு. அ. வெண்ணிலா, ராஜேந்திர சோழனின் இந்த 'தனிமை'யை எழுதுகிறார்.
நம் அரசர்களின் கதை அவர்களின் காதல்களாலும், போர் வெற்றி தோல்விகளாலும் மட்டுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. புறநானூறு, அகநானூறு காலங்களில் இருந்தே இதுதான் நம் வரலாறு. இந்த காதல்களுக்கும் , போர்களுக்குமான இடைவெளியில் இந்த அரசர்கள் என்ன செய்தார்கள்? சோழர் காலத்திலேயே இதற்கான விரிவான விடை அவர்களின் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடைக்கிறது. அவர்கள் எழுப்பிய கற்றளிகள், செய்த நிவந்தங்கள், ஆட்சி முறை, மக்கள் மன்றங்கள், நிலப்பிரிவுகளும் அதன் ஆட்சி அமைப்புகளும் என சோழர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளின் தடயங்களை விட்டு சென்றுள்ளனர்.
வெண்ணிலா இந்த தடயங்களை சேகரித்து அவற்றின் ஊடே கதையை நகர்த்துகிறார்.ஊர் சபைகள், தேவரடியார் வாழ்வு, ராஜ ராஜன் பிரம்மதேயம் மூலமாக நிலம் பார்ப்பனர்கள் கை மாறுவது, இடக்கை - வலக்கை சாதி பிரிவுகள் ஆழமாதல் என பல சமூக மாற்றங்களையும் தொட்டு செல்கிறது கதை. ராஜேந்திரன் காதல் செய்தாலும் , போர் செய்வதில்லை (இந்த கதையில்!). ராஜேந்திர சோழன் என்ற கட்டமைக்கப்பட்ட அரசனின் பிம்பத்தில் இருந்தும் ராஜேந்திர சோழனாகிய மனிதனை மீட்டெடுக்க முயல்கிறார் வெண்ணிலா.
தஞ்சை எப்போதும் தன தந்தையின் அடையாளமாகிவிட்டதால் தனக்கென்று ஒரு தலைநகரம் , பெரிய கோவிலின் மாற்றாய் இன்னுமொரு கோயில் பெருவுடையாருக்கு என்று ராஜராஜனின் நிழலில் இருந்து ஓடுவதே அவன் வாழ்வின் பிரதானமாகிறது. வீரமாதேவி - பரவை நங்கை என காதல்களுக்கு பஞ்சமில்லை எனினும் அவனின் ஐந்து மனைவியர் பற்றி ஏதுமில்லாதது கொஞ்சம் ஏமாற்றமே.ராபர்ட் கிரேவ்சின் க்ளாடியஸ் சரித்திர நாவல்களின் தன்மை கொஞ்சம் தெரிந்தாலும் , அவற்றின் விரிவு தன்மை இல்லாதது ஒரு குறையே.
ஒரு தமிழ் சரித்திர நாவலின் எந்த லட்சணமும் இன்றி ஒரு சுவாரசியமான கதையை சொல்லி இருப்பது நன்று.
