An agro-meteorologist by profession, Dr Lakshmi Nandan Bora (15 June 1932 – 3 June 2021) was an Indian novelist and short story writer in the Assamese language, known for over 60 books he has authored, including award winning novels, Patal Bhairavi and Kayakalpa. A recipient of Sahitya Academy Award (1988), Assam Valley Literary Award (2004) and Saraswati Samman (2008), Bora was honoured by the Government of India in 2015 with Padma Shri, the fourth highest Indian civilian award.
He was a former professor of physics and agro-meteorology and chairman of the Assam Pollution Control Board, and edited the widely circulated Assamese weekly Goriyoshi.
நீரோட்டம் போல் வாழ்வு ###################### கதை நடக்கும் பகுதி, இந்தியா சுதந்திரம் பெற்று சிலகாலமே ஆன வருடங்களில், ரோடு வசதிகள் மெதுவாக வந்து சேரும் அஸ்ஸாமின் சோனாய் நதி பாயும் பராக் பள்ளத்தாக்கு. இன்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பெரும் மருத்துவமனைகள், மற்றும் விமானநிலையம் ஒன்று கூட வந்துவிட்ட சில்ச்சாரின் சோனாய் அல்ல அது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல படகுகளையும் , மாட்டு வண்டிகளையும் மட்டுமே நம்பி இருந்த காலம் அது. சுதந்திர இந்தியாவின் தார்ச் சாலைகள் மெதுவாக கிராமங்களுக்குள் நீண்டு, மக்களின் வாழ்விலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படுத்தப்போகும் பெரும் மாற்றங்களுக்கு அச்சாரம் போட்ட காலமும் அதுதான்.
பிரம்மபுத்திரா, மற்றும் அதன் துணை நதிகளின் கரையில் வாழ்ந்து, அவற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தோடு காலகாலமாக மல்லுக்கட்டி வாழ்வு நடத்தும் எளிய அஸ்ஸாமிய நதிப்படுக்கை மக்களின் வாழ்வு இன்று வரை ஒரு தள்ளாட்டம் தான். அடிக்கடி பெரும் வெள்ளம் வந்து, மக்கள் பயிர் செய்து வாழ்ந்து வந்த நிலங்கள் நதியின் புதிய நீர்ப்போக்கில் மூழ்கி, நிலப்பரப்பே மாறிவிடும் நிலையில் மக்களின் வாழ்வு ஒரு பெரும் போராட்டமாகவே எப்போதும் இருக்கிறது.
வாசிக்க ஆரம்பித்தவுடன், அந்த எளிய கிராமத்து மக்களின் வாழ்வும், நம்பிக்கைகளும், அந்த நிலப்பரப்பின் அழகும் நம் கண்முன் விரிகிறது. எளிய மக்களான தனஞ்சயன், வாசந்தி, தருலதா, போக்ராம் இவர்களின் வாழ்வில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் சோனாய் ஆற்றின் வெள்ளம் போலவே எப்படி அலைக்கழிக்கிறது, அந்த மாற்றங்களோடு எப்படி அவர்கள் போராடி துயர் வெள்ளத்துக்கு பின்னான வாழ்வை தகவமைத்துக்கொள்கின்றனர் என்று ஆற்றில் படகில் ஏற்றி துடுப்புப் போடும் படகோட்டி போல கதை நம்மை அழைத்துச்செல்கிறது.
அந்த வகையில் ஆரம்பித்தவுடன் ஒரு வித அசட்டையுடன் வாசித்துச்சென்ற என்னை லட்சுமி நந்தன் போராவின் கதைசொல்லும் பாங்கு என்னை பிரமிக்க வைத்து உள்ளிழுத்துக்கொண்டது. போரா, அஸ்ஸாமிய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அந்த மொழியில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சாகித்திய அகாடமி விருதும், பத்மஸ்ரீ விருதும் வாங்கியவர். கோவிட் காலத்தில் துரதிர்ஷ்ட வசமாக உயிரிழந்தவர்களின் அவரும் ஒருவர்.
அதைவிட முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இந்த கதை சொல்லும் நடையை இழந்துவிடாமல், அதன் எளிமையான அழகை சிதைத்துவிடாமல், வாசிப்பவர்களுக்கு இது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வே எழாமல், அமைதியான நீரோட்டம் போல் கொண்டு சேர்க்கும் துளசி ஜயராமனின் உழைப்பும் மொழியும். துளசி ஜெயராமனைப் பற்றி அதிகம் விவரம் கிடைக்கவில்லை. ஆனால் NBT ன் வேறு பல புத்தகங்களின் மொழிபெயர்ப்பை இவர் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது.
வாசித்து முடித்த பின்பு கண்ணைமூடி எண்ணிப்பார்க்கும் போது, இதன் மொத்த அழகு, மனதுக்கு நிறைவான ஒரு உணர்வை வந்து உட்காரவைத்து விடுகிறது.