புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். "எழுதித் தீராப் பக்கங்கள்" செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். "எழுதித் தீராப் பக்கங்கள்"வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது. ஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.
’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (ஜூன் 30, 1953) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் ஜூன் 30, 1953-ல் சவரிமுத்து - திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி (St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.
செல்வம் 1975-ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, சுந்தர ராமசாமி, ஜானகிராமன் ஆகியோரை இலக்கிய முன்னோடிகளாக கருதுகிறார். செல்வம் தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதிய எழுதித்தீரா பக்கங்கள் என்னும் நூல் அதன் இயல்பான நகைச்சுவையால் புகழ்பெற்றது. தொடர்ந்து அதன் அடுத்த பகுதியான சொற்களில் சுழலும் உலகம் நூலையும் எழுதினார்.
புலம்பெயர் வாழ்க்கையில் இரண்டு சிற்றிதழ்களை நடத்தினார். குமார் மூர்த்தி என்னும் நண்பருடன் இணைந்து அவர் தொடங்கிய காலம் சிற்றிதழ் முப்பதாண்டுகளாக கனடா டொரொண்டோ நகரில் இருந்து வெளிவருகிறது. ஈழத்து இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் காலம் வெளியிட்ட சிறப்பிதழ்கள் இலக்கிய ஆவணங்களாகும்.
பார்வை சஞ்சிகை (1987-1989) (ஆசிரியர்) (Montreal, Canada) காலம் சஞ்சிகை (1990 - Present) (Toronto)
யாழ்ப்பாணத் தமிழிலே புலம்பெயர் அனுபவங்களை ஓர் அங்கதச் சுவையுடன் சொல்லும் அருமையான நூல். வழமையாக நாவல்களாக இல்லாத புத்தகங்கள் ஓர் அளவுக்கு மேல் தொடராக வாசிக்கும்போது சுவாரசியத்தை இழந்துவிடும்.
அதற்கு மாறாக இந்தப்புத்தகமோ இறுதி ஒற்றை வரை சிரித்து சிரித்து வாசிக்க வைக்கிறது. ஆனால் யோசிக்கும்போது அவ் வரிகளுக்குள் மறைந்திருக்கும் சோகம் மனதை உறுத்துகிறது.
புலம்பெயர் வாழ்வை அனுபவிக்காது விட்டாலும் புலமைப் பரிசிலில் போய் அதை வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற நண்பர்களுடன் இருந்தவன் என்ற ரீதியில் இந்தப் புத்தகம் நெருக்கமாக இருந்தது.
தமிழன் ஊரில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் போய் என்னென்ன செய்துள்ளான் என்பதை சிரிக்கச் சிரிக்க அறிய அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன்.
"நாளையிலிருந்து.. என் பெயர் அகதி.." -புத்தகத்திலிருந்து
இடர்கள் நிறைந்த இடத்திலிருந்து துளிர்விடும் இலக்கியங்கள் ஆகா சிறந்தவை.இந்த ஈழத்திலக்கியம் புலம்பெயர் வாழ்க்கையின் சாரத்தை உணர்தவல்லது. வெளிநாடென்றால் சொர்கம் என்னும் மாயையை விலக்கும் முதல் தலைமுறையின் அனுபவங்கள் இவை.சமீப காலமாக அனுபவ கட்டுரைகள் மீதான ஈர்ப்பின் காரணமாக இந்த புத்தகத்தை தேர்வுசெய்தேன்.
பிழைப்பிற்காக பாரிஸ் வந்தடையும் ஒருவரது அனுபவங்களை பகடியாக எடுத்துரைக்கும் நூலிது.புத்தகம் முழுவதும் ஈழத் தமிழ் தோணியிலே எழுதப்பெற்றது வாசிப்பிற்குப் புது அனுபவத்தையும் அழகையும் அளித்தது.சில இடங்களில் பொருள்கொள்ள கடினமாக இருந்தாலும் ஈழத் தமிழ் மொழிநடையில் பேசுவதுப்போன்ற அனுபவம் அளித்தது மட்டுமல்லாமல் புலம்பெயர் அனுபவங்களையும் எளிதில் விளங்குமாறு செய்தது தனிச்சிறப்பு.
மொழி,பழக்கம்,உணவு என முற்றிலும் மாறுப்பட்ட ஒரு நாட்டில் பிழைக்கும் ஒரு கூட்டத்தின் கதைகளும் திண்டாண்டங்களும் அடங்கியவை இந்த கட்டுரைகள்.வறுமையில் இருந்தாலும் இடையில் கிட்டும் சிறு இன்பங்களும் உதவும் மனப்பான்மையும் சிந்திக்கத்தக்க சம்பவங்கள். இடையிடையே பாரிசிலிருந்து ஈழத்திற்கு செல்லும் கதைக்களம் இரு வேறு கலாச்சாரத்தின் வித்தியாசங்களை செவ்வனே சித்தரித்துள்ளது.அகதியாக இல்லாமல் பிழைப்பிற்காக வந்து அகதியாக வாழும் நம் உறவினர்களின் கதையே இது.
பாரிஸில் இருந்தவாறு அவ்வப்போது ஆசிரியர் நினைவுகூரும் யாழ்பாணக் காற்றும்,மாத கோவில் தெருவும், தேங்காய் சம்பலும் தாய் மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கு கணத்தை ஏற்படுத்தும்.இலங்கை போர் சமயங்களில் யாழ்ப்பாணத்திற்கும் பாரிசிற்குமாக வந்து போகும் உறவினர்களின் தகவல்களை,போர் நிலவரங்களை,இழப்புகளை கூறும் அத்தியாயங்கள் துயரத்தின் உச்சம்.
திருட்டுத்தனமான மெட்ரோ பயணங்களை கூறுமிடத்தில் "செக்கிங் இல்லாத பிரயாணம் அமைந்தால் வெகுவிரைவில் சமத்துவ உலகம் உருவாகும் என எண்ணினேன்" என்று அவர் கூறுமிடத்தில் இருக்கும் வெகுளியும்..
"ஆண்ட பரம்பரைத் தமிழன்,மீண்டு பலமுறை புரண்டு எழுவதற்கு எதைக் குடிப்பது, எதைத் தவிர்ப்பது என்று தெரியவில்லை" என்று பாரிஸ் காட்டிய எல்லையில்லா குடியிற்கும்..
"மாதாவினுடைய மகனே வேலையில்லாமல் யூத முதலிமாருடனும் குருக்களுடனும் கொழுவிக்கொண்டு அன்பும் இரக்கமும் என ஆட்களும் சேர்த்துக்கொண்டு திருஞ்சவர். அவருடைய மாதவிட்டைப் போய் வேலை கேட்டால்..அம்ம்மாமா சாத்தானே அப்பாலே போ! எனக் கத்துவா"என சிரிக்கும் இடத்திலும் புலப்படும் நகைச்சுவையும் ஒளிந்திருக்கும் வறுமையும் பிரிவுமே புத்தகத்தின் உயிர்நாடி.