ஒரு காலத்தில் பாலகுமாரனின் உடையார் நாவல் வாசித்து விட்டு சோழர்கள் மீதும் சோழ தேசம் மீதும் பெரும்பித்தில் திரிந்தேன். எனது பெயரை சோழோந்திரசிம்மன் என்று மாற்றிக் கொண்டேன் எனது முகப்பு படங்கள் அனைத்திலும் ராஜேந்திர சோழனின் முத்திரையை வைத்திருந்தேன். நாவலில் ராஜராஜன் இறக்கும்போது அப்படி கதறி அழுதேன் . இன்றும் கூட அந்த நாவலின் பாதிப்பால் தஞ்சை பெரிய கோவிலை என்னால் கண்ணீர் சிந்தாமல் பார்க்க முடியாது. அப்படி ஒரு பெரும் எதிர்பார்ப்பில் இந்த நாவலை தொடங்கினேன் ஆனால் அப்படியான ஒரு அனுபவம் கிடைக்கவில்லை. இந்த நாவலில் ராஜ ராஜனும் மனதில் நிற்கவில்லை ராஜேந்திர சோழனும் மனதில் நிற்கவில்லை. ஆனால் அந்தக் காலத்து நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். உதாரணமாக கோவிலுக்கு சாவா மூவா ( சாகாத மூப்படையாத) நிவத்தம் அளிப்பார்கள் அது எத்தனை ஆடு இருக்க வேண்டும் எத்தனை பசு மாடு இருக்க வேண்டும் எத்தனை எருமை இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணிக்கை இருக்கிறது என்பதை எல்லாம் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார் உதாரணமாக ஆடு என்றால் 98 ஆடுகள் இருக்க வேண்டும் ஒவ்வொரு ஐந்து ஆட்டிற்கு ஒரு ஆண் ஆடு இருக்க வேண்டும் இப்படி நிறைய விசயங்கள் எழுதி இருப்பதால் ஒருவகையில் முக்கியமான நாவலாக ஆகிறது. ராஜராஜனின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தவன் ராஜேந்திரன் , இருந்தும் தனது 50 வயது வரை இளவரசு பட்டம் ராஜேந்திரனுக்கு வழங்கப்படவில்லை அது ஏன் என்ற கேள்வியையும். ராஜேந்திரன் தலைநகரை தஞ்சையில் இருந்து எதற்காக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான் என்ற இரண்டு கேள்வியையும் தொடர்ந்து நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் சொல்லப்பட்டிருக்கும் மூன்று காரணங்களில் ஒன்றுதான் என்னால் ஏற்றுக்கொள்ளப்படும் படியாக இருக்கிறது. ராஜேந்திரன் தன் தந்தையின் நிழலில் இல்லாமல் தனித்த அடையாளமாக விளங்க நினைத்து இருக்கலாம் என்பதுதான் அது. மீதி இரண்டு காரணங்களும் அவ்வளவாக எனக்கு ஒப்புதல் இல்லை. வரலாற்றை எழுதும்போது தனது கற்பனை குதிரையை தட்டி விட்டு சகட்டுமேனிக்குச் செல்லாமல் ( பாலகுமாரன் ஒருவகையில் அதைத்தான் செய்திருப்பார்) தகவல் அடிப்படையிலும் கல்வெட்டுகளின் அடிப்படையிலும் செப்பேடுகளின் அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் தான் எழுத வேண்டும். வரலாறு எழுதும்போது சிறு தவறு கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக வெண்ணிலா கையாண்டு இருக்கிறார். ஆனால் அந்த கல சட்டம் அரச நடைமுறைகள், கோவில் நடைமுறைகள் மிக சிறப்பாக ஆராய்ந்து எழுதி இருக்கிறார். ஆனால் கதாபாத்திரங்கள் எதுவும் அவ்வளவாக மனதில் நிற்கவில்லை ( அதித்தியன், தில்லை அழகி , வீரமா தேவி தவிர). அந்தமான்,நிக்கோபார், சுமத்ரா ,ஜாவா ,மலாயா, கம்போடியா ஆப்பிரிக்க கண்டத்தின் அருகில் இருக்கும் இன்றைய ரீயூனியன் ( சோழர்கள் பதினோராம் நூற்றாண்டில் வெற்றிக்கொடி நாட்டை விட்டு வந்த இந்த ரியூனியன் தீவிற்கு 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கம்பெனி 100 தமிழர்களை அடிமையாக பிடித்துக் கொண்டு போய் இந்த தீவில் விட்டது. வரலாறு எப்படியெல்லாம் திரும்புகிறது பாருங்கள்) வடக்கே கங்கை வரை இந்திய பெருங்கடலை ஏரி என்று நினைத்து வெற்றி வெற்றி என்று திரும்பும் திசையெல்லாம் வெற்றி கொடி நாட்டிய ஒரு மாபெரும் பேரரசனை ஒன்றுமில்லாமல் ஆக்கி வைத்திருக்கிறார்.
வழக்கமாக வரலாற்று புதினங்களில் காணப்படும் பிரம்மாண்டங்களையோ, போர்க்காட்சிகளையோ முதன்மைப்படுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. வரலாற்று நிகழ்வுகளை ஒரு பேரரசனின் அகநெ���ுக்கடிகளின் வழியே பதிவு செய்திருப்பது புதுமையான ஒரு முயற்சி. சோழர் கால கோவில்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம், கோவில் நிர்வாகங்கள் இயங்கிய விதம், சமூக படிநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பிரம்மதேயங்கள், தேவரடியார்கள் என அறிந்து கொள்ள நிறையவே இருக்கிறது. எல்லாமும் இருப்பினும் ஒரு நாவல் நிறைவடைந்த முழுமையை உணர முடியவில்லை. ராஜேந்திர சோழனின் வெறுமையும், இயலாமையும் நம்மிடமும் தொற்றிக் கொள்வதை தவிர்க்கவும் முடியவில்லை.
