சமாதானத்தின் கதை ❤️
•
ஜேகேயின் கொல்லைப்புறத்தை தாண்டிய எழுத்தில் பதினொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே இந்த சமாதானத்தின் கதை. புதுமையான எழுத்தும், எழுத்தின் சுவாரசியமும் ஒரே நாளில் என்னை வாசித்து முடிக்க வைத்துவிட்டது. சமூகத்தின் ஒவ்வொரு விழுமிய விம்பத்தையும் சூழல் சந்தர்ப்பங்களும் காலக்கட்டாயமும் தத்தம் கைகளாலே போட்டு உடைக்கும் நிலையினை ஒவ்வொரு கதையும் பேசிச்செல்கிறது.
•
‘கனகரத்தினம் மாஸ்டர்’ என்ற முதல் கதை சாதி மற்றும் பெண்கள் என்ற கருவில் வேரோடினாலும் தன் சொந்த ஊரில் மதிக்கப்படும் ஒருவன் அகதி நிலத்தில் இருக்கும் நிலையையும் காட்டிச் செல்கிறது.
•
‘உஷ். இது கடவுள்கள் துயிலும் தேசம்’ - வித்தியாசமான கதை சொல்லல், வெவ்வேறு காலப்பகுதியில் நிலவும் கதை விறுவிறுப்பாக நகரும். இறுதியில் ஒரு சிறு குறிப்பு. கண்கள் முட்டி கன்னம் நனைக்கும் குறிப்பு.
•
‘தூங்காத இரவு வேண்டும்’ கதை குடும்பம், நோய், அன்பு என்ற அச்சில் சுழல்கிறது.
‘விசையறு பந்து’, ஆணாதிக்கத்தின் அருவருப்பை நோக்கி எறியப்படுகிறது. மனதை உறுத்தும் எழுத்து.
‘சமாதானத்தின் கதை’ - ஊரின் அங்கமாய் யாரென்றே தெரியாத ஒருவனின் கதை.
•
‘நகுலனின் இரவு’ அதிகாரத்திற்கும் ஆற்றாமைக்கும் இடையிலான போராட்டத்தையும் அதிகாரத்திற்கும் அறத்துக்கும் இடையிலான மாறாட்டத்தையும் விடியலுக்குக் கொண்டுசெல்கிறது.
•
‘மறைசாட்சி’ - அகதி வாழ்வின் அவலம், போர் வடுவின் உளவியல் தாக்கம், தனிமை, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் என வெளிநாடு சென்ற உறவுகளின் துயர் கலந்த நிலையைப் படம் போட்டுக் காட்டும் கதை.
•
‘வெம்பிளி ஒப் ஜப்னா’ ஒழுங்கை விளையாட்டுக்களும் ஒழுக்கங்களும். ‘விளமீன்’ ஒரு ஆசை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பது பற்றிய சிறப்பான கதை.
•
இவற்றை விட ‘சந்திரா என்றொருத்தி இருந்தாள்’ மற்றும் ‘சைக்கிள்கடைச் சாமி’ என பதினொரு கதைகளும் பதினொரு கரம்கொண்டு மனதைப் பிடித்து இழுக்கின்றன. வாசித்து முடித்த பின்னரும் ஏதோ ஒரு உறுத்தல் மனதைத் தொற்றிக்கொள்கிறது.