எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அத்தொடரில் வெளிவராத கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய மனிதர்களின் கதைகளை உரக்கப் பேசுபவை. தமிழ் நிலத்தைத் தாண்டி சர்வதேச நிலங்களில் ஊடாடும் மனிதர்கள் குறித்தும் இத்தொகுப்பில் இருக்கிற கட்டுரைகள் பேசுகின்றன.விவசாயம், வணிகம் எனப் பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் விழுமியங்களை முன்னிறுத்தி புதிய புரிதல்களை வாழ்வியல் ஓட்டங்களுக்கு வழங்குகிற வகையில் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரைத் தொனியில் அமையாத கதைகள் அடங்கிய தொகுப்பாக இதைப் பின்னியிரு
அன்பும் அறமும் - இன்னைக்கு எல்லாம் நவீன மாறிவிட்ட இந்த ஊர்ல வாழும் எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள், சாதியை சட்டைபோல போட்டுகொண்டு சுற்றுபவர்களின் வாழ்க்கை சிதைவு, இன்றய இளையதலைமுறையின் மனநிலை எப்படி இருக்கு, தொழிலில் கடைபிடிக்கவேண்டிய அறம் சார்ந்த விதிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.
எனக்கு பிடிச்ச சில வரிகள் அன்பும் அறமும் கட்டுரை தொகுப்பில் இருந்து;
விதம் விதமான நிறங்கள் கொண்ட ரிப்பன்களை நெற்றியில் கட்டிக்கொண்டு சாதி சார்ந்த கலவரங்களுக்குத் தயாராகித் திரியும் சண்டிக் காளைகளான அவர்களுடைய காதுகளில் சூசையண்ணனின் குரல் விழுமா? இவர்களை எல்லாம் கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்தவர்கள் யார்? விவரமானவர்கள் நூல் பிடித்து அரசியலில் மேலேறி விட்டார்கள். உடல் மதமதப்பை அடக்கத் தெரியாதவர்கள் அங்குசத்தைத் தவறவிட்ட முதிய யானைகளாக மாறி வாழ்க்கையிடம் கால்மடக்கிக் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். - கூண்டுப் புறாக்கள்!
“தேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் கேட்காதே. தேவைக்கு அதிகமான விஷயங்களை நீயும் யாரிடமும் சொல்லாதே.” -போதிமரத்து மந்திரம்!
கொண்டாட்டங்களை முன்னிறுத்திய வாழ்வு இருவரதும். தங்களுக்கு வயதே ஆகாதென நம்புகிற தலைமுறையைச் சேர்ந்த அவர்கள் - எதையும் கடத்தவர்கள்!
‘அசியா? அட்டா?’ என்பார்கள். வேறொன்றுமில்லை. அசி என்றால் தரமானது. அட்டு என்றால் டூப்ளிகேட். சோப்பை விடுங்கள். இவை பெரும்பாலும் மக்கள் ஒரே தடவை மட்டும் வந்து கூடி விட்டுச் செல்லும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படுகின்றன. திரும்பிப் போய் யாரும் புகார் அளிக்கப் போவதில்லை என்கிற தைரியம்தான் இந்தத் தொழில்களுக்குப் பின்னால் இருக்கிற முதலீடு. உடனடியாகப் பணம் திரட்டுவதற்காக எதையும் செய்யலாம், யாரையும் ஏமாற்றலாம் என்கிற மனநிலை மெல்ல மேலெழுந்து வருது. அசலையும் அட்டையும் பிரித்துப் பார்க்கிற சூட்சுமத்தை ஒரு சமூகம் தொலையக் கொடுத்துவிட்டால், திரும்பவும் பழையதை விரட்டிப் பிடிக்க பல்லாண்டுகளை பணயமாக வைக்க வேண்டியிருக்கும். பல்லாண்டுகள் என்கிற சக்கரம் சுழன்று முடிக்கையில், அதில் பல கோடி வாழ்வுகள் முடிந்து மடிந்து காணாமல் போயிருக்கும். இங்கே விலை போகாத மத்தி மீன்களே மிகச் சிறந்தவை என உலகெங்கும் சொல்கிறார்கள்.- எங்கே தொலையக் கொடுத்தோம்?
பெரியவர் ஒருத்தர் மனைவி இறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல், பிள்ளைகளுக்காகவே உழைத்து நில புலன்களை வாங்கிப் போட்டார். "இப்ப நீங்க பாக்கற ரோடெல்லாம் ஒரு காலத்தில காடா இருந்துச்சு. என் கால்ல ஏறாத முள்ளே இல்லை" என்றார். பிள்ளைகள் அவருக்குத் திருப்பிச் செலுத்தியது என்ன? அத்தனை சொத்துக்களையும் அவரிடம் மிகச் சரியாகக் கணக்குப் பார்த்து எழுதி வாங்கிக் கொண்டார்கள். - பெத்து கெட்ட வயிறுகள்!