மாபெரும் வீரன், நிகரற்ற அரசன், சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தையும், கூடவே அவரது அகப் போராட்டத்தையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம். இருவரின் ஆட்சி காலங்களும் சேர்ந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் இருக்குமா?
அதற்குள், அவர்கள் வென்ற நாடுகள், கட்டி எழுப்பிய பெரிய பெரிய கோயில்கள், வெட்டிய பரந்து விரிந்த ஏரிகள், என அனைத்தும் அவர்கள் ஆட்சி செய்த நிலத்தை மட்டுமல்ல தமிழ் இனத்தையே உலகத்தின் பார்வைக்கு உயர்த்தியது.
இந்தப் புத்தகம் அவர்களது வெற்றியைப் பற்றி மட்டும் பேசவில்லை அதற்கான அவர்களின் உழைப்பையும் பேசுகிறது.
நில அளவை, வரி அமைப்பு, ஊர் சபை கட்டுப்பாடுகள், குறுநில மன்னர்களுக்கும் அரசர்களுக்கு நிகரான முக்கியத்துவம், தேவரடியார் வாழ்வு, சீர்திருத்தங்கள் என அத்தனை சீரிய செயல்களுக்குப் பின்னான அவர்களின் நிர்வாக ஒழுங்கு, அதைக் கட்டிக் காத்த ஆளுமை என அனைத்தும் பெரும் பிரமிப்பைத் தருகிறது. இத்தனை தகவல்களையும் திரட்டி சுவாரசிய புனைவாக்கித் தந்த ஆசிரியரின் உழைப்பும் பிரமிப்பே…!
புனைவை விடத் தகவல்கள் அதிகமிருப்பது வாசிக்கும் சுவாரசியத்தைக் குறைக்கும் பலவீனம் என்றால் இந்தப் புத்தகத்தின் பலமும் அதுதான்.
ராஜராஜன், ராஜேந்திரன் பற்றி, அவர்கள் காதல், வீரம், வெற்றி, பிரமாண்டம், அவர்கள் அமைச்சர்களின் திறமை, ஆளுமை பற்றிய எண்ணற்ற புனைவுகள் வந்திருக்கின்றன. இத்தனைக்கும் பின்பும் அந்தக் காலகட்டத்தைப் பற்றிப் படிப்பதற்கு இப்படியான நுணுக்கமான தகவல்களே நமக்குச் சுவாரசியம் தருபவை.
தில்லையழகி, சரஸ்வதியின் சிலையை மேலும் அழகாக்கி நம் ஞாபகத்தில் நிறுத்துகிறாள். அப்படியே சண்டேசரின் சிலையும்.
அரசனை ஒரு சராசரி மனிதனாக, விருப்பு, வெறுப்பு, ஏக்கம், இயலாமை கொண்ட நம்முள் ஒருவனாக நமக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கும் விதத்திலும் மற்ற புனைவிலிருந்து இந்தப் புத்தகம் வேறுபடுகிறது.
“செல்வம் குமியும் இடத்தில் ஊழல் அழைக்காமல் வந்து அமர்ந்துவிடும்” “அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் அவசியமற்ற தேவைகள் உருவாக ஆரம்பிக்கும்” என்பவை எழுதப்படாத விதி. இரண்டுமே இவர்கள் ஆட்சியில் வேர்விட ஆரம்பிப்பதை ஆரம்பம் முதல் கதை நெடுகிலும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.
ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜனால் புளியமர விதை கடாரத்தில் விதைக்கப்பட்டதாக ஆசிரியர் சொல்கிறார். கரும்பும் தமிழகத்திற்கு அப்படி வந்த பயிர் தான். இப்படித் தேவைக்கேற்ப வணிகத்தால், போரால், மக்களின் இடப்பெயர்வால் பல விளை பயிர்கள், மரங்கள் எனப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால், அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஒவ்வாத மரங்கள் தாவரங்கள் என்றால் கண்டிப்பாகச் சூழலியலில் மாற்றத்தை உண்டாக்கும். அவை உயிர் வாழ்வாதாரத்தையே கேள்விக்கு உள்ளாக்கவும் செய்யும். உணவு, உடை என அனைத்தும் அந்தந்த சூழலியலின் தேவையே முடிவு செய்கிறது.
