1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் "நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு.
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.
பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!
இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.
டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு!
திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.
முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்
ஆசிரியை திருமதி ராஜம் கிருஷ்ணன் 1970 களில் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் அவல நிலையை இப்புதினம் வாயிலாக ஆவணப்படத்தி உள்ளார். குறைந்த ஊதியம், முதுகொடிக்கும் வேலைப்பளு, அடிப்படை வசதியின்மை, குழந்தை தொழிலாளர்கள் என இன்னும் பல பிரச்சினைகளோடு மனிதக்குலத்தாலேயே வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து வரும் உழைப்பாளிகள்தான் இதன் கதைமாந்தர்கள். அருமையான நெல்லைத் தமிழில், நிரம்பவும் இயல்பான உரையாடல்கள், ஆசிரியை அம்மாவின் ஆராய்ச்சி மற்றும் மொழி வல்லமை மெச்ச வைக்கின்றன.
இன்றைய காலங்களில், அம்மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு விட்டதா என்று பார்த்தால், பெரிதான மாற்றம் ஒன்றும் நடைபெறவில்லை. அதற்கு இணையத்தில் கண்டெடுத்த, தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களைப் பற்றிய இந்த ஆராய்ச்சிக் கட்டுரையே சான்று - https://ruralindiaonline.org/en/artic...
கரிப்பு மணிகள் எனும் உப்பும், அதன் நெடியும் நீக்கமற நிறைந்து நுகரச்செய்யும் கதைபோக்கும்., கழிமுக நில உப்புகளாலும், கடைநிலை மனிதர்களின் வியர்வை மற்றும் கண்ணீர் உப்புகளாலும் நிறைந்த நாவல். தமிழகத்தின் விளிம்பு மாவட்டங்களின் ஒன்றான வறண்ட, காற்றில் கூட ஈரப்பதமற்ற தூத்துக்குடி பகுதியில் உப்பளங்களை ஒட்டிய பகுதிகளிள்தாம் கதைக்களம். 1970களின் கடைசியில் வாழ்ந்த கரிப்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் தென்கிழக்கு சீமை பேச்சுவழக்கில், உள்ளபடியே படம்பிடித்ததாக கூறலாம்.
பின்வரும் கதைமாந்தர்களை கொண்டு, அதிலும் "பொன்னாச்சி" எனும் இளம் பெண்ணின் பார்வையில், அவர்களது வறுமை, உப்பள பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள், வர்க்க போராட்டங்கள் என மொத்தம் 24 அத்தியாயங்களில், கனத்த புனைவாக வடித்துள்ளார் கதையாசிரியர். குறிப்பாக, கதையென்று நீட்டி முழக்காமல், அதே வேளையில் திரைப்பட வடிவில் சுபம் போட்டும் முடிக்காமல், அம்மக்கள் பட்ட இன்னல்களின் ஒரு பகுதியையும், போராட்டங்களையும் படம்பிடித்துள்ளார். அம்மக்கள் வாழும் பகுதிகளில் பல கள ஆய்வுகள் செய்து, உண்மைகளின் அடிப்படையில் புனைவை சேர்த்து எழுதியிருக்கிறார் கதையாசிரியர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.
செங்கமல ஆச்சி என்ற பெயருக்கேற்ற வகையில் அக்கதைமாந்தரின் படைப்பு அமைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(சிவப்பு/கம்யூனிசம்) பொதுவுடைமை கொள்கை அக்கால நடைமுறைக்கு/கூலிமுறைக்கு எவ்வளவு தேவை என்பதை, இந்நாவலில் காட்டியுள்ள கம்யூனிச வீச்சை பார்க்கையில் உணர முடிகிறது.
இப்புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கையில், நிச்சயம் நமது இதயத்தின் கனம் கூடுவதை உணரலாம்.
நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களுக்கு பின்னாலும் பல மனிதர்களின் உழைப்பு புதைந்துள்ளது. எங்கோ யாரோ ஒரு மனிதன் தன் வாழ்வை மகிழ்வாக கடக்க உதவும் அப்பொருட்களை உருவாக்க எங்கோ சில மனிதர்களின் இன்பங்கள் முற்றிலுமாக பறிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அத்தியாவசயமான ஒரு பொருளின் உற்பத்தியும், அதன் பின்னால் இருளுக்குள் மறைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கதை தான் இந்த கரிப்பு மணிகள் நாவல்.