பொருளாதார ரீதியிலாக மேலேறி வரும் சமூகம் தனது பெருமிதத்தையும் பகட்டையும் நிலத்திலும் உணவிலும் காட்டும். குடிசைகள் எல்லாம் கான்க்ரீட் வீடுகளாய் மாறும்போது முன்னே விரிக்கிற இலையின் நீள, அகலமும் கூடும். தலைவாழை இலையில் குடும்பப் பகட்டையும் பெருமிதத்தையும் பரப்பத் துவங்கிவிட்டனர். இரண்டு பொரியல், ஒரு கூட்டு போட்ட கல்யாண வீடுகள் எல்லாம் இப்போது எப்படியிருக்கின்றன என்று போய்ப் பார்த்திருப்பீர்கள்தானே? -உடலே மந்திரம்!
எதற்காக உங்களுடையது சிறந்தது என்பதற்காக இன்னொருத்தருடையது மோசமானது என விளம்பரங்கள் துவங்கி எல்லாவற்றிலும் மட்டம் தட்டுகிறீர்கள்... இதைப் போட்டால்தான் நான் சிறந்தவன் ஆவேன் என்று வழி மொழிகிறீர்கள். கடுமையான ஏற்றத் தாழ்வுகளை பொதுவெளியில் ஏன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள்? அவர்கள் மனம் புண்படாதா? மஞ்சள் பூத்த சட்டை போட்டால் அவன் திறமையில்லாதவன் ஆகிவிடுவானா? திறமையும் திறமையின்மையும் எல்லாத் தட்டிலும் இருக்கத்தானே செய்கின்றன? எதற்காக சமூகத்தில் ஆழமான பிளவு கத்தியைக்கொண்டு கீறிப் போடப்படுகிறது? - கலர்க் கனவுகள்!
“கோச்சுக்காதீங்க. எங்க ஆளுங்கள்ள ஒருத்தரே மீன் போடுறார். பத்து இருபது ரூபாய் கூடன்னாலும் அவருக்கு தொழில் கொடுக்கிற திருப்திக்காக செய்யுறோம்” -மறையும் சாம்பிராணி புகை!
“மாடு மாதிரி உழைக்கணும். மகாராஜா மாதிரி வாழணும். அப்பதான் எந்த போதையும் டேஸ்ட்டா இருக்கும்.” - பணமும் குணமும்!
எல்லாக் கூட்டமும் சொல்வதற்கென்று பெருமிதங்களைச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்துகிற விதத்தில்தான் மனிதர்கள் கடந்த பருவங்களை மறந்து தோற்றுப் போய்விடுகிறார்கள். மழை நினைத்தால் எதையும் அடித்துக் கொண்டுபோய் கடலில் போட்டுவிடும் என்பதை இப்போதுகூட உணராதவர்களாக இருந்தார்கள். மழை எப்போதும் ஒரே மாதிரி பெய்யாது. காற்று எப்போதும் ஒரே பக்கம் மட்டுமே அடிக்காது. அது மாறி மாறித்தான் அடிக்கும். காற்றின் சுழற்சிக்கு ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. - போலிப் பெருமிதங்கள்!
“முடியாட்டி விட்டுருன்னுதான் இதுவரை எல்லாரும் எங்க வீட்டில சொல்லிருக்காங்க. விரட்டிப் பிடின்னு சொன்னதே இல்லை. அதனால எதையும் விரட்டிப் பிடிக்கத் தோண மாட்டேங்குது சார். பிரச்சினைகள் வர்றப்ப தப்பிச்சுப் போயிடலாம்னுதான் முதல்ல தோணுது” - பயமென்பது ஒரு பழக்கம்!
ஒருமுறை தொழிலதிபர் ஒருத்தர் வித்தியாசமான காரணம் ஒன்றைச் சொன்னார். கட்டடத் தொழில்களுக்கு வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பெரிய பெரிய கட்டுமானங்களில் ஏறி இறங்குகிற உடல் பலத்தை இங்குள்ளவர்கள் குடியின் காரணமாக இழந்துவிட்டதும் மிக முக்கியமான காரணம் என்றார். - தள்ளாடி மேலெழும் தலைமுறை!