தொழில் நிமித்தமோ, வசதிகள் நிமித்தமோ இல்லை வேறு தேவைக்காகவோ புலம் பெயர்ந்து சென்று வாழும் மக்கள் சற்று செல்வாக்கானவர்களாகவும் கூடவே ஆள்பவரின் ஆதரவோடும் இருந்தால்…?
அமெரிக்காவில் என்ன நடந்ததோ இன்று என்ன நடக்கிறதோ, அதே தான் அன்று தஞ்சையிலும் நிகழ்ந்தது.
செயல் இல்லையென்றால் இப்பிரபஞ்சமே இல்லை. உயிர்களின் வாழ்வும் அழிவும் நெருப்பால் தான்.
பேரரசர் ராஜராஜனால் வடநாட்டிலிருந்து அழைத்து வந்து தஞ்சையில் குடியமர்த்தப்பட்ட பிராமணர்களாலும், அதை ஏற்க முடியாத மண்ணின் மைந்தர்களாலும், பூசல்கள், ஜாதி பிரச்சனைகள் ஏற்ற தாழ்வுகள், ஊழல்கள் உருவாகின என்கிறார் ஆசிரியர். ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த இந்த சமூக மாற்றம் ராஜேந்திரனின் ஆட்சிக் காலத்தில் இன்னும் ஆழமாகிறது.
இப்புனைவில் ராஜேந்திர சோழனின் மனைவி வீரமா தேவியின் பாத்திரப் படைப்பு அருமை. தன் அழகை எடுத்துக் காட்ட விரும்பாத அவளே இக்கதைக்கு அழகியல் சேர்க்கிறாள்.
என் தந்தையை விடக் கூடுதலாக என்னிடம் ஒரு தென்னை மரம் உண்டு என்று மார் தட்டாத மகனுமில்லை. எனக்கு ஓட்டு வீடு தான் ஆனால் என் மகன் மச்சு வீடு கட்டியிருக்கிறான் என்று பெருமையில் விம்மாத தந்தையுமில்லை
வாழ்வியல் வெற்றியில் பெற்றோரை மிஞ்ச வேண்டும். தான் தனித்து அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற அவா பிள்ளைகளுக்கு என்றென்றைக்கும் உள்ளவை. அதற்கு ராஜேந்திரனும் விதிவிலக்கல்ல.
ஆதித்திய கரிகாலன், உத்தம சோழன் என முன்னும் பின்னும் போட்டியாளர்களைக் கடந்து அரசுக்கட்டிலில் அமர்ந்து தன்னை நிரூபித்தான் ராஜராஜ சோழன்.
ஆனால், ராஜேந்திரனுக்கு…? போட்டி இல்லாது பெரும் வெற்றி கூடப் பெரும் துயரம் தான்.
பட்டத்தரசி லோக மாதேவிக்கு மகன் இருந்திருந்தால்…?
இந்தக் கேள்வியையே அவன் செயல்களால் அர்த்தமற்றதாக்கினான் ராஜேந்திரன்.
ராஜராஜனின் வாரிசு தான் தான் எனத் தன் இறப்பு வரை நிரூபித்தான் ராஜேந்திரன்.
முத்தரையரை வென்று, கைப்பற்றித் தலைநகராக்கி ஆண்ட தஞ்சையை விட அதிக வருடங்கள்… ஏன், இருநூறு வருடங்களுக்கு மேலாக, தலைநகராகவே விளங்கியது ராஜேந்திரன் சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரம்.
சோழர்கள் என்று சொன்னதும் உங்கள் நினைவிற்கு வரும் அரசனின் பெயர் என்ன? இந்த கேள்விக்கு நம் அனைவரின் பதிலும் ராஜராஜ சோழன் என்பதாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இராஜராஜனின் பெயர் நிலைத்து நிற்க முக்கியமான காரணம் யார் தெரியுமா? ராஜராஜனின் தளபதியாக செயல்பட்ட அவனது மகன் ராஜேந்திர சோழன் தான்... ராஜேந்திரன் முன்னின்று நிகழ்த்திய போர்கள் எல்லாவற்றிலும் வெற்றிகளைக் குவித்து வந்தவன்... ஆனால், இன்றளவும் ராஜராஜனின் புகழ் பேசப்பட்ட அளவுக்கு ராஜேந்திரனின் புகழ் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது! இதையே மைய்யச் சரடாக வைத்து புனையப்பட்ட நாவல் தான் கங்காபுரம்...