அளவில் சிரிதானாலும் நம் உணவின் சுவையிலும், உடலின் ஆரோக்கியத்திலும் பெரும் பங்கு வகிப்பது உப்பு. எனக்கு நினைவு தெரிந்த வரை உப்பு பொட்டலங்கள் கடைகளுக்கு வெளியே கேட்பாரற்று மூட்டை மூட்டையாக வெயில் மழை என்று பாராமல் குவிந்து கிடக்கும். என் அம்மாவிடம் அதனை யாராவது களவாடி சென்று விடுவார்களே? என்று கேட்டால் எனக்கு கிடைக்கும் பதில் "உப்ப திருடுனவ உறுப்புடாம போயிருவான் ", ஆனால், சற்று விவரம் தெரிந்த நாள் முதல் உப்பின் விலையை அறிந்த உடன், இந்த விலை மளிவான பொருளுக்கு இவ்வளவு தான் மரியாதை என்று எண்ணினேன். ஆனால் அந்த உப்பு எங்கிருந்து வருகிறதேன்றோ, எப்படி தயாரிக்க படுகின்றதென்றோ நான் யோசித்ததில்லை. உப்பின் மேல் எனக்குள் ஒரு பெரும் ஒளி வீச்சை வீசியது உப்புவேலி புத்தகம் தான். அன்றிலிருந்து உப்பையும் அதனை சார்ந்த மக்களை பற்றிய புத்தகத்தை தேடி பார்த்ததில், மிக குறைவாகவே கண்ணில் பட்டன. அந்த தேடலில் கிடைத்த ஒரு மாணிக்கம் தான் இந்த கரிப்பு மணிகள்.
இந்த கதை முழுக்க பொன்னாச்சி என்ற ஒரு இளம் பெண்ணை சுற்றியே நகர்கிறது. அவள் பார்வையின் வழியே தூத்துக்குடி உப்பளத்தின் கூலிகளின் வாழ்வை நம் கண்முன் நிகழ்த்தி காட்டியுள்ளார் ஆசிரியர். முதலில் தான் தாயை இழந்து மாமன் வீட்டில் வசிக்கும் அவளை தன் சின்னம்மா மருதாம்பாள் அவள் தந்தை கண்ணுசாமி ஊருக்கு அழைத்து சென்று அங்கு ஒரு அளத்தில் வேலைக்கு சேர்த்து விட, அவள் உடலாலும், உள்ளத்தாலும் பெரிதளவு பாதிக்க பட, அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த அளத்தில் வேலை செய்யும் ராமசாமி தான், இருவருக்கும் திருமண பேச்சு நடக்க, அவள் சின்னம்மா உப்பு மில்லில் பெல்ட்டில் சிக்கி உயிர் துறக்க அதனை சாலை விபத்து என்று முதலாளிகள் உண்மையை விழுங்கி விட,அந்த சோகத்தில் தந்தையும் இறந்து விட, தன் உடன் பிறந்த சிறு சிறு பிள்ளைகளுடன் பொன்னாச்சியின் வாழ்வு தான் இந்த கதை.
இது ஒரு தனி மனிதனின் கதையோ, ஒரு குடும்பத்தின் கதையோ அல்ல இது நாம் கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு சமூகத்தின் கதை. இன்றைய நவீன உலகில் எத்தனையோ இயந்திரங்கள் வந்து உப்பளத்தின் நிலை மாறியிருக்கலாம், ஆனால் இந்த கதையை நாம் வாசிக்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கும் வாசித்து காட்ட வேண்டும். திரை தீண்டலில் எல்லாமே நம் காலடியில் வந்து விழும் இந்த உலகில் தான் ஒரு படி அரிசிக்காகவும், ஒரு கிழியாத சேலைக்காகவும், ஒரு நாளின் ஒரு வேலை உணவிற்காகவும், வயது வித்தியாசமின்றி, விடுப்பு இன்றி, எந்த வித சலுகைகளும் இன்றி, கண் பார்வை இழந்து, கால்களில் சீழ் வழியும் கொப்பளங்களுடன், பனை ஓலைகளை செருப்பாக அணிந்து தங்கள் வாழ்க்கை முழுக்க உழைத்து உழைத்து இறுதியில் அந்த விரிசல் விட்ட வறண்ட வெண்மையான பூமியில் ஒரு கரும்புள்ளியாக மறைந்து போகின்றனர்.
நமக்கு உப்பின் வெண்மையில் எந்த குறையும் இருந்து விட கூடாது. ஆனால் அந்த வெண்மையான உப்பு பூமியில் தங்கள் கால்களாலும் கைகளாலும் வாழ்வின் பெரும் பகுதியை உப்பு காற்றோடும், மணலோடும், மழுங்கிய விழிகளோடும், கறுத்து காச்சிய பாதங்களோடும், பசியோடும், பட்டினியோடும் வண்டி வண்டியாக உப்பு மூட்டைகளை இந்த உலகிற்கு தந்த அந்த மனிதர்களின் வாழ்வு இறுதி வரை இருள் மட்டுமே சூழ்ந்ததாகவே இருந்து விட்டது.