உலகாண்ட வெள்ளை வல்லாதிக்கப் பெரும்படைக்கு, கமுதி குண்டாற்றங்கரையிலும் சாயல்குடி பனங்காட்டிலும் மண்டபசாலை தோப்புக்குள்ளும் விளாத்திகுளம் வைப்பாற்று புதை மணலுக்குள்ளும் குருதிச் சடங்கு செய்தவன் ‘பெருநாழி ரணசிங்கம்’. பீரங்கிகளால் வெல்ல முடியாத பெருநாழி ரணசிங்கம், வெள்ளையனின் கைக்கூலியான உறவுக்காரன் வெட்டிவைத்த சதிக்குழிக்குள் வீழ்த்தப்படுகிறான்.
ரணசிங்கத்தின் நாலு வயது ஊமை மகன் துரைசிங்கமும் தங்கை அரியநாச்சியும் கப்பலேற்றி நாடு கடத்தப்படுகிறார்கள். மலேசியக் காடுகளில் இறங்கும் ஊமையன் துரைசிங்கத்திற்கு, உஸ்தாத் அப்துற் றஹீம், வில், வேல், வாள் வித்தைகளை கற்பித்து மிருகம் ஆக்குகிறார்.
தகப்பனை கொன்ற சதிக்கு பழிதீர்க்க, தேசம் திரும்புகிறான் ஊமையன்.
ஆப்பநாட்டு காவல் தெய்வமான பெருநாழி ரணசிங்கத்தின் நிழலாய் இருந்த நாவிதன், இருட்டு கோடாங்கி ‘தவசி’யும் தவசியின் மகள், காட்டுப் பூங்கொடி ‘செவந்தி’யும் காத்திருக்கிறார்கள் காட்டுக்குள்.
வந்திறங்கிய ஊமையன் துரைசிங்கம், வைக்கோல் பிரி சுற்றி ஆடிய ஆட்டமே, ‘குருதி ஆட்டம்’. - வேல ராமமூர்த்தி.
புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயத்தின் பக்கங்கள் திரும்ப திரும்ப விருவிருப்பாகவும், இறுதி அத்தியாயங்களை நெருங்க திக் திக் என மனதில் பதற்றத்தையும் உருவாக்குகிறது ‘குருதி ஆட்டம்’.
-கலைச்செல்வன் செல்வராஜ்