மார்கழித் திருவாதிரை நாளில் தில்லை ஆடவல்லான் ஆலயத்தில் ஆரம்பிக்கும் கதை வெவ்வேறு தளங்களுக்கு பயணமாகி ராஜேந்திர சோழனின் அகவுணர்வுகளைப் பற்றி பேசுகிறது! பொதுவாக வரலாற்று நாவல்கள் என்றாலே அந்தந்த அரசர்களின் மெய்கீர்த்தியை பாடும் வகையின்பட்டதாகவே இருக்கும், அதே போல நிச்சயம் போர்க் காட்சிகளும் நிறைந்திருக்கும் ஆனால் இந்த புதினத்தில் போருக்கான தயாரிப்புகளைப் பற்றிய விவரணைகள் இருக்கின்றன... ஆனால் போரைப் பற்றிய விவரணைகள் தவிர்க்கப்பட்டிருப்பது சிறப்பு என நான் உணர்கிறேன்...
இதுவரை நான் வாசித்த வரலாற்று நாவல்கள் அரசனின் புகழை மட்டுமே பாடிவிட்டு அந்த காலத்திற்கான அரசியலை வசதியாக மறந்துவிட்டு எழுதப்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன... கங்காபுரம் அந்த பாணியிலிருந்து வேறுபட்டு அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியலையும் ராஜாராஜ சோழனின் காலத்தில் நடந்த வடதிசை பிராமணர்களின் குடியேற்றம், கோயில்களில் இருக்கும் தமிழ் ஓதுவார்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கி பிராமணர்களின் ஆதிக்கம் ஆரம்பமானது என்பதை இந்த கதையின் வழியே நமக்கு உணர்த்துகிறார் வெண்ணிலா...
பார்பனர்களுக்கு எழுதிவைக்கப்பட்ட பிரம்மதேயங்களில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அதில் அவர்களை குடியமர்த்தியது, தமிழ் பதிகம் பாடும் ஓதுவார்கள் வெளியேற்றப்பட்டது அந்த இடத்தில் வடமொழி மந்திரங்கள் கோலோச்ச அனுமதிக்கப்பட்டது, பறையிசை அமங்களமானதாக ஆக்கப்பட்டு அந்த இடத்தில் மத்தளமும், நாதஸ்வரமும் கொண்டுவரப்பட்டது இந்த நிகழ்வுகளின் மூலம் மக்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பு கலகக் குரல்கள், என அத்தனையையும் பதிவு செய்திருக்கிறார்... அந்த கலக குரல்கள் இன்றளவும் சிதம்பம் ஆடவல்லான் கோயிலில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்! சோழர்களின் அழியாச் சின்னமான ராஜராஜேச்சவரம் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானத்திற்கு முக்கியக் காரணமான ராஜேந்தின், ராஜராஜனால் அவனுடைய 50 வயது வரை அரசாட்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட பின்புலம் பற்றி விரிவாக பேசுகிறது!
ராஜேந்திரன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டான். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் . அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினான்.. தன்னுடைய தந்தை என்னும் பேரொளியின் நிழல் என்னும் பிம்பத்திலிருந்து வெளிவருவதற்காகவே ராஜேந்திரன் இந்த புதிய தலைநகரத்தை நிர்மானிக்கிறான்...
மக்களின் குரலாக ஒலிக்கும் கதாப்பாத்திரமாக சதுரத்தடிகளின் கதாப்பாத்திரம் ராஜேந்திரனை இறுதியில் கேள்விக்குள்ளாக்குகிறுது! ராஜேந்திரனுடனே பயணிக்கும் கதாப்பாத்திரமாக வீரமாதேவி கதை முழுவதும் துணை நிற்கிறாள்!