180 ரூபாய் கூலிக்காக எழுபது வயது மூதாட்டி காலை ஏழுமணி துவங்கி மதியம் இரண்டு மணி வரை குனிந்து நிமிர்ந்து களை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் வயதான அந்த அம்மா பேப்பர் பொட்டலமொன்றில் எதையோ எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு போனார். என்னது அது என்று கேட்டபோது, ‘பேரனுக்கு எடுத்துட்டு போறேன்’ என சங்கடமாக எடுத்துக் காட்டினார். காலையில் அந்தப் பெரியம்மாவிற்கு சாப்பிடுவதற்காக வாங்கிக் கொடுத்த ஆறு ரூபாய் மதிப்பிலான வடை அது. ஊதிய ஏற்றத் தாழ்வுகள் இந்தளவிற்கு இருப்பது நல்லதல்ல. அது நியாயமானதும்கூட இல்லை. -கூட்டாஞ் சோற்றுக் கணக்கு!
ஒரு வகையில் நவீனம் என்பதே பழமையைத் திருப்பியெடுத்துத் தட்டி ஒட்டி தூக்கிக்கொண்டு வருவதுதான். பழைய ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா அக்கா போட்டிருந்ததைத்தான் இப்போது பழாஸோ என்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். -கூடிச் சேர்க்கும் பொருள்!
சரவணன் சந்திரனின் "ஐந்து ம���தலைகளின் கதை" நாவலை 2019-ல் வாசித்தேன். 200 பக்கங்களுக்கும் குறைவான அந்த நாவலைப் படித்து முடிக்க எனக்கு பல நாட்கள் ஆகின. படிப்பதற்க்கே ஆயாசமாக இருந்தது. கொஞ்சமும் சுவாரசியமாக எனக்கு தோன்றவில்லை. ஆனாலும் பாதியில் நிறுத்த விருப்பமில்லாமல் படித்து முடித்தேன். அந்த புத்தகம் கொடுத்த பாதிப்பில், வாங்கி வைத்திருக்கும் அவரது இன்னொரு நாவலான "ரோலக்ஸ் வாட்ச்" இன்னும் வாசிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் அவரது முகப்புத்தக பதிவுகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். சுவாரசியமான பதிவுகளாக எனக்கு தோன்றின. அதனாலேயே அவரது "அன்பும் அறமும்" அபுனைவு புத்தகத்தை நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து வந்துவிட்டேன்.
ஒவ்வொரு கட்டுரையும் பிரமாதமாக இருந்தன. அவை எழுதப்பட்ட விதத்தை போலவே அவர் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட விஷயங்களும் பிரமாதம். மிக மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் அறிவுரையாக (அங்கங்கே அந்த தொனி எழுந்தாலும்) அல்லாமல் உண்மையான அக்கறையோடு பேசியிருப்பதாகவே தோன்றியது.
போதைக்கு அடிமையாகி வாழ்கையைத் தொலைத்தவர்கள், உடன் பணிபுரியும் தோழியின் பணத்தை எடுத்துவிட்டு அது குறித்த குற்றவுணர்வு கொஞ்சமும் கொள்ளாத ஐ.டி. பெண்ணைப் போன்ற இன்றைய இளைய சமுதாயத்தினர், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தொலையக் கொடுத்த ஒரு தலைமுறை, பணம் பண்ண தெரிந்திருந்தாலும் வணிகம் சார்ந்து இயங்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற புரிதல் அற்ற தலைமுறை என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அவசியமான பலவற்றைக் குறித்து அக்கறையோடு எழுதியிருக்கிறார்.
சரவணன் சந்திரன் அவர்களே புத்தகத்தில் அங்கங்கே குறிப்பிட்டிருப்பதைப் போல, சில கட்டுரைகளை வாசிக்கும் போது "இவர் ஒரு பழமைவாதி தானோ" என்று தோன்றாமலில்லை . ஆனால் அப்படியே இருந்தாலும் தவறில்லை என்ற முடிவிற்க்கே வர முடிகிறது அந்த கட்டுரைகளை முழுதாக வாசித்து முடிக்கும் போது.
பலதரப்பட்ட மனிதர்களுடனான தன் அனுபவங்களை ஆதாரங்களாக நம் முன் வைத்து, அறத்தையும் அன்பையும் நமக்கு நினைவூட்டும் (அ) கற்றுத்தர முயலும் அருமையான கட்டுரைகளின் தொகுப்பு, சரவணன் சந்திரன் எழுதிய ‘அன்பும் அறமும்’.
ஆனந்த விகடனில் தவறவிட்டவர்களுக்குப் புத்தக வடிவில்.
Kindle app-ல் படித்துப் பழக நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை முயற்சி செய்யலாம்.