ராஜேந்திரனின் புறக்கணிப்பிற்கு முக்கியக்காரணமான ராஜராஜனின் பட்டத்தரசியான லோகமாதேவியின் வாக்குமூலம் கதையில் ஒரு முக்கியத் திருப்பமாக வருகிறது! இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் முதல் பாகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திரனுக்கும் நடக்கும் பனிப்போரைப் பற்றி விவரிக்கிறது இரண்டாம் பாகம் புதிய தலைநகர் நிர்மாணம், ராஜேந்திரனின் அகவுலகம் என பயணிக்கிறது...
எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாத எழுத்து நடை நம்மை சோழகாலத்தின் குடியாகவே உணரச் செய்தது! கதையுடன் சேர்த்து வரலாற்றையும் மீளாய்வு செய்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்... சோழர்களின் ஆட்சிக்காலத்தின் இன்னொரு முகத்தை அறிந்து கொள்ள நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் இந்த கங்காபுரம்!
புத்தகம் – கங்காபுரம் ஆசிரியர் - அ.வெண்ணிலா பதிப்பகம் – அகநி பதிப்பகம் பக்கங்கள் - 520 விலை - ₹450
தமிழில் வரலாற்று புதினங்கள் என்றாலே எழுதப்படாத ஒரு மரபு உண்டு.கதையின் நாயகன் ஒரு பெரிய அரசனாகவோ அல்லது ஒரு பெரும் படைத்தளபதியாகவோ தான் இருப்பார். கதைநாயகன் எப்பொழுதும் நல்லவராகவே இருப்பார். இதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் முறையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த புதினம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. வரலாறே உயர்த்தி கொண்டாடும் அரசனான ராஜேந்திர சோழனின் தனிமையை மிக அருமையாக சித்தரித்திருக்கிறார்.கிழக்காசிய நாடுகள் அனைத்தையும் வென்றெடுத்த வீரனாக இருந்தாலும் தந்தையின் நிழலில் உழலும் ஒரு அரசன் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது. தந்தையை விட பல வெற்றிகளை வாரிக்குவித்த பின்பும் ராஜேந்திர சோழனை தந்தையின் நிழல் விடாமல் துரத்துகின்ற தனிமையை புத்தகம் முழுவதும் பார்க்க முடிகிறது. தலைநகரத்தை மாற்றும் முடிவிலும், கங்கைகொண்டசோழபுரத்தின் விமான உயரம் தஞ்சை கோவிலின் விமானத்தை விட உயரமாக இருக்காது என்று தலைமை தச்சர் கூறுகின்ற பொழுதும் அந்த வலியை நம்மாலும் உணர முடிகிறது .
வழக்கமாக வரலாற்று புதினங்களில் மக்களிடையே நடைபெறும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் பெரும்பாலும் காண கிடைக்காது. ஆனால் இந்த புத்தகம் வட நாட்டின் பார்ப்பனர்கள் கோவிலின் பூஜை உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை மாற்றும் சம்பவங்கள், சமூக ரீதியாக நடைபெறும் மாறுதல்கள் போன்ற நிகழ்வுகளையும் காண முடிகிறது.
புத்தகத்தின் ஒரே குறையாக நான் உணர்ந்தது புத்தகத்தின் நிறைவின்மையே. ஒரு முழுமையான புத்தகமாக உணர முடியவில்லை. மேலும் புத்தகத்தின் கடைசி 60 பக்கங்கள் பல்லவ மன்னர் பரமேஸ்வரரின் நாடகத்தை படிக்கும் பொழுது புத்தகம் எப்பொழுது முடியும் என்ற அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
Goods of the book - Situational issues that are faced during Rajendra period and how sorted issues owing to raja raja that Rajendra has to face different thought explaination on behalf of rajendra - internal fight of rajendra within him - need for rajendra to change his ministers and move away from his father glory - difficulty in following the food steps of father resoning for rajendra not being given kingship rajendra love life and some emotional points
Things that I felt the book missed - losing plot - adding love story to it which didn't fit in great - war and details on the same repeatition on thoughts of rajendra - could be avoided no major mention on details of gangapuram no mention on rajendra son and other followers of him seem to have end in rush
The book helps in understanding rajendra and also seeing through the eyes of prince life lesson - happiness and peace is in the thought and deeds over what is there around
Never felt reading a complete story...always felt like reading short stories . Continuous flow on the story is missing in lot of places. Took a while to finish reading